Guru Peyarchi 2025: கடகம் முதல் கன்னி வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 2

0
150
Learn about the Astrological Impact of Guru Peyarchi 2025 for Kadagam (Cancer), Simmam (Leo), and Kanni (Virgo). Understand the transit's influence on these zodiac signs. Image - Gemini AI.

இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும், ஏழாம்பார்வை தனுசு ராசியிலும், ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது.

இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது. இதனை கணித்தவர் ஜோதிட முனைவர் கே.பி. வித்யாதரன். Part – 1ல் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கான குருபெயர்ச்சி பலன்களை பார்த்துவிட்ட நிலையில், அடுத்த மூன்று ராசிகளுக்கான பலன்களை தெரிந்துகொள்வோம்.

Also Read : Guru Peyarchi 2025: மேஷம் முதல் மிதுனம் வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 1.

கடகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

எங்கும் எதிலும் புதுமையையும், புரட்சியையும் செய்யக்கூடிய நீங்கள் உழைப்பால் உயரும் உத்தமர்கள். (திருக்கணிதப்படி) மே 14 முதல், உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். இதுவரை லாப ஸ்தானமாகிய 11-ம் இடத்தில் இருந்துகொண்டு, பல்வேறு வகைகளிலும் சாதகமான நிலையை உருவாக்கிக் கொடுத்தார் குருபகவான். இப்போது அவர், உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் வந்து அமர்கிறார். நிதானத்தை கடைபிடிக்கவும்.

நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும் கூட, குடும்ப ரகசியங்களை வெளியே பகிர வேண்டாம். தியானம், யோகப் பயிற்சியில் ஈடுபட்டு மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வக் கோயிலின் விழாக்களை, திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

குருபகவான் பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தைப் பார்வையிடுகிறார். ஆகவே, தாயாரின் ஆரோக்கியம் சிறக்கும். தாய்வழிச் சொத்துகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. கூடா பழக்க வழக்கம் உள்ளவர்களின் நட்பைத் துண்டிப்பீர்கள். குரு பகவான் 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வழக்குகள் இழுபறியாகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குரு பகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். எனினும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். ஆரோக்கியம் கூடும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் ஒரு புண்யாதிபதியும், ஜீவனாதிபதியுமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் செல்வதால் எடுத்த காரியங்கள் வெற்றியடையும். வீடு, மனை வாங்குவதற்கு முன் பணம் தருவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். திடீர் யோகங்கள் உண்டு. ராகு நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் செல்வதால் சின்ன சின்ன தடங்கல்கள் இருக்கும். பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இரவு நேர பயணங்களை தவிர்க்க பாருங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் வரும். உங்களுடைய ஆறாவது வீட்டுக்கும், ஒன்பதாவது வீட்டுக்கும் உரியவராகிய குரு பகவான் தன்னுடைய நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 1.6.26 வரை செல்வதால் எல்லா வகையிலும் வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். இருந்தாலும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்களில் எந்த முதலீடும் செய்ய வேண்டாம். கோயில் விழாக்களை முன் நின்று நடத்துவீர்கள். பிள்ளைகளுக்கு நல்லது நடக்கும். அரைகுறையாக நின்று போன வீடு கட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் தடைபட்ட வேலைகள் முடியும். அலர்ஜி, தொண்டைப் புகைச்சல், மூச்சுப்பிடிப்பு வந்து போகும்.

வியாபாரத்தில் தள்ளுபடி, சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருள்களால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில், பங்குதாரர்கள் சிலர் தங்களின் பங்கைக் கேட்டு தொந்தரவு தருவார்கள்.

உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என ஆதங்கப்படுவீர்கள். கணினி துறையினருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்று தாமதமாகக் கிடைக்கும். கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் ஆதரவு கிட்டும். இந்த குரு பெயர்ச்சி அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாக அமையும்.

பரிகாரம்: மதுரை – சோழவந்தான் அருகே குருவித்துறையில் வீற்றியிருக்கும் ஸ்ரீகுருபகவான், சித்திர ரத வல்லப பெருமாள், செண்பகவள்ளித் தாயாரை வியாழக்கிழமைகளில் வழிபடுங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உணவு, உடை வாங்கிக் கொடுங்கள். தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.

சிம்மம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

எடுத்த காரியத்தையும் உண்ணாமல் உறங்காமல் முடிக்கும் வல்லமையும் கொண்ட நீங்கள், தன்மானத்துடன் வாழ்பவர்கள். உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) மே 14 முதல் 11-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். இதுவரை எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போன்று இருந்த ஒருவித அவஸ்தை நிலை மாறும். குரு பகவான் லாபஸ்தானத்தில் வந்து அமர்வதால், சகல விஷயங்களிலும் நன்மை நடக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள்.

வெளியிடங்களில் முதல் மரியாதை கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் வகையில் உதவிகள் கிடைக்கும். குறிப்பாக மூத்த சகோதரர் வகையில் ஆதாயம் உண்டு. அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் பெருகும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதரர் வகையில் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களின் முன்னேற்றம் பலரையும் வியக்க வைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். குரு பகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளுக்குத் திருமணம் சிறப்பாக முடியும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தந்தை வழிச் சொத்துகளைக் கேட்டு வாங்குவீர்கள்.

உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் இதுவரை உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு விலகி, மனத்தில் புது தெம்பு பிறக்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். முடிந்தவரை சேமிக்கவும். சொந்த பந்தங்களின் வருகையால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சுகாதிபதி, பாக்கியாதிபதியுமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் செல்வதால் எல்லா வகையிலும் வெற்றி உண்டு. தள்ளிப்போன விஷயங்கள் (புதுமனை புகுதல், திருமணம்) நல்லபடியாக முடியும். ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் பயணிப்பதால் கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது.

வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும், அஷ்டமாதிபதியுமான குரு பகவான் அவருடைய நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 01.6.26 வரை பயணிப்பதால் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். அவர்களின் உயர் கல்வி, உத்தியோகம் பொருட்டு, வெளிநாடு செல்வார்கள். பூர்வீக சொத்து விவகாரங்கள் சாதகமாக முடியும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.

குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் திடீர் செலவுகள் வரும். அதற்கேற்ப பணவரவும் உண்டு. குடும்பத்தில் நல்லது நடக்கும். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

வியாபாரத்தில், புதிய முதலீடுகள் செய்வீர்கள். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களைக் கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உணவு, இரும்பு, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடனான மனத் தாங்கல் விலகும்.

உத்தியோகத்தில் உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். கணினி துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும். கலைத்துறையினருக்கு பரிசு, பாராட்டு கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி புதிய அணுகுமுறையால் வெற்றி பெற வைப்பதாக அமையும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகில் தேப்பெருமாநல்லூரில் வீற்றிருக்கும் குருபகவான், ஸ்ரீவிஸ்வநாத சுவாமி உடனுறை ஸ்ரீவேதாந்தநாயகி அம்மனை வியாழக்கிழமைகளில் வழிபடுங்கள். ஏழை மாணவனின் படிப்புக்கு முடிந்த உதவியை செய்யுங்கள். நல்லது நடக்கும்.

கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025

வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட நீங்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் உறங்க மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) மே 14 முதல் 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். பத்தில் குரு பதவிக்கு ஆபத்தா என்ற கவலை வேண்டாம். வேலை பார்க்கும் இடத்தில், கவனத்துடனும் நிதானத்துடனும் நடந்துகொண்டால் போதும். மற்றபடி யாருக்காகவும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். வங்கி லோன் தொடர்பாக யாருக்கும் பரிந்துரை கையொப்பம் போடவேண்டாம்.

வெளியிடங்களில், சமூக அமைப்புகளில் பதவிகள் தேடி வந்தால், யோசித்து செயல்படுவது நல்லது. கூட்டுத்தொழில் செய்வோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். எந்த விஷயத்திலும் மற்றவர்களை நம்பாமல், நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். பேச்சில் கவனம் தேவை. தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். ஆன்மிக விஷ யங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டு. எனினும் வீண் சந்தேகத்தை தவிர்த்து விடுங்கள்.

குரு, சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் வருத்தம் நீங்கும். அவரின் ஆரோக்கியம் மேம்படும். சிலர், சொந்த வீடு வாங்க வாய்ப்புகள் உண்டு. வங்கிக் கடன் கிடைக்கும். குரு பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். வழக்குகள் இருப்பின், அவை உங்களுக்கு சாதகமாகும். பழைய ஆவணங் களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சேவகாதிபதியும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் பயணிப்பதால் இந்த காலகட்டத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும். புதிதாக அறிமுகமானாவர்களை நம்ப வேண்டாம். ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் பயணிப்பதால் திடீர் பணவரவு, செல்வாக்கு உயரும். எதிர்பார்த்தது எல்லாம் நடக்கும். எதிர்ப்புகள் அடங்கும். திடீர் பயணங்கள் உண்டு. வேற்று மொழிக்காரர்களால் ஆதாயமுண்டு.

உங்களுடைய சுகாதிபதியும், சப்தமாதிபதியுமான குரு பகவான் அவருடைய நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 01.6.26 வரை பயணிப்பதால் இந்த காலகட்டத்தில் தாயா, தாரமா என்று சின்ன சின்ன போராட்டங்கள் இருக்கும். கடனை நினைத்து வருந்துவீர்கள். ஆனால் வருமானமும் உண்டு. கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. உறவினர்களைப் பற்றி மற்றவர்களிடம் குறை கூறாதீர்கள். குருபகவான் உங்களுக்கு சாதகமாக இருப்பார். கவலை வேண்டாம்.

குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். எதார்த்தமான பேச்சால் எதையும் சாதிப்பீர்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து கொள்முதல் செய்யவும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். சிலர், கடையை விரிவுபடுத்துவீர்கள். கெமிக்கல், கமிஷன், எலெக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் கூட்டுத்தொழிலில் திடீர் லாபம் அடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு இருக்கும். சம்பள உயர்வு உண்டு. சக ஊழியர்களை அரவணைத்துப் போகவும். கணினிதுறையினர் மூத்த அதிகாரிகளைப் பற்றிக் குறை கூற வேண்டாம். கலைஞர்கள் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவார்கள். இந்த குரு பெயர்ச்சி நிதானித்து செயல்பட வைத்து வெற்றி காண வைப்பதாக அமையும்.

பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபட்டு வாருங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள். விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.

Disclaimer : ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவைவேல்ஸ் மீடியாவின் கருத்துகள் அல்ல.

Courtersy : Indhu Thamizh Thisai.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry