சென்னையை உலுக்கும் ஒலி மாசு: இரத்த அழுத்தம் முதல் மனநலம் வரை – தவிக்கும் போக்குவரத்து காவலர்கள்..!

0
54
Chennai ranks as India's noisiest city, with experts warning of a direct link between chronic noise pollution and rising hypertension, heart disease, and mental health issues. Discover the silent dangers in the city's constant din.

சென்னை போக்குவரத்துக்கு ஓய்வே இல்லை. நெல்சன் மாணிக்கம் சாலை – அமைந்தகரை சந்திப்பு உள்பட பல்வேறு பரபரப்பான பகுதிகளில், சத்தம் நிறைந்த ஹாரன்கள் மற்றும் அதிவேக வண்டிகளின் இரைச்சலுக்கு மத்தியில், ஒரு போக்குவரத்துக் காவலர் கிட்டத்தட்ட பகல் முழுவதும் பணியில் இருக்கிறார்.

இந்தத் தொடர்ச்சியான இரைச்சல் அந்தக் காவலரை பாதிக்கிறதா என்று கேட்டபோது, “இப்போது எனக்குக் கேட்பதில்லை” என்று அவர் கூறினார். ஆனால், மன அழுத்தம் இருப்பதாக ஒப்புக்கொண்டார். தொடர்ச்சியான ஒலி மாசு எவ்வாறு நமது ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது, குறிப்பாக இரத்த அழுத்தத்துடன் அதன் தொடர்பு குறித்து இந்தியாவில் அதிகம் பேசப்படுவதில்லை.

Also Read : கருத்தரித்தலில் சிக்கலை ஏற்படுத்தும் காற்று மாசு! மிகப்பெரிய அச்சுறுத்தலை சமாளிக்க முடியாமல் திணறும் உலக நாடுகள்!

உலகளவில், அனைத்து இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் தொடர்பான இறப்புகளில் பாதிக்குபாதி இரத்த அழுத்தமே காரணமாகும். “ஒலி மாசு, நகர்ப்புற வாழ்க்கையில், இரத்த அழுத்தத்திற்கான குறைத்து மதிப்பிடப்பட்ட காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்,” என்று உலக இரத்த அழுத்த லீக் (World Hypertension League) துணைத் தலைவர் டாக்டர் எஸ்.என். நரசிங்கன் தெரிவித்துள்ளார்.

சென்னை – இந்தியாவின் சத்தமான நகரம்!

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board) 2021 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, லக்னோ, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய ஆறு பெருநகரங்களையும் மிஞ்சி, மிகவும் சத்தமான நகரமாக சென்னை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் குடியிருப்புப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவு பகலில் 55 dB ஆகவும், இரவில் 45 dB ஆகவும் உள்ளது. தொழில்துறை மண்டலங்களில் இது 75 dB வரை செல்லலாம். ஆனால், மே 20 நிலவரப்படி, குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளிலும் கூட 80 dB ஐத் தாண்டி ஒலி அளவு பதிவாகியுள்ளது.

மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு DLF ஐ.டி. பார்க் பகுதியைக் கடக்கும்போது ஏற்படும் சிரமமான அனுபவம் நன்கு தெரியும். மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் ஓசை மற்றும் அதிகரித்து வரும் பதற்றமான வாகன ஓட்டிகளின் தொடர்ச்சியான ஹாரன் சத்தம் ஆகியவை மன அழுத்த அளவை அதிகரிக்கும் முக்கிய காரணிகளாகும்.

இந்தப்பகுதி குடியிருப்பாளர்கள் கூடுதல் சிரமங்களை அனுபவிக்கின்றனர். “இரவு முழுவதும் கனரக வாகனங்கள் மற்றும் மெட்ரோ கட்டுமானத்தின் தொடர்ச்சியான இரைச்சல் எங்கள் வீட்டையே அதிரச் செய்கிறது. பெரும்பாலான இரவுகள் தூக்கமில்லாமல் செல்கின்றன.” இதனால் வேறு பகுதிக்கும் இடம்மாற உள்ளதாக பலரும் கூறுகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக, தொழில்துறை இரைச்சல், போக்குவரத்து இரைச்சல், விரிவான கட்டுமானப் பணிகள், கோயில் விழாக்கள், அரசியல் பேரணிகள் உள்ளிட்டவைகள் கூட சென்னையின் சாதாரண இரைச்சலாக மாறிவிட்டன. இந்த சத்தங்கள் தூக்கத்தைத் தொந்தரவு செய்வது மட்டுமல்ல. சத்தத்தினால் ஏற்படும் தொடர்ச்சியான மன அழுத்தம், இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. “ஒலி அளவில் ஒவ்வொரு 10 டெசிபல் அதிகரிப்பும், குறைந்தபட்சம் 3-5 சதவீதம் அதிக இரத்த அழுத்த அபாயத்துடன் தொடர்புடையது,” என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதயத் துடிப்பு ஒழுங்கின்மை போன்ற இதய நோய் ஆபத்துக் காரணிகள் அனைத்தும் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையவை. சிலருக்கு சிறுநீரகம் அல்லது இதயப் பிரச்சனைகள் காரணமாக இரத்த அழுத்த ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு இரத்த அழுத்தத்திற்கான காரணம் தெரியவில்லை. ஒலி மாசு அந்த வகையின் கீழ் வருகிறது.” அதிக ஒலியால் ஏற்படும் மன அழுத்தம் தான் தங்கள் இரத்த அழுத்தத்தைத் தூண்டுகிறது என்று நோயாளிகள் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை.

Also Read : பயன்படுத்த லாயக்கற்றதாக மாறும் நெய்வேலி சுற்றுவட்டார நீர் நிலைகள்! 115 மடங்கு அதிகமாக பாதரச மாசுபாடு இருப்பதால் அதிர்ச்சி!

மனநலப் பிரச்சனையை உருவாக்கும் ஒலி மாசு:

மனநல மருத்துவர்கள், ஒலி மாசை ஒரு சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாகவும் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். “சத்தத்தை ஒரு அச்சுறுத்தலாக நமது உடல் உணர்கின்றது, இது கார்டிசால் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை வெளியிடுகிறது. காலப்போக்கில், இது மன மற்றும் உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்,” என்று அவர்கள் கூறுகின்றனர்.

பல மாநிலங்கள் ஒலி மாசை விரிவாக ஆய்வு செய்ய முயற்சித்துள்ளன, தமிழகமும் இதைச் செய்து வருகிறது. IIT-மெட்ராஸ் உடன் இணைந்து, சென்னை உள்பட 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் விரிவான ஒலி வரைபட ஆய்வு செப்டம்பர் 2024 இல் தொடங்கியது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) மேற்பார்வையிட்ட இந்தத் திட்டம், மூன்று மாதங்களுக்குள் ஒரு ஆரம்ப அறிக்கையை வழங்குவதாக எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தரவுகள் இன்னும் பொதுவில் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், மாற்றியமைக்கப்பட்ட ஹாரன்கள் கொண்ட வாகனங்கள் பறிமுதல், இரைச்சலான சைலன்சர்களுக்குத் தடை மற்றும் உடனடி அபராதங்கள் போதுமானதாக நிரூபிக்கப்படவில்லை. ஒலி மாசை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அமைதியாகப் பதுங்கியிருக்கும் நிலையில் இது மிகவும் அவசியம்.

With Input from DT Next. Image Source : Getty Images.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry