
இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் கோரிக்கை அடிப்படையில் அழைப்பாளர்களை அடையாளம் காணும் சேவையை வழங்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI – டிராய்) பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் உங்கள் ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டையில் உள்ளபடி, நீங்கள் அழைக்கும் அனைவருக்கும் உங்கள் பெயரைக் காட்ட முடியும். Calling Name Presentation – CNAP என குறிப்பிடப்படும் இந்தச் சேவை நீங்கள் அழைக்கும் எவருக்கும் உங்கள் பெயரைக் காண்பிக்கும்.
தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பயனர்கள் பதிலளிக்க விரும்புவதில்லை என்றும், அத்தகைய வசதி இல்லாததால் உண்மையான அழைப்புகளை பயனர்கள் தவறவிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் டிராய் கூறுகிறது. இந்த சேவை ஸ்பேம் அழைப்புகளால் எழும் சிக்கலை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த அழைப்பாளர் அடையாள அமைப்பில், தனியுரிமை(Privacy) சிக்கல்கள் இருப்பதையும் புறந்தள்ளிவிட முடியாது. ஏனென்றால், ஸ்பேமை கையாள்வதற்காக அனைத்து தொலைத் தொடர்பு பயனர்களின் தனியுரிமையையும் மீறுவது சரியா என்ற கேள்வி எழுகிறது.
அதேநேரம், ட்ரூகாலர் போன்ற மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்கள் ஏற்கனவே இதே போன்ற அம்சங்களை வழங்குகின்றன. அவற்றின் தரவு துல்லியம் இல்லாமல் இருக்கலாம். எனவே, ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்க உதவும் வகையில், அழைப்பாளரின் பெயரைப் பார்க்க பயனர்களுக்கு உதவும் புதிய அம்சத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமே கொண்டுவருகிறது.
இந்த அம்சங்களைக் கொண்டுவருவதற்கான காரணம் என்னவென்றால், சமீபத்திய ஆண்டுகளில், அறியப்படாத எண்களிலிருந்து வரும் ஸ்பேம் செய்திகள் மற்றும் அழைப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளது. அனைத்து ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும், தெரியாத அழைப்பாளர்கள் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதைத் தடுக்க, அழைப்பாளர் அடையாள அமைப்பு அதாவது Calling Name Presentation – CNAP திட்டம் மூலம் தீர்வு காண TRAI தீர்மானித்துள்ளது. ட்ரூகாலரைப் போலவே, நீங்கள் அழைப்பைப் பெறும்போது அழைப்பவரின் பெயரைக் இதுகாட்டும்.
CNAP எப்படி வேலை செய்கிறது? என்றால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிம் கார்டு பதிவின் போது சந்தாதாரர்கள் வழங்கிய விவரங்களை CNAP திட்டத்துக்குப் பயன்படுத்துவார்கள். அதாவது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர் பெயர்களை தொலைபேசி எண்களுடன் இணைக்கும் தரவுகளை கொடுப்பார்கள். ஒரு அழைப்பு வரும்போது, அழைப்பவரின் பெயரை அடையாளம் காண இந்த தரவுத்தளத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்தும். அரசாங்கத்தில் பதிவு பெற்ற வணிக நிறுவனங்களின் பெயர், பதிவு அடிப்படையில் அழைப்பின்போது காண்பிக்கப்படும். சந்தாதாரர் கோரிக்கையின் பேரில், அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் CNAPஐ ஒரு அம்சமாக வழங்க வேண்டும்.
பயனர்கள் தரும் தகவல்களை ட்ரூகாலர் நம்பியுள்ளது, மறுபுறம் சிஎன்ஏபி தரவுத்தளம் சிம் கார்டு பதிவின் போது வாடிக்கையாளர் விண்ணப்ப படிவத்தில் வழங்கப்பட்ட தகவல்களிலிருந்து பெறப்படுகிறது. CNAP தரவுத்தள தகவல் பதிவு, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்றுகள் மூலம் சரிபார்க்கப்படுகிறது. ட்ரூகாலருக்கு KYC செயல்முறை இல்லை, ஆனால் CNAP தரவு KYC செயல்முறை மூலம் பெறப்படுகிறது. ட்ரூகாலரின் தரவு அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால் CNAP தரவு சிம் கார்டு பதிவு செயல்பாட்டின் போது சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களிலிருந்து பெறப்படுவதால், அரசால் இது அங்கீகரிக்கப்படுகிறது.
பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அழைப்பாளர் அடையாள முறைக்கான சோதனைகளை மும்பை மற்றும் ஹரியானாவில் தொடங்கிவிட்டன. தற்போது அழைப்பாளர் ஐடி சேவை, 4 ஜி / 5 ஜி பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். சி.என்.ஏ.பி. சேவைகளைத் தொடங்க ஜூலை 15 வரை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அரசாங்கம் அவகாசம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry