
தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்(TNERC) அப்போது பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு, இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
Also Read : குடிநீர் மூலம் பரவும் நோய்கள்: குழாய் நீர், ஆர்.ஓ. நீர், கிணற்று நீர் – எது சிறந்தது?
அதன்படி நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்கம் 3.16 விழுக்காடு எனத் தெரியவந்திருப்பதால், அந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. மின் கட்டண உயர்வு, ஜூலை 2023 இல் 2.18% ஆகவும், ஜூலை 2024 இல் 4.83% ஆகவும் இருந்தது. தற்போது அதிகரிக்கப்பட உள்ள கட்டணங்கள் குறைந்த மின்னழுத்த (LT) மற்றும் உயர் மின்னழுத்த (HT) பிரிவுகள் இரண்டிற்கும் பொருந்தும். இதனால் வீட்டு உபயோக, வணிக, தொழில்துறை மற்றும் பொது பயன்பாட்டு நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள்.
வருடாந்திர நுகர்வோர் விலை குறியீடு அல்லது பணவீக்க விகிதத்துடன் (Consumer Price Index – CPI) இணைக்கப்பட்ட கட்டண விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) விற்பனை வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. 2021-22 நிதியாண்டில், நிறுவனம் 82,002 மில்லியன் யூனிட் மின்சாரத்தை விற்று ₹45,953 கோடி வருவாய் ஈட்டியது. செப்டம்பர் 2022 இல் ஏற்பட்ட பெரும் கட்டண உயர்வு மற்றும் ஒரு முழு ஆண்டு உயர் கட்டணங்களுக்குப் பிறகு, 2022-23 நிதியாண்டில் விற்பனை 87,916.64 மில்லியன் யூனிட்டுகளாக உயர்ந்தது. இதன் மூலம் வருவாய் ₹60,505.37 கோடியாக உயர்ந்தது – இது 32% அதிகரிப்பு ஆகும்.
ஜூலை 2023 இல் ஏற்பட்ட உயர்வு, அதிகரித்து வரும் தேவை இவற்றுடன் இணைந்து, 2023-24 நிதியாண்டில் விற்பனை 93,380 மில்லியன் யூனிட்டுகளாக உயர்ந்தது. வருவாய் ₹71,614 கோடியை எட்டியது – இது கூடுதலாக 18% அதிகரிப்பு ஆகும். ஒட்டுமொத்தமாக, இரண்டு CPI (வருடாந்திர நுகர்வோர் விலை குறியீடு) அடிப்படையிலான திருத்தங்களால், TANGEDCO இன் ஆண்டு விற்பனை வருமானம் இரண்டு ஆண்டுகளில் சுமார் ₹25,600 கோடி அதிகரித்ததோடு, அதன் வருவாய் இடைவெளியைக் குறைக்கவும் உதவியது.

வீட்டுப் பயனர்களுக்கான மின் கட்டணங்களுக்கு அரசு தொடர்ந்து மானியம் வழங்கினாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் இதர கட்டணங்களில் ஏற்பட்ட காலமுறை அதிகரிப்பு, புதிய இணைப்புகளுக்கு விண்ணப்பிக்கும் நுகர்வோருக்கு சுமையாக மாறியுள்ளது. 2021-22 நிதியாண்டில், கட்டணம் அல்லாத வருவாய் ₹2,722 கோடியாக இருந்தது. இது 2022-23 இல் ₹4,303 கோடியாக உயர்ந்தது – இது 58% அதிகரிப்பு ஆகும். 2023-24 இல், இது மேலும் ₹6,628 கோடியாக உயர்ந்தது, இது 54% அதிகரிப்பைக் குறிக்கிறது.
மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் ரூ. 10,000 கோடியாக அதிகரித்தது. 2023-ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். அதன்படி பார்த்தால் 2023-24ஆம் ஆண்டில் மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ரூ.6920 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் 4.83% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிலும் மின்சார வாரியம் நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry