
அகில இந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளரும் (AIFETO – ஐபெட்டோ), தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஏப்ரல் 24, 25ல் சட்டப்பேரவையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆற்றிய உரையும், விவாதங்களுக்கு அளித்த பதிலும் மகிழக் கூடியதாக இருந்தது.
பள்ளிகளை மூடுகின்ற அலுவலர்களின் அநீதி எண்ணத்திற்கு மாறாக, புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்குகிற அறிவிப்பை வரவேற்கிறோம். பத்தாண்டு கால அண்ணா தி.மு.க. ஆட்சியில், ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பாகவும், தனித்தனியாகவும் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். தற்போது மு.க.ஸ்டாலின் அரசிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் யதார்த்தமான உண்மையாகும்.
Also Read : மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனி தேர்ச்சி சதவிகிதம்! மனநல மருத்துவர்கள் ஆலோசனை!
இதற்கு சாட்சியாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசிய காணொளியினை ஆசிரியர்கள் போட்டு, போட்டு கேட்கிறார்கள். ஆற்றாமையின் காரணமாக அனைவரையும் கேட்கச் செய்கிறார்கள். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நியமனத் தேர்வை உடன் இரத்து செய்து விடுவோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தினை உடன் அமல்படுத்துவோம். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு உடன் தீர்வு காண்போம். ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவோம். பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்கள்.” ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இதனை எப்படி மறப்பார்கள்?
மறைந்த முதலமைச்சர் கருணாநிதி கால கல்வி கட்டமைப்பு விதிகளை புறந்தள்ளி பெருத்த பண இழப்பினையும் தற்போது ஏற்படுத்தி வருகிறார்கள். தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பொறுப்பு, பதவி உயர்வு இல்லாத பதவி என அறிவித்து, தேர்வு நிலை தர ஊதியம் ரூ.5400 என, தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுச் சென்ற நிதித்துறை முதன்மைச் செயலாளர்கள் இருவர் காலத்தில் அரசாணை வெளியிட்டு அமல்படுத்தப்பட்டு வந்தது. எவ்வித பாதிப்பும் இல்லாமல் 80 விழுக்காடு தலைமை ஆசிரியர்கள் பணப்பயனுடன் பணிநிறைவு பெற்றுவிட்டார்கள்.
தற்போதோ, பள்ளிக்கல்வித்துறை துணைச் செயலாளர் ஒருவரின் கடிதத்தினை மேற்கோள்காட்டி, 10 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்ய வேண்டுமென மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு ஓய்வூதிய கோப்பு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. தந்தை கருணாநிதி கொடுத்தார், மகன் முதலமைச்சர் ஆன காலத்தில் அதிகாரிகள் பறிக்கிறார்கள்.

முன்பிருந்த அனைத்து ஆட்சிக் காலத்திலும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் முன்னுரிமைப் பட்டியல் பேணப்பட்டு வந்தது. அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றதற்குப் பின்னர் இதனை, அரசாணை 243ஐ வெளியிட்டு, ஒன்றிய அளவில் முன்னுரிமை என்றிருந்ததை மாநில அளவில் என மாற்றி அமல்படுத்திவிட்டார்கள். இதன்மூலம் 80 விழுக்காடு பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வினை பாதிக்கச் செய்துள்ளார்கள்.
இந்த அரசாணையினை திரும்பப் பெற வலியுறுத்தி போராடி வருகிறோம். பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது, அரசாணை 243ஐ திரும்பப் பெறுவது பற்றி பரிசீலிக்கும் முடிவில் உள்ளோம் என்றுகூட அமைச்சர் தெரிவிக்கவில்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நாங்கள் செய்யாமல் வேறு யார் செய்யப் போகிறார்கள் என்று மானியக் கோரிக்கையின்போது இதயத்தைத் தொடும் வார்த்தைகளால் அமைச்சர் மகிழ வைக்க முயற்சித்தார்.
கங்காரு தன் குட்டியை வயிற்றில் வைத்து பாதுகாத்து வருவது போல், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இதயத்தில் வைத்து போற்றி பாதுகாத்து வருவதாக அமைச்சர் பேசி வருகிறார். இது பிரபல நடிகர் ஒருவரின் காமெடியை நினைவுபடுத்துகிறது. “நாங்கள் செய்தாலும், எதையும் செய்யாவிட்டாலும், அவர்கள் எங்களை விட்டு போகமாட்டார்கள். எங்களை இன்னமும் நல்லவங்க என்று தானே பாராட்டி வருகிறார்கள்” என்பதுபோலத்தான் அரசின் செயல்பாடு உள்ளது. ஏப்ரல் 30ந் தேதிக்குள், சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் உரிய தீர்வை அறிவிப்பாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.
பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருந்தாலும், ஆசிரியர் இயக்கங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படக்கூட இல்லை என்பது வேதனையளிக்கிறது. உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது, கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் தயக்கமின்றி அமைத்திடுவோம் என்ற அறிவிப்பு இதயங்களை குளிரச் செய்கிறது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry