
4.30 Mins Read : ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்…! புதுவை அரசியலில் இந்தப் பெயர் திடீரென அடிபடத்தொடங்கியிருக்கிறது. இந்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் யார், இவரது குடும்பப் பின்னணி என்ன? என்பதை மேலோட்டமாக பலரும் அறிந்திருப்பார்கள். சாண்டியாகோ மார்ட்டின் – ஜான்குமார் – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடர்பு பின்னணி?
சற்று விரிவாகப் பார்க்கலாம். லாட்டரி கிங் சான்டியாகோ மார்ட்டின் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர். மியான்மரில் (பர்மாவில்) ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்த மார்ட்டின் இந்தியா திரும்பிய பின், 1980ல் தேநீர் கடை நடத்துகிறார். பிறகு, தனது 26 வயதில் ‘மார்ட்டின் லாட்டரி ஏஜென்சி லிமிடெட்’ என்ற லாட்டரி கம்பெனியை 1988-ஆம் ஆண்டு திறக்கிறார். அதே ஆண்டில் லீமா ரோஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு முதல் லாட்டரி சீட் அச்சடித்து விற்கும் தொழிலைத் தொடங்கினார்.

விற்பனையாகாத லாட்டரிகளை வெற்றி பெற்றதாக அறிவிப்பதில் தொடங்கி, போலி லாட்டரிகளை அச்சடித்து விற்பது, லாட்டரி தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கள்ளத்தனமாக லாட்டரி விற்பது, இரண்டு இலக்க லாட்டரி, ஆன்லைன் லாட்டரி என்று சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் உழைக்கும் மக்கள் பணத்தை மார்ட்டின் சுரண்டினார் என்பது பரவலாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, பஞ்சாப் என பல மாநிலங்களில் தனது லாட்டரி சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் மார்ட்டின். அதாவது லாட்டரி தடை செய்யப்பட்ட மாநிலங்களில் மறைமுகமாகவும், அனுமதி உள்ள மாநிலங்களில் நேரடியாகவும் விற்பனை செய்து வருகிறார்.
லாட்டரியின் மூலம் ஹவாலா பணத்தையும், கருப்புப் பணத்தையும் வெள்ளையாக மாற்றுவது, வருமானவரி முறைகேடுகள் என்று சகலவிதமான பொருளாதாரக் குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. லாட்டரி மட்டுமின்றி ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களையும் தொடங்கி மார்ட்டின் குழுமம் என்ற பெயரி்ல் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தையே கட்டியமைத்து நடத்திவருகிறார். மார்ட்டின் குழுமத்தின் கீழ் சுமார் 300 இணை நிறுவனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இவரின் அசுர வேகத்தில் அன்றைய தமிழக லாட்டரி விற்பனையாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். பூட்டான், நேபாளம் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் லாட்டரி சாம்ராஜ்யத்தை மார்ட்டின் விரிவுபடுத்தினார். ஆண்டுக்கு ரூ. 15,000 கோடி வருமானம் ஈட்டுவதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டும் அளவிற்கு சான்டியாகோ மார்ட்டின் விஸ்வரூபம் எடுத்துள்ளார். இவரது குழும வருமானம், புதுச்சேரி மாநிலத்தின் ஓராண்டு பட்ஜெட்டை விட அதிகம் என்று கூறப்படுகிறது.
2019 முதல் 2024 வரை, 1368 கோடி ரூபாய் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் மார்ட்டின் நிதி கொடுத்துள்ளார். இது கணக்கில் காட்டப்பட்ட தொகை மட்டுமே. குடும்பத் தொழிலில் ஏற்படும் சிக்கல்களை சமாளிப்பதற்கு அரசியல் ஆதரவு மட்டும் போதாதது, நேரடியாகவே அரசியல் களம் காண வேண்டும் என விரும்பிய மார்ட்டின் குடும்பம், முதலில் மார்ட்டின் மனைவி லீமா ரோஸை களமிறக்கியது.

எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் நடத்தும் இந்திய ஜனநாயக கட்சியில் லீமா ரோஸ் மாநில இணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். தேர்தல் வியூக வகுப்பாளர் என அறியப்படும், மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா(டெய்சி மார்ட்டின் கணவர்) திமுக, விசிக என மாறி தற்பொழுது விஜய் கட்சியான த.வெ.க.வில் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் என்ற முக்கிய பொறுப்பில் உள்ளார். மார்ட்டினின் இளைய மகனான டைசன், தமிழர் விடியல் கட்சி என்ற அமைப்பைத் துவங்கி, திருமுருகன் காந்தியின் மே-17 இயக்கத்துடன் செயல்படுகிறார்.

இந்நிலையில், மார்ட்டின் குடும்பத்தின் மூத்த வாரிசான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜகவில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே இணைக்கப்பட்டார். இதன்பிறகுதான் திருப்பம் ஆரம்பிக்கிறது. புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ.வான ஜான் குமாரும் சுமார் 30 ஆண்டுகளாக லாட்டரி தொழிலில் இருப்பவர். எனவே, மார்ட்டினும், ஜான்குமாரும் தொழில்முறை நண்பர்கள்.

தற்போது ஜான்குமாரும், அவரது மகன் ரிச்சர்டும் பாஜக எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். அரசியலில் சறுக்கலை சந்திக்கத் தொடங்கியுள்ள ஜான்குமார், மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸை அணுகி அவரை புதுச்சேரி அரசியலுக்கும் வருமாறும், அதற்கான களத்தை ஏற்படுத்தித் தருவதாகவும் கூறியுள்ளார். மட்டுமல்லாமல், புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் செய்வது மிகவும் எளிது, பணத்தை மட்டும் செலவழித்தால் போதும், புதுச்சேரி முதலமைச்சராக்குவதாக தூபம் போட்டுள்ளார். தன்னுடன், தனது மகன் மற்றும் நான்கு எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்று அவர்கள் வாயிலாகவும் ஜோஸ் சார்லசுக்கு முதலமைச்சர் ஆசையை தூண்டியுள்ளார்.
மார்ட்டின் குடும்பத்துக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல என்ற நிலையில், முதலமைச்சர் பதவியை வாங்கிவிடலாம் என்ற அலாதி ஆசையில், புதுச்சேரி அரசியலில் களமிறங்க ஜோஸ் சம்மதித்துள்ளார். ஆனால், புதுச்சேரி அரசியல் களம் வித்தியாசமானது மட்டுமின்றி, மார்ட்டின் குடும்ப நடைமுறைக்கு, குறிப்பாக ஜோஸ் சார்லசுக்கு ஒத்துவராது என்பதே உண்மை.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எப்பொழுதும் பல அடுக்கு பாதுகாப்பில் உள்ளவர். அவரை அவ்வளவு எளிதில் யாரும் அணுகிவிட முடியாது. அவரைச் சந்திக்க வேண்டும் என்றால், அவரது தனிப்பட்ட பாதுகாவலர்களின் அனுமதி பெற்று, பல கட்ட சோதனைகளைத் தாண்டித்தான் சந்திக்க வேண்டும். புதுச்சேரியில் அரசியல்வாதியாக இருக்க முதல் தகுதியே, சம்பந்தப்பட்ட தலைவரை அல்லது மக்கள் பிரதிநிதியை மிக எளிதில் அணுக முடிய வேண்டும். தங்களது இல்ல, சுப துக்க நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கெடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
எவ்வளவு பணம் கொடுத்தாலும், பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல வரவில்லை என்றால், கட்சி நிர்வாகிகளானாலும் தொண்டர்களானாலும் சட்டென விலகிச் சென்றுவிடுவார்கள். இதுதான் புதுவை அரசியலின் கள யதார்த்தம். பல ஆயிரம் கோடி சொத்து மதிப்புள்ள ஒருவர், பல நாடுகளில் வியாபாரம் செய்யும் ஒருவர், எப்படி எளிதாக வலம் வருவார், கட்சியினரை சந்திக்க எப்படி அனுமதிப்பார்? பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள அவர்கள் ஒருக்காலும் விரும்பமாட்டார்கள்.
அதுமட்டுமல்ல, சிறிய மாநிலமோ, பெரிய மாநிலமோ, முதலமைச்சர் பொறுப்பு என்பது அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது. அது விலைகொடுத்து வாங்கும் பொருளல்ல. மக்களோடு மக்களாக இறங்கி, எளிய நிர்வாகியாக அவர்களின் சுக துக்கங்களில் தோள்கொடுக்க வேண்டும். தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமி முகூர்த்த நாட்களில், காலை தொடங்கி நடு இரவு வரை கூட குறைந்தது 75 நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.

புதுச்சேரியின் கள யதார்த்தத்தை சொல்லாமல், தனது சுயநலனுக்காக ஜோஸ் சார்லஸ் மார்ட்டினிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை முதலமைச்சர் கனவில் மிதக்கவிட்டுள்ளார் ஜான்குமார். நெல்லித்தோப்பு, காமராஜர் நகர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்பதால், தொகுதி மாற அவர் முடிவு செய்துள்ளார்.
வேறு தொகுதிக்கு இடம்மாறி இலவசங்களை வாரி இறைக்க தேர்தல் வரை அதிக நிதி தேவைப்படும். மேலும் தேர்தலின்போது தனக்கும் தனது மகனுக்கு தேர்தல் செலவுக்காக பெருந்தொகை தேவைப்படும். இதற்கு தான் செலவு செய்வதற்கு பதில், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினிடம் இருந்து பணத்தை கறக்கலாம் என்பதே ஜான்குமாரின் கணக்கு என அவரது ஆதரவாளர்களே கூறுகின்றனர். அதாவது ஜான்குமாரை பொறுத்தவரை தனது குடும்பத்துக்கான அரசியல் ஸ்பான்சர் ஜோஸ் சார்லஸ் என்றும் அவர்கள் கண் சிமிட்டுகின்றனர்.

அதேநேரம், சில தினங்களுக்கு முன் புதுச்சேரியில் நடந்த படுகொலைச் சம்பவம், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குடும்பத்தாரிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சார்லஸ் மார்ட்டினின் பிறந்தநாளான கடந்த 27ந் தேதி, அவரது புதுச்சேரி அரசியல் நுழைவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில், காமராஜர் நகர் தொகுதிக்கு உள்பட்ட கருவடிக்குப்பத்தில் பிரம்மாண்ட விழாவுக்கு ஜான்குமார் ஏற்பாடுகளை செய்தார். இதற்கான உதவிகளை ஜோஸ் சார்லஸ் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பிறந்தநாள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி பாஜக இளைஞரணி முன்னாள் தலைவரும், ஜான்குமாரின் தீவிர ஆதரவாளருமான உமாசங்கர் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி நடக்க இருந்த மண்டபத்தின் வாயிலிலேயே சரித்திரப் பதிவேடு குற்றவாளியான உமாசங்கர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பிறந்தநாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பிறந்த விழா நடைபெறவிருந்த இடத்திலேயே உயிர்ப் பலி நடந்துள்ளதால் மார்ட்டின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளதாகவும், இதை அபசகுணமாக கருதுவதாகவும் தெரிகிறது.

பல ஆயிரம் கோடி சொத்து இருக்கும் நிலையில், பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துகொண்டு ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று மார்ட்டின் குடும்பத்தினர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. கள யதார்த்தை மறைத்து முதலமைச்சர் ஆசையை காட்டிய ஜான்குமார் மீது மார்ட்டின் குடும்பம் கடுமையான அதிருப்தியில் உள்ளதாம். அரசியலுக்காக பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் வேண்டாம் என்பதால், புதுச்சேரி அரசியல் பிரவேசத்தை கைவிடுவது என மார்ட்டின் குடும்பத்தினர் முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது.
இதனால் ஜான்குமார் தரப்பு பெரும் கலக்கத்தில் உள்ளதாம். ஜோஸ் சார்லஸ் வந்துவிடுவார், நமக்காக பணம் செலவழிப்பார் என்ற தைரியத்தில், தான், தனது மகன் ரிச்சர்ட் மட்டுமின்றி மேலும் 4 எம்.எல்.ஏ.க்களை முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராகவும், மாநில பாஜக நிர்வாகிகளுக்கு எதிராகவும் கொம்பு சீவிவிட்டுள்ளார் ஜான்குமார். அரசியல் எதிரிகளை மன்னிக்கும் பழக்கம் இல்லாத ரங்கசாமி, கல்யாண சுந்தரத்தை தவிரத்து ஜான்குமார் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ.க்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது உறுதி என என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry