
கோடை வெயில் நாளுக்கு நாள் நம்மை வாட்டி வதைத்து வருகிறது. வெயில் தாக்கத்தை சமாளிக்க நாம் பெரும்பாலும் தர்பூசணி, மோர், இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் குடிப்பது வழக்கம். கொளுத்தும் வெயிலில் ஒரு கிளாஸ் ஜூஸ் குடிப்பது சோர்வு குறைந்து உடலை குளிர்விக்கும்.
குறிப்பாக இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் அருந்தினால் ஒருவித திருப்தி கிடைக்கும். கோடையில் மட்டுமல்ல எப்போது இவற்றைப் பருகினாலும் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். கோடை சீசனில் இளநீர், கரும்பு ஜுஸ் இந்த இரண்டில் எது சிறந்தது என்பதை பார்க்கலாம்.
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சோர்வை போக்கவும், வெப்பத்தைத் தணிக்கவும், உடலை குளிர்ச்சியாக வைக்கவும் உதவும் பொருட்கள் மீது மக்களின் கவனம் திரும்பி உள்ளது. பெரும்பாலானோர் கோடை காலத்தில் இளநீர் மற்றும் கரும்பு ஜூஸை அருந்துகிறார்கள்.
Also Read : ஆல்கஹாலைவிட உங்கள் கல்லீரலை மோசமாக பாதிக்கக்கூடிய 5 ஜூஸ்கள்..! அதிர்ச்சி ரிப்போர்ட்..!
கோடை சீசனில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
கரும்புச் சாற்றில் கால்சியம், தாமிரம், மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் பொட்டாசியம் உள்ளன. கரும்பு ஜூஸ் முற்றிலும் இயற்கையானது மற்றும் இதை பருகியவுடன் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. இந்த ஜூஸ் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற உதவுவதோடு, கல்லீரலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது.
குறிப்பாக கோடை மாதங்களில் கரும்பு ஜூஸ் குடிப்பது வெப்பத்தை தணிக்க உதவும் வகையில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது, மேலும் இதை குடிப்பது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. கரும்பு ஜூஸில் காணப்படும் இயற்கை பொருட்கள் நம் சருமத்தைப் பளபளப்பாகவும், நம் உடலை ஹைட்ரேட்டாகவும் வைத்திருக்க உதவுகின்றன. கரும்பு ஜூஸில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கோடை மாதங்களில் கவலையளிக்கும் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும் உதவும்.

கரும்பு ஜூஸில் பாலிசாக்கரிடின் என்ற பொருள் உள்ளது. இது இரத்தத்தை மெலிதாக்க உதவுகிறது. இது இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. எனவே, மாரடைப்பு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. ஆனால், உங்களுக்கு காயம் ஏற்பட்டால் ரத்தம் நிற்காது என்ற பிரச்சனை இருந்தால், கரும்பு சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நீரிழிவு நோயாளிகள் கரும்புச் சாற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் 240 மி.லி. கரும்புப் பாலில் சுமார் 50 கிராம் சர்க்கரை உள்ளது. இது 12 தேக்கரண்டி சர்க்கரைக்குச் சமம். கரும்புச் சாறு மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை (GI) கொண்டுள்ளது. கிளைசெமிக் சுமை (GL) மிக அதிகமாக உள்ளது. எனவே, இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்.
கோடை சீசனில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
இளநீரில் வைட்டமின்கள், மினரல்கள், எலக்டோலைட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது, இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இளநீரில் உள்ள கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நரம்புகளை புத்துணர்ச்சியோடு வைக்கவும் உதவுகிறது.
இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதுடன், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கின்றன. இளநீர் குடிப்பது உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும், உடல் எடையை பராமரிக்கவும், செரிமானம் மற்றும் சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பயன் உள்ளதாக இருக்கும். தினமும் இளநீர் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். மேலும் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கலாம்.
Also Read : இளநீருக்குள் தண்ணீர் எப்படி செல்கிறது தெரியுமா? 90 சதவிகிதம் பேருக்கு தெரியாத ரகசியம் இதுதான்!
வெயில் சுட்டெரிக்கும் கோடை காலங்களில் இளநீர் குடிப்பதால் நம் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாது. மேலும் அசிடிட்டி பிரச்சனையை குறைக்கவும் உதவுகிறது. குறிப்பாக காலை நேரத்தில் எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது எடையை கட்டுப்படுத்தவும் உதவும், ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாக உள்ளன. இவை தவிர ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும் இளநீர் உதவுகிறது.
ஒரு சிலருக்கு இளநீரை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்றுப் பொருமல், வயிற்றுப்போக்கு போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இளநீரில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது இரத்தத்தில் பொட்டாசியம் அளவுகள் அதிகரிக்கலாம்.
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அல்லது ஏதேனும் மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்பவர்கள் இளநீரை உணவு முறையில் சேர்த்துக் கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. மேலும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்காக தினமும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களும் மருத்துவரின் ஆலோசனை இன்றி இளநீரை குடிக்கக்கூடாது. ஏனெனில் இளநீர் இரத்த அழுத்தம் மருந்துகளுடன் குறுக்கிடலாம்.

இளநீர் அல்லது கரும்பு ஜூஸ் இரண்டில் எது நல்லது?
இவை இரண்டுமே கோடை சீசனில் எண்ணற்ற நன்மைகளை நமக்கு தருகின்றன. எனவே உங்கள் தேவைகளுக்கு ஏற்ப இரண்டில் ஒன்றை தேர்வு செய்து நீங்கள் தொடர்ந்து பருகி வரலாம். இல்லை என்றால் இரண்டு பானங்களில் ஒன்றை மாற்றி மாற்றியும் பருகி வரலாம். உங்களுக்கு உடனடி ஆற்றல் தேவைப்பட்டால், நீங்கள் கரும்பு ஜூஸ் குடிக்கலாம். அதுவே உங்கள் உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்ள விரும்பினால், நீங்கள் இளநீர் குடிக்கலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry