பாமக உட்கட்சி பூசல்: “ராமதாஸ் முடிவே இறுதியானது, அன்புமணி குறுக்குச்சால் ஓட்டுவது ஏன்?” – வன்னியர் சங்க தலைவர் கேள்வி!

0
17
Explore the escalating dispute within the PMK as founder Ramadoss and president Anbumani Ramadoss clash over party authority. Pu. Tha. Arulmozhi discusses the internal dynamics, allegations, and the impact on the party's future. / Founder of PMK, Dr. Ramadass | Pu. Th. Arulmozhi, who was the leader of the Vanniyar Sangam and a member of the committee that drafted the PMK legislative proposals.

பாமக-வில் அனைத்து அதிகாரமும் தனக்குத் தான் இருப்பதாகச் சொல்கிறார் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தனக்கே அதிகாரம் என்கிறார் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ். இந்த நிலையில், பாமக-வுக்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து வன்னியர் சங்க தலைவரும், பாமக சட்ட திட்டங்களை வகுத்த குழுவில் இருந்தவருமான பு.தா.அருள்மொழி ‘இந்து தமிழ் திசை’க்கு நேர்க்காணல் அளித்துள்ளார்.

Also Read : ஈகோ யுத்தத்தால் பாழாகும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம்! மோடி அரசு மீது பழிபோட்டுவிட்டு தப்பிக்கப்பார்க்கும் ஸ்டாலின் அரசு!

அன்புமணிக்கும், ராமதாஸுக்கும் என்ன தான் பிரச்சினை? அது ஏன் பொதுவெளியில் விவாதிக்கப்படுகிறது?

கட்சிக்கு அன்புமணி தலைவரான பின்னர், மருத்துவர் அய்யாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை; எனக்குத் தான் எல்லா அதிகாரமும் இருக்கிறது என்பது போன்று பேசத் துவங்கினார். ஆனால், தொடக்க காலத்தில் இருந்து கட்சிக்குள் என்னுடைய எண்ணம் தான் நிறைவேற்றப்பட்டிருக்கு. இப்போது திடீரென வந்த இவர் குறுக்குச்சால் ஓட்டுவது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பினார் மருத்துவர் அய்யா. அவரது கோபம் நியாயமானது தான். இது தொடர்பாக மூத்த நிர்வாகிகள் இரண்டு பக்கமும் பேசிப் பார்த்தோம். ஆனால் அன்புமணி அதற்கெல்லாம் கட்டுப்படவில்லை. அதனால் தான் பிரச்சினை முற்றிப் போய் பொதுவெளியில் வெளிப்படையாக பேசும் நிலை உருவாகிவிட்டது.

அப்படியானால் ராமதாஸ் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறாரா?

அப்படியெல்லாம் இல்லை. எந்த ஒரு பிரச்சினையானாலும், எல்லோரையும் அரவணைத்து, மணிக் கணக்காய் விவாதித்து முடிவுகளை எடுப்பவர் மருத்துவர் அய்யா. இன்னும் சொல்லப்போனால், ஒரு நாள் இரவு முழுவதும், எல்லோரையும் கேட்டு விவாதித்த பிறகு தான் எந்த முடிவையும் எடுப்பார். ஆனால் அவரச கதியில் வந்த சிலர், அய்யா சொல்வதைத் தான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற நிலையை உருவாக்கினர். அதுமுதல் அய்யா எடுப்பது தான் முடிவு என்ற கண்ணோட்டம் வளர்ந்தது. அதன்படி தற்போது வரை செய்து வருகிறோம்.

ராமதாஸ் உள்ளிட்ட 8 நிர்வாகிகளை அன்புமணி நீக்கப் போவதாக செய்திகள் வருகிறதே… ராமதாஸை அப்படி நீக்க முடியுமா? கட்சியின் சட்ட விதிகள் என்ன சொல்கிறது?

பாமக-வின் சட்ட விதிகள் 6 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டது. அந்த ஆறு பேரில் தற்போது நான் மட்டுமே இருக்கிறேன். தலைவர், செயலாளரை உள்ளடக்கிய செயற்குழுதான் முடிவுகளை எடுக்கும் என பாமக சட்ட விதிகளில் இருக்கிறது. சட்ட விதிகள் குறித்து எனக்குத் தெரியும் என்பதால் இதைச் சொல்கிறேன். ஆனாலும் செயற்குழு முடிவெடுத்தாலும் ஒவ்வொரு கருத்தையும் ஆய்ந்து, இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அய்யாவுக்குத் தான் என நான், பாக்கம் ராமகிருஷ்ணன், எழிலவன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் முடிவுசெய்து அதை சட்ட விதியில் இடம் பெறச் செய்தோம். எந்த முடிவையும் மாற்றும் அதிகாரம் மருத்துவர் அய்யாவுக்கு உண்டு என விதி உள்ளது. அந்த நடைமுறை தான் இதுநாள் வரை பின்பற்றப்படுகிறது. எனவே, அன்புமணி கூறுவது போல் அய்யாவை எல்லாம் நீக்க முடியாது.

சவுமியா சொல்வதைக் கேட்டுக்கொண்டு தான் அன்புமணி தடாலடியாக செயல்படுவதாக சொல்வது உண்மையா?

அவர்கள் குடும்பத்திற்குள் நடப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனக்குத் தெரிந்தது, சிலரை கட்சிப் பொறுப்புகளில் நியமனம் செய்ய அய்யாவிடம் அழைத்துச் சென்றோம். ஆனால் அவர்கள் யாரையும் அன்புமணி அனுமதிக்கவில்லை. அதனால் மருத்துவர் அய்யாவுக்கு கோபமே வந்துவிட்டது.

அம்மா மீது அன்புமணி பாட்டிலை வீசியதாக ராமதாஸ் சொல்கிறார்… அம்மாவை தெய்வமாக மதிப்பதாக அன்புமணி சொல்கிறார். இதில் எது உண்மை?

இது வீட்டிற்குள் நடந்த விஷயம். எனக்குத் தெரியாததை பேசுவது சரியாக இருக்காது. உண்மை தெரியாமல் பேசுவது சரியாகாது.

ஜி.கே.மணி தான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம் என்கிறதே அன்புமணி தரப்பு. திமுக உடன் சேர்ந்து கொண்டு அவர் பாமக-வை உடைக்க சதிசெய்வதாகவெல்லாம் செய்தி பரப்புகிறார்களே..?

25 வருடங்கள் பாமக தலைவராக இருந்தவர் ஜி.கே.மணி. அவரை மாற்றிவிட்டு அன்புமணியை தலைவராக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, மருத்துவர் அய்யாவின் நல்லெண்ணம் காரணமாக, ஜி.கே.மணிக்கு சிறப்பு செய்வதற்காக கவுரவத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. கட்சிக்குள்ளும் சமுதாய மக்கள் மத்தியிலும் அவருக்கென்று தனி இமேஜ் உள்ளது. அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்துப் பேசி இருப்பவர். 5 முறை எம்எல்ஏ-வாக தேர்வானவர். அவர் மீது இப்படி எல்லாம் பழிபோடுவது ஏற்புடையதல்ல. கட்சி ஒற்றுமையாக, பலமாக இருக்கவேண்டும் என நினைக்கக் கூடியவர் மணி. அவர் எதிலும் தலையிட மாட்டார். அதுமட்டுமல்ல… மணி சொல்வதையெல்லாம் மருத்துவர் அய்யா அப்படியே கேட்கக்கூடியவரும் அல்ல. ஆகவே, அவரைப் பற்றி அவதூறாகப் பேசக்கூடாது.

தனது மகன் தமிழ்குமரனை இளைஞர் சங்க தலைவர் பொறுப்பிலிருந்து விலக வைத்த ஆதங்கத்தில் தான் அன்புமணிக்கு எதிராக ஜி.கே.மணி செயல்படுவதாக சொல்வது உண்மையா?

தவறான தகவல். ஜி.கே.மணி அவ்வாறு செய்யக்கூடியவர் அல்ல. மருத்துவர் அய்யாவின் ஒரே மகன் அன்புமணி. அதனால் அவருக்குத் தான் எல்லா சலுகையும், அந்தஸ்தும் எனச் செல்லமாக வளர்த்தார். அப்படி வளர்த்த பிள்ளை தன்னை மீறிச் செல்லும் போது தந்தை என்ற முறையில் ஆத்திரம் வருவது இயல்புதானே. அந்த ஆத்திரம் தான் அய்யாவுக்கு. இதில் எப்படி தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இன்னொருவர் சென்று பகையை ஏற்படுத்த முடியும்?

Also Read : விவசாயிகள் வறட்சியை எதிர்கொள்வதற்கான புதிய அறிவியல் புரட்சி! வேளாண்துறையை கட்டி ஆளப்போகும் நவீன தொழில்நுட்பம்!

காடுவெட்டி குருவை கீழ்தரமாக நடத்தினார் அன்புமணி என்கிறாரே ராமதாஸ்… இதை எப்படி ராமதாஸ் அனுமதித்தார்? அவரே அனுமதித்தாலும் மற்றவர்கள் எப்படி பொறுத்தீர்கள்?

நான் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தான் காடுவெட்டி குருவை அய்யாவிடம் அறிமுகப்படுத்தினோம். கட்சிக்குள் குருவை அன்புமணி அவமதித்தாக அய்யா தான் இப்போது சொல்கிறார். ஆனால், அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.

வன்னியர் சங்கம் தற்போது யாரை ஆதரிக்கிறது?

எங்களுக்கு எல்லாமே அய்யா தான். அய்யா சொல்படி தான் செயல்பட்டு வருகிறோம். இது இனியும் தொடரும்.

மக்களவைத் தேர்தல் சமயத்தில் கட்சிக்காக வந்த பணம் தொடர்பாகவும் குடும்பத்துக்குள் பிரச்சினை என்கிறார்களே… உண்மையா?

தேர்தல் சமயத்தில் பணம் வந்ததா என எங்களுக்கு எதுவும் தெரியாது. எனவே, அதுதான் பிரச்சினைக்கு காரணமா என்பது எனக்குத் தெரியாது.

அக்காள் மகன் முகுந்தனை ஏற்றுக் கொள்வதில் அன்புமணிக்கு அப்படி என்னதான் பிரச்சினை?

முகுந்தனை எதனால் அவர் ஏற்கவில்லை என்பது அவரது விருப்பம். ஆனால், பத்திரிகைகளில் எழுதுவது போன்று முகுந்தனால் தான் கட்சிக்குள் பிரச்சினை என்பதெல்லாம் தவறு.

இந்த நிலை நீடித்தால் பாமக-வின் எதிர்காலம் என்னாகும் என நினைக்கிறீர்கள்?

காலம் தான் பதில் கூறவேண்டும். தொண்டர்களிடம் ஏக்கம் ஏற்படாத வரை பிரச்சினையில்லை.

அப்பாவும் பிள்ளையும் இப்படி மாறி மாறி தூற்றிக்கொள்வதை வன்னியர் சங்கம் இன்னும் ஏன் வேடிக்கை பார்க்கிறது?

வேடிக்கை பார்க்கவில்லை. மாறாக, ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று பேசி வருகிறோம். அய்யாவிடம் ஒரு குணம் உள்ளது. அவர் எதையும் தடாலடியாகச் செய்யமாட்டார். யோசித்து தான் செய்வார். தற்போதும் அப்படித் தான் உள்ளது. சீக்கிரமே அனைத்தையும் சரிசெய்வோம்.

உள்ளுக்குள் நடப்பது வேறு பிரச்சினை என்று எல்லோரும் பூடகமாகச் சொல்கிறார்களே… அப்படி உள்ளுக்குள் என்னதான் பிரச்சினை?

எதுவும் மறைமுகமாக நடக்கவில்லை. எல்லாம் வெளிப்படையாகத் தான் நடக்கிறது.

முகுந்தனை வன்னியர் சங்க தலைவராக்கலாம் என அன்புமணி தரப்பில் ஒரு யோசனை சொல்லப்பட்டதாமே?

அப்படி எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை. அதற்கு இப்போது அவசியமும் இல்லை.

இவ்வளவு நடந்த பின்னால் இனிமேல் ராமதாஸும் அன்புமணியும் முகம் கொடுத்து பேசமுடியும் என நினைக்கிறீர்களா?

மகன் தானே. இதிலென்ன இருந்து விடப்போகிறது. கோழி மிதித்து குஞ்சு முடமாகிவிடப்போகிறதா? தந்தையிடம் பேசுவதில் அன்புமணிக்கு என்ன கவுரவக் குறைச்சல் வந்து விடப்போகிறது?

இப்போது நடக்கும் பிரச்சினைகளால் பாமக-வின் செல்வாக்கு சரிந்துவிடாதா?

இதுவரை கட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், இந்த நிலை தொடர்ந்தால், தொண்டர்கள் மத்தியில் ஏக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஏக்கம் ஏற்பட்டால் நிச்சயம் தொய்வு ஏற்படும்.

அப்பாவும் பிள்ளையும் மோதிக் கொள்வதை பார்த்துவிட்டு பாமக நிர்வாகிகள் சிலர் அதிமுக, திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகச் சொல்கிறார்களே..?

எனக்கு அது பற்றியெல்லாம் தெரியாது. ஆனால், வன்னியர் சங்க நிர்வாகிகள் யாரும் அப்படிச் செல்லவில்லை.

பாமக இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருப்பதற்கு குடும்ப அரசியலை ஊக்குவித்ததுதான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பாமக-வில் மட்டுமா… இந்தியா முழுவதும் வாரிசு அரசியல் உள்ளதே?

இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார். இந்நிலையில், கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவர் தீரன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி போன்ற மூத்த நிர்வாகிகள் மருத்துவர் ராமதாஸ் பக்கம் நிற்கின்றனர். பதவிக்காக மட்டுமே நிர்வாகிகள் அன்புமணி பக்கம் இருக்கிறார்கள், ஆனால் ராமதாஸ் தற்போது நியமிப்பவர்களே அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் என்று தைலாபுரம் வட்டார நிர்வாகிகள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry