
இந்திய கிரிக்கெட் அணித்தேர்வைத் தீர்மானிப்பவர்கள் வீரர்களின் பி.ஆர் நிறுவனங்கள்தான் என்று (Public Relations Agencies) குற்றம்சாட்டியுள்ள மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, வீரர்கள் இத்தகைய ‘லாபி’யின் மூலமே தேர்வு செய்யப்படுகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவிடம் 3-1 என இந்தியா தோற்றதைத் தொடர்ந்து, சுற்றுப்பயணங்களின் போது வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) கடுமையான நெறிமுறைகளை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுற்றுப்பயணங்களின்போது வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை பிசிசிஐ கட்டுப்படுத்த உள்ளதாகவும், 45 நாட்களைக் கொண்ட சுற்றுப்பயணத்தின் போது குடும்ப உறுப்பினர்கள் 14 நாட்களுக்கு மேல் வீரர்களுடன் இருக்க முடியாது என்றும் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “இந்திய அணிக்கு பிசிசிஐ பரிந்துரைக்கும் மாற்றங்களை பார்க்கும் போது, எவ்வளவு நம்புவது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டிய ஒரு விதியை நான் பரிந்துரைக்க வேண்டியிருந்தால், அது குழு உறுப்பினர்கள் பி.ஆர் ஏஜென்சிகள் வைத்திருப்பதை கண்டிப்புடன் தடை செய்வதாக இருக்கும்” என்று ஹர்ஷா போக்ளே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Reading of the changes the BCCI is apparently suggesting for the Indian team. I don’t know how much to believe but if I had to nominate one rule to be strictly applied, it would be to ban team members from having PR agencies
— Harsha Bhogle (@bhogleharsha) January 15, 2025
வீரர்கள் தங்களுக்கென்று, அதுவும் குறிப்பாக ஸ்டார் வீரர்கள் தங்களுக்கென்றே மக்கள் தொடர்பு முகவர்களை (பி.ஆர் ஏஜென்சிஸ்) வைத்துக் கொண்டு, தங்களைத் தாங்களே புரொமோட் செய்து வருகின்றனர். இதற்கு சோஷியல் மீடியா பயன்படுத்தப்படுகிறது. பிசிசிஐ-யின் அதிகாரபூர்வ ஒளிபரப்பாளர்களே இந்த பி.ஆர் வேலைகளைச் செய்வதுதான் பிரச்சினை. ஏனெனில் மக்கள் இந்த ஒளிபரப்பு ஊடகங்களை நம்புகின்றனர். Rhiti Sports, Cornerstone Sport & Entertainment, Celebrity Management Group (CMG) போன்ற நிறுவனங்கள் முக்கிய இந்திய வீரர்களுக்கு பிஆர் வேலையை செய்கின்றன.

அணியின் ஸ்டார் வீரர்களுக்கு சொம்பு தூக்கும் வேலைகளைச் செய்வது இந்த பி.ஆர். ஏஜென்சிகளே. ரசிகர்கள் மத்தியில் விராட் கோலியோ, ரோஹித் சர்மாவோ, ஷுப்மன் கில்லோ, கே.எல்.ராகுலோ போன்றோர் அணிக்கு இன்றியமையாதவர்கள் என்ற பிம்பத்தை பி.ஆர். ஏஜென்சிகள் உருவாக்குகின்றனர். அமெரிக்க சமூக சிந்தனையாளர் நோம் சாம்ஸ்கி கூறுவது போல், ஊடகங்கள் ஸ்டார் பிளேயர்களின் பி.ஆர்.களாகச் செயல்பட்டு ‘Manufacturing Consent’ செய்கின்றனர். இதனால் அணித்தேர்வுக்குழுவினர் அவர்களை நீக்குவதற்கு அஞ்சுகின்றனர்.
உள்நாட்டு கிரிக்கெட் தான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான கட்டாய அளவுகோல் என்பதெல்லாம் வெறும் பீலா என்பது சாம்பியன்ஸ் டிராபி அணித்தேர்வில் பட்டவர்த்தனமாகியுள்ளது. துபாயில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி அணிக்கு ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. ஏனெனில், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் ஷுப்மன் கில் அதிபட்சமாக 40 ரன்களைக் கூட கடக்கவில்லை. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 5 ஓவர்கள் கூட பேட் செய்யவில்லை. இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் இவர் விளையாடத் தகுந்தவரா என்பது கேள்விக்குறியாகிறது.

டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ரவி சாஸ்திரி – விராட் கோலி – வர்த்தக லாபி கூட்டணி கருண் நாயரை வெளியேற்றியது. ஆனால் அவர் விடாமுயற்சியுடன் உள்நாட்டு குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெளுத்து வாங்கி வருகிறார். நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் அவரது சராசரி பிரமிப்பூட்டும் வகையில் 700+ என்பது எப்படி அணித்தேர்வுக்குழுவின் பார்வையிலிருந்து தப்ப முடியும்? என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து அகார்க்கர் என்ன கூறினார்? ‘15 வீரர்கள்தான். எல்லோரையும் எடுக்க முடியாது’ என்றார். இதே அடிப்படையில்தானே விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் தேர்வும் மேற்கொள்ளப்பட வேண்டும்? ஒரு பக்கம் உள்நாட்டு கிரிக்கெட் ஆடுவது கட்டாயம் என்பது, அப்படி கட்டாயமாக ஆடி வரும் கருண் நாயர், சர்பராஸ் கான் போன்றவர்கள் எவ்வளவு ரன்களைக் குவித்தாலும் அவர்களை எடுப்பதில்லை. இப்படி இருந்தால் பிசிசிஐ மீது உள்நாட்டு கிரிக்கெட் ஆடும் வீரர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?
அதனால்தான் ஐபிஎல் கிரிக்கெட்டை நோக்கி அவர்கள் படையெடுக்கின்றனர். உள்நாட்டுக் கிரிக்கெட் ஆடாமல் ஐபிஎல் ஆடக்கூடாது, தடை விதிப்போம் என்பதெல்லாம் எதேச்சதிகார பாசிச செயல்பாடே. ‘லாபி’ வீரர்களுக்கு எங்கு செக் வைக்க வேண்டும் என்பதை ஹர்ஷா போக்ளே தெளிவாக்கியுள்ளார். அணி வீரர்கள் பி.ஆர் முகமைகளை வைத்துக் கொள்வதை பிசிசிஐ தடை செய்ய வேண்டும் என்ற ஹர்ஷா போக்ளே பரிந்துரையை நடைமுறைப்படுத்தினால் மாற்றங்கள் தானாக வரும்.
Image Courtesy : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry