
கேனில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ளது. பெருநகரங்களில் மட்டுமே வழக்கத்தில் இருந்த இந்தப் பயன்பாடு, கிராமங்களிலும் அடர்த்தியாக ஊடுருவியுள்ளது.
குடிநீரைப் பாதுகாப்பான முறையில் எப்படி அருந்துவது என்பது குறித்து மக்களிடையே பரவலாக விழிப்புணர்வு இருந்தாலும், குடிநீர் கேன்களை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா என்பது தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், பலமுறை மறு உபயோகம் செய்யப்படும் கேன்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.
கேன்கள் மட்டுமல்லாமல், வீடுகளில் நாம் கேன் குடிநீரை ஊற்றி வைக்கப் பயன்படுத்தப்படும் ‘பப்பிள் டாப்’ (bubble top) எனப்படும் கேனையும் நாம் சுத்தமாகப் பராமரிக்கிறோமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒரு தண்ணீர் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது; அழுக்கடைந்த, கீறல் விழுந்த கேன்களை மக்களுக்கு விநியோகிக்கக் கூடாது; நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்டிருந்த கேன்களை விநியோகிக்கக் கூடாது; குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்துவது அவசியம் போன்றவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. விதிகள் கூறுவது என்ன?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், பாட்டில்கள் உள்ளிட்டவற்றில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் நீர் ‘அதிக ஆபத்தான உணவுப் பட்டியலில்’ சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக, அதிக மாசுபாடு அடைவதற்கு வாய்ப்புள்ள உணவுப் பொருட்கள்தான் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படும்.
கடந்த 2024 அக்டோபர் மாதம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, “அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் தண்ணீருக்கு பி.ஐ.எஸ். தரச் சான்றிதழ் (Bureau of Indian Standards (BIS) அவசியம்.
Also Read : ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கணும்? உடலுக்கு தண்ணீர் தேவையை எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா?
மேலும், கேன் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது அல்லது பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக, அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்திருக்க வேண்டும். அந்த நிறுவனங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மூன்றாம் தரப்பு நபர்களால் மறு ஆய்வு நடத்தப்பட வேண்டும்.”
கேன் குடிநீர் பாதுகாப்பானதா?
வீடுகளில் கேன் குடிநீரைப் பயன்படுத்துவோர் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் ஏற்படும் ஆபத்துகள் என்ன? கேன் குடிநீர் பாதுகாப்பானதுதான் என உறுதி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதை அறிந்திருக்க வேண்டும்.
நமக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் கேனில், BIS, FSSAI ஆகியவற்றின் தர உரிமம் இருக்கின்றதா, காலாவதியாகும் நாள், பேட்ச் எண் ஆகியவை இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு சில வாட்டர் கேன்கள் தவிர பெரும்பாலானவற்றில் இவை இருப்பதில்லை.
கேன் குடிநீரில் தேவையில்லாத பொருட்கள், தனிமங்களை வெளியேற்ற அவற்றை வடிகட்டுவதற்கு 5-6 முறைகள் உள்ளன. அதிலுள்ள ஆபத்தான நுண்ணுயிரிகளை நீக்குவதற்குப் புற ஊதா கதிர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் யூ.வி. முறை, கனிமங்கள், உப்பு, பிற அசுத்தங்களை நீக்க ஆர்.ஓ. (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்) எனப்படும் சவ்வூடு பரவல் முறை, மைக்ரான் ஃபில்டர் உள்ளிட்ட முறைகள் உள்ளன.
ஆனால், பெரும்பாலும் ஏதேனும் ஒருமுறையில்தான் கேன் குடிநீர் வடிகட்டப்படுகிறது. எனவே, எந்தெந்த முறையில் அந்தக் குடிநீர் வடிகட்டப்பட்டுள்ளது என்பதை நுகர்வோர் அறிந்துகொள்ள வேண்டும். மேலும், கேன் குடிநீரை விநியோகிக்கும் நிறுவனம் உரிய உரிமம் பெற்றுள்ளதா என்பதையும் சோதிக்க வேண்டும்.
Also Read : சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பீங்களா? உடனே நிறுத்துங்க! இல்லைன்னா, இந்த பாதிப்புகள் எல்லாம் வரும்..!
டிடிஎஸ் அளவு ஏன் முக்கியம்?
குடிநீரைப் பொருத்தவரை அதன் தரம் டிடிஎஸ் (TDS – Total Dissolved Solids) எனப்படும் மொத்த கரைந்த திடப்பொருட்களின் அளவை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இதன் அளவுதான், அந்தக் குடிநீரில் ஆபத்தான எஃகு, ஆர்செனிக், ஃபுளூரைடு உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் எவ்வளவு உள்ளன என்பதை வெளிப்படுத்தும்.
பி.ஐ.எஸ். தர நிர்ணயத்தின்படி டிடிஎஸ் அளவானது ஒரு லிட்டருக்கு 500 மி.கி என்ற அளவுக்கு மேல் இருக்கக்கூடாது. எனினும், டிடிஎஸ் இல்லாமலேயே இருந்தால் அந்தக் குடிநீரில் கனிமங்களே இல்லை என அர்த்தம் என்கிறது ‘கன்ஸ்யூமர் வாய்ஸ்’ எனும் என்ஜிஓ அமைப்பு.

குறைவான அளவில் டிடிஎஸ் இருந்தால் அந்த நீரில் சுவையே இருக்காது என அந்த அமைப்பு கூறுகிறது. “பெரும்பாலான கேன் குடிநீரில் இதன் அளவு ஒரு லிட்டருக்கு 100 மி.கி என்ற அளவிலேயே இருக்கும்.
கேன் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில், கேன்கள் பெரும்பாலும் வெயிலிலேயே இருப்பதால், அதில் வேதிவினை விரைவாக நிகழ்ந்து BPA (Bisphenol A – பிஸ்பெனால் ஏ) எனப்படும் நிறமற்ற திடப்பொருளான வேதியியல் சேர்மம் உருக வழிவகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடல்நலப் பிரச்னைகள்
“இந்த பிளாஸ்டிக் குறிப்பாக நாளமிலா சுரப்பிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால், உடல் பருமன், இதய நோய்கள், விந்தணுக்கள் குறைவது, தைராய்டு, நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். குடிநீர் கேன் மட்டுமே இந்த உடல்நலப் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம் எனச் சொல்லவில்லை. ஆனால், இந்தப் பிரச்னைகளுக்கான சூழலியல் காரணங்களில் இது முக்கியமானதாக உள்ளது” என்கிறார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர்.
கேன்களை சரியாகக் கழுவாமல் இருக்கும்போது, இ.கோலி, லியோஜெனெல்லா, சால்மெனல்லாசிஸ் ஆகிய பாக்டீரியாக்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இவற்றைத் தடுக்க கேனிலேயே தண்ணீரை வைத்து பயன்படுத்தாமல், கேன் வாங்கியதுமே அதை அலுமினிய குடங்கள் அல்லது பானைகளுக்கு மாற்றலாம் என்றும், பப்பிள் டாப்-ஐ குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தப்படுத்தி உபயோகிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
Image Source : Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry