சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாபு முருகவேல் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையை, எம்பி-எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 21. 11. 2023 அன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற தனியார் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “ஜெயலலிதா மறைந்த பிறகு அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன என்று தெரியாமல் இருந்தனர். 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ள விரும்பினார்கள். இதனை அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடத்தில் சொன்னதாகவும், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் பேசியிருந்தார்.
Also Read : நீங்க Hard Worker or Smart Worker? வெற்றிக்கான சிம்பிள் டிப்ஸ்! இனி எல்லாமே சக்ஸஸ்தான்!
அவரின் இத்தகைய பேச்சு அஇஅதிமுகவுக்கும், அதன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மன உளைச்சலையும், நற்பெயருக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியதைக் கருத்தில் கொண்டு, அஇஅதிமுகவின் செய்தி தொடர்பாளர், அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவின் மாநில இணை செயலாளர் மற்றும் அஇஅதிமுகவின் சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் என்ற அடிப்படையில், பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் விளக்கம் கேட்டும், அவர் சொன்ன கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்றும், மானநட்டமாக ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் எனவும் பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
ஆனால், நோட்டீஸை பெற்றுக் கொண்ட அப்பாவு எந்த விதமான பதிலும் தராமலும், சொன்ன கருத்தை திரும்பவும் பெறாமலும் இருந்ததன் அடிப்படையில், எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பாபு முருகவேல் சார்பில் அவர் மீது மானநட்ட வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கு அங்கு கோப்புக்கு எடுக்கப்படாத நிலையில், அதன் மேல்முறையீடாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அங்கும் வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாத சூழலில், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், மனுதாரர் பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை தொடரும்படி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. மனுதாரரான பாபு முருகவேல் நேரில் ஆஜராகி பிரமாண வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு, வழக்கிற்கான எண் கொடுத்தார். பிறகு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியதுடன், விசாரணையை வருகின்ற 7. 8. 2024க்கு ஒத்தி வைத்தார். மேலும் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry