
ஒரு முறை தான் அரிதாகவே செல்லும் ஒரு கோவிலுக்குச் செல்ல கடவுள் தீர்மானித்தார். பூசாரியின் கனவில் தோன்றி, “நான் நாளை கோவிலுக்கு வருகிறேன்” என்று அவர் கூறினார். கோவில்களில் பக்தர்கள் தண்ணீரை ஊற்றுவார்கள், பிரசாதங்களை ஆங்காங்கே போடுவார்கள், இங்கேயும் அங்கேயும் பூக்கள் கிடக்கும், காய்ந்த பூக்களும் காணப்படும்.
எனவே அந்தப் பூசாரி, கோவிலைச் சுத்தம் செய்யத் தொடங்கினார். மேலும் ஊர் மக்களிடம், “இன்று கடவுள் கோவிலுக்கு வரப்போகிறார்” என்று கூறினார். கோவிலுக்கு வரும் மக்கள் கூட அவர் சொன்னதை நம்பவில்லை. “பூசாரிக்கு என்ன நேர்ந்தது?” என்று அவர்கள் பரிதாபப்பட்டார்கள்.
அவருக்கு ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவைப்படலாம். ‘கடவுள் கோவிலுக்கு வரப்போகிறார்’ என்று மிகவும் விசித்திரமாக ஏதோ சொல்கிறார். எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறிச்சென்றனர். சிலருக்கு அவர் மீது இரக்கம் ஏற்பட்டு, மனநல மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.
ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பூசாரி எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பூக்களைக் கொண்டு வந்தார். கோவிலை அலங்கரித்தார். பின்னர் அவர் காத்திருந்தார், காத்திருந்தார்.., காத்திருந்தார்.., காத்திருந்தார்…! மாலை ஐந்து மணி, ஆறு மணி, ஏழு மணிக்குப் பிறகு… அவருடன் இருந்த உதவிப் பூசாரி, “நீங்கள் பைத்தியக்காரர்” என்றார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டதா? என பூசாரியை ஊக்கமிழக்கச் செய்யத் தொடங்கினார்.
பூசாரி சொன்னதை வைத்து முதல் சில தருணங்களில் மக்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்தது, பின்னர் நேரம் செல்லச் செல்ல, எல்லோரும் அவர் சொன்னை ஏற்க மறுத்தனர். எல்லோரும் திட்டி விமர்சித்ததால், பூசாரியே ஒரு கணம் நிலைதடுமாறு ஒருவேளை தான் சொன்னது தவறுதானா? என்று நினைத்தார்.
அவர் தன்னைத்தானே சந்தேகிக்கத் தொடங்கினார். “ஒருவேளை எனக்கு மாயத்தோற்றம் அல்லது பிரமை இருந்திருக்கலாம். அது உண்மையல்ல.” என நினைத்தாலும், கடவுள் வரலாம் எனஅற நினைப்பில், பதினொரு மணி வரை விழித்திருந்தார். கொஞ்சம் தேநீர் குடித்தார். பன்னிரண்டு மணி வரை விழித்திருந்தார், பின்னர் தூங்கிவிட்டார்.
நள்ளிரவில், யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கடவுள் கூட பகலில் வர பயப்படுகிறார். யாராவது அவரைக் கைது செய்து தண்டிக்கலாம், இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தலாம். “ஏன் எனக்கு இப்படிச் செய்தாய்?” என்று பல கேள்விகள் கேட்கலாம். ஆகவே அவர் நள்ளிரவில் வர விரும்பியிருப்பாரோ என்று எண்ணினார். மீண்டும் அவர் கதவைத் தட்டும் சத்தத்தைக் கேட்டார். பின்னர் பூசாரி எழுந்து, தனது உதவியாளரிடம், எனக்கு கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. ஒருவேளை கடவுள் வந்திருக்கலாம் என்று சொல்ல விரும்பினார்.
அவருடன் அதே அறையில் தூங்கிக் கொண்டிருந்த உதவிப் பூசாரி, அவரைத் திட்டி தூங்கச் சொன்னார். “இந்த வேடிக்கையான எண்ணங்களை விட்டுவிட்டுத் தூங்குங்கள். இல்லையென்றால், நான் இப்போது மனநல மருத்துவமனைக்கு போன் செய்யப் போகிறேன். இது மிகவும் அதிகம்” என்றார். இதைக் கேட்டதும் பூசாரி தூங்கிவிட்டார்.
காலையில் கோவிலின் கதவைத் திறந்தபோது, கால்தடத்தையும், தேரின் சக்கர அடையாளத்தையும் கண்டார். பூசாரி மிகவும் வருத்தப்பட்டார். கடவுள் உண்மையில் வந்து கதவைத் தட்டியிருக்கிறார், ஆனால் இவர் தவறவிட்டுவிட்டார். பூசாரி மிகவும் பரிதாபமாக உணர்ந்தார்.

இது ஒரு நல்ல கதை. இதுதான் எப்போதும் நடக்கிறது. கடவுள் ஒவ்வொரு நொடியும் உங்களை அழைக்கிறார். அவர் உங்கள் மூலம் பாடுகிறார். பறவைகளின் ஒலிகள் மூலமாகவும், சிறிய விலங்கு, உயிரினம், அதன் குரல் மூலமாக உங்களை எழுப்புகிறார், பாருங்கள் எவ்வளவு அழகாக, “கூ கூ” என்று ஏதோ சொல்கிறது. அது முழு சூழ்நிலையையும் நிரப்புகிறது.
நீங்கள் அதை ஆழ்ந்து கேட்டால், உங்கள் இதயம் ஒளிரத் தொடங்குகிறது. உங்களுக்குள் ஏதோ நடக்கிறது. நீங்கள் மேலும் உயிர்ப்புடன் மாறுகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் அன்பு பெருகுகிறது. காலையில் பறவைகள் பாடுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? பறவைகளின் குரலில் உங்களுக்காக கடவுள் பாடுகிறார். அவர் ஒவ்வொரு காலையிலும் உங்களை எழுப்புகிறார். ஆனால் நாம் அவரைத் தவற விடுகிறோம்.
நம் மனதில், நம் கருத்துகளில், நம் எண்ணங்களில் நாம் அவரைத் தவறவிட்டுவிட்டோம். கடவுள் நம் உடைகளுக்குள் பொருந்த வேண்டும் என்று விரும்புகிறோம். “நீங்கள் இப்படிப்பட்ட உடையுடன் வர வேண்டும்” என்று கூறுகிறோம். நம் கருத்துகளுக்குள், நம் எண்ணங்களுக்குள், கடவுள் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்ல நினைக்கிறோம், அந்த எண்ணத்திற்குள் அவர் பொருந்த வேண்டும் என்று நினைக்கிறோம். இருப்பதை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லை.
கடவுள் எங்கும் நிறைந்தவர், ஆனால் ஒரு பக்தன் அரிதானவன். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். கடவுள் கல்லில் இருக்கிறார், பூக்களில் இருக்கிறார், குப்பைத் தொட்டியில் இருக்கிறார். கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். ஆனால் ஒரு பக்தன் எல்லா இடங்களிலும் இல்லை. ஆகவே கடவுள் தன் பக்தர்களின் பின்னால் ஓடுகிறார்.
கடவுளுக்கு, பக்தர்கள் மிகவும் பிரியமானவர்கள். ஒரு நபர் இந்த பூமியில் தெய்வீக அன்பில் முழுமையாக மலரும்போது முன்னோர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இறந்துபோன எல்லா மக்களும், அவர்களின் ஆன்மாக்கள், அவர்களின் இருப்புகள், மகிழ்ச்சியாலும், கருணையாலும், ஆனந்தத்தாலும் நிரம்புகின்றன. அவர்கள் ஆனந்திக்கிறார்கள்.
உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொரு துளி நன்றியுணர்வும் உங்கள் முன்னோர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. பூமியை விட்டுச் சென்றுவிட்ட அந்த எல்லா மக்களையும் பற்றி நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் தாத்தா, பாட்டி மற்றும் கொள்ளு தாத்தா – பாட்டி மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினரை நினைக்கிறீர்களா? உங்கள் முழு குடும்ப மரபும் நீங்கள் இந்த அன்பை அனுபவிக்கும்போது, நீங்கள் வாழும்போது, நீங்கள் ஒரு பக்தனாக இருக்கும்போது மகிழ்ச்சியடைகிறது. அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள். நீங்கள் விடுவிக்கப்பட்டால், நீங்கள் சுதந்திரம் அடைந்தால், கடந்த ஏழு தலைமுறைகளும், எதிர்கால ஏழு தலைமுறைகளும் விடுவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry