
குக்கரில் குறைந்த நேரத்தில் உணவுகளை சமைத்துவிடலாம் என்பதால், பெரும்பாலானோர் சமையலை குக்கரிலேயே செய்துவிடுகின்றனர். முக்கியமாக குக்கரில்தான் சாதத்தை சமைத்து சாப்பிடுகின்றனர்.
குக்கரில் சமைப்பது குறித்து பல கட்டுக்கதைகள் உலா வருகின்றன. முக்கியமாக குக்கரில் உணவுகளை சமைத்தால், உணவில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது. அதே சமயம் குக்கரில் சாதத்தை சமைத்தால் சர்க்கரை நோய் விரைவில் வந்துவிடும் என்ற ஒரு கருத்தும் மக்களிடையே உள்ளது.
உண்மையிலேயே குக்கரில் சமைத்தால் உணவுகளில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படுமா?, குக்கர் சாதத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாதா? என்பதன் பின்னணியில் உள்ள உண்மையை ஈரோட்டைச் சேர்ந்த பேபி மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் அருண்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “பொதுவாக பிரஷர் குக்கர் என்பது உயர் தீயில், அதிக அழுத்தத்தில் குறைவான நேரத்தில் உணவுகளை சமைக்க உதவுகிறது. இந்த பிரஷர் குக்கரில் சாதத்தை சமைப்பதற்கும், கஞ்சி வடித்த சாதத்தை சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
Also Read : பெரிய கோளாறுகளை ஏற்படுத்தும் வைட்டமின் பி12 குறைபாடு: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சைவ உணவாளர்கள்!
பொதுவாக அரிசியில் அமைலோஸ் அல்லது அமைலோபெக்டின் என்னும் வடிவில் ஸ்டார்ச் உள்ளது. ஸ்டார்ச் என்பது ஒரு வகையான கார்போஹைட்ரேட் ஆகும். இந்த கார்போஹைட்ரேட்டை அதிகம் உட்கொண்டால், அந்த கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக உடைக்கப்பட்டு, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே தான் சர்க்கரை நோயாளிகள் ஸ்டார்ச் அல்லது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஸ்டார்ச், அரிசியின் மேல் பகுதியில் 10 சதவீதமும், உட்பகுதியில் 90 சதவீதமும் உள்ளது. எனவே சாதத்தை வடித்து சாப்பிடும் போது, அதில் உள்ள 10 சதவீத ஸ்டார்ச் மட்டுமே நீரில் கரைந்து வெளியேறும். மீதமுள்ள 90 சதவீத ஸ்டார்ச்சும் உடலினுள் தான் செல்லும். அதுவே குக்கரில் சமைக்கும் போது, அந்த 90 சதவீதத்துடன் 10 சதவீத ஸ்டார்ச்சும் சேர்த்து உட்கொள்ளப்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் வடித்த சாதத்தை சாப்பிடுவதால் வெறும் 10 சதவீத ஸ்டார்ச் மட்டும் தான் குறையுமே தவிர, இரத்த சர்க்கரை அளவு பெரிதளவில் குறைந்துவிடாது.
இது நல்லது தானா என்று கேட்கலாம். ஆனால் அது தான் இல்லை. சாதாரணமாக ஒரு பொருளை நீரில் வேக வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் லீச்சிங் என்ற செயல்முறையின் மூலம் நீரில் கலக்கப்படுகின்றன. இந்நிலையில் நல்ல சத்துக்கள் நிறைந்த கைக்குத்தல் அரிசி, கவுனி அரிசி போன்றவற்றை வடித்து சாப்பிடும் போது, அந்த அரிசியில் உள்ள பெரும்பாலான சத்துக்கள் அந்த நீரின் வழியே வெளியேறிவிடும்.
எனவே இந்த அரிசியின் சத்தைப் பெற வேண்டுமானால், அந்த நீரையும் உட்கொண்டால் மட்டுமே அந்த சத்துக்களைப் பெற முடியும். எனவே எந்த ஒரு காய்கறிகளையும் வேக வைப்பதாக இருந்தால், அதன் நீரை வெளியேற்றிவிடாமல், அதையும் சேர்த்து உட்கொள்ளுங்கள்.
எனவே குக்கரில் சமைத்து சாப்பிட்டால், அந்த உணவில் உள்ள சத்துக்கள் எல்லாம் அழிந்துவிடும் என்று கூறுவது முற்றிலும் தவறு. எனவே இப்படியான கட்டுக்கதைகளை நம்பாமல், உங்களுக்கு எப்படி சமைத்து சாப்பிட பிடிக்குமோ, அப்படி சமைத்து சாப்பிடுங்கள். ஆனால் அதன் நீரிலும் சத்துக்கள் அதிகம் இருக்கும் என்பதால், அந்த நீரையும் சேர்த்து உட்கொள்ளுங்கள்” என்று டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry