
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 6-ம் தேதியன்று வங்கிகளுக்கான ரெபோ வட்டி விகிதங்களை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. அதேபோல கேஷ் ரிசர்வ் ரேஷியோவையும் 4 சதவீதத்தில் இருந்து மூன்று சதவீதமாக குறைத்துள்ளது.
ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு என்ன வட்டி விகிதத்தில் கடன் கொடுக்குமோ, அதுதான் ‘ரெபோ’ வட்டி விகிதம். ‘ரெபோ’ வட்டி விகிதம் தற்போது அரை சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி வட்டி விகிதத்தை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்யும்போது, அது தற்போது சந்தையில் இருக்கக்கூடிய வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும்.
இதுபோல வட்டி விகிதங்களைக் குறைக்கும்போது வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற நீண்ட காலக் கடன்களுக்கான வட்டி குறையும். வீட்டுக் கடன்களைப் பொறுத்தவரை ஏற்கனவே வாங்கிய கடனுக்கும் வட்டி குறையும். அதேபோல, வங்கிகளில் போட்டுவைக்கும் வைப்பு நிதிக்கான வட்டியும் குறையும்.
Also Read : மக்களை மிரட்டும் ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’! தப்பிப்பதற்கான பவர்ஃபுல் டிப்ஸ்!
வீட்டுக் கடன்களைப் பொறுத்தவரை, புதிதாக வாங்குவோருக்கு தற்போதைய குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இப்படிக் கடன்களைக் குறைப்பதால், பணச் சுழற்சி அதிகரிக்கும். இதனால் பணப் புழக்கம் அதிகரிக்கும், பொருளாதாரம் வளரும், மக்களுக்கு பலன் கிடைக்கும் என்பதுதான் பொதுவான பொருளாதார எதிர்ப்பார்ப்பு.
வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு கால் சதவீதமோ, அரை சதவீதமோ வட்டியை குறைப்பார்கள். கடன் வாங்கியவர்கள் அதற்கேற்றபடி மாதாமாதம் கட்டும் தொகையைக் குறைக்கலாம் அல்லது கட்டும் தவணைகளைக் குறைக்கலாம். ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கு வட்டி குறைய, ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம்.
ஏனென்றால், வங்கிகள் வேறு இடங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட வட்டி விகிதத்தை அளிப்பதாகக் கூறி கடன் வாங்கியிருப்பார்கள். அதையெல்லாம் சரிசெய்யத்தான் இந்த தாமதம் ஆகிறது. புதிதாக கடன் வாங்கினால், தற்போது அறிவிக்கப்பட்ட குறைந்த வட்டியில் வாங்கலாம். பழைய கடன்களுக்கு மெதுவாகத்தான் குறையும்.
இதுபோல வட்டி விகிதங்கள் குறையும்போது, கடன் வாங்கிய வங்கிகளை அணுக வேண்டும். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்திருப்பதால், நீங்கள் வாங்கியக் கடனுக்கான வட்டியையும் குறைக்க வேண்டும் என கடிதம் அளிக்கலாம். பேச்சுவார்த்தை நடத்தி, ஓரளவுக்குக் குறைப்பார்கள். இதற்குப் பிறகு, கட்ட வேண்டிய தவணையைக் குறைப்பதா, மாதாமாதம் கட்டிவரும் தவணைத் தொகைக் குறைப்பதா என்பதை முடிவுசெய்துகொள்ளலாம்.
பொருளாதார நிபுணர்களைப் பொறுத்தவரையில், கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தைத்தான்(EMI) குறைக்க வேண்டும் என்கிறார்கள். அது எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும், திருப்பிச் செலுத்தும் காலத்தைக் குறைத்துக் கொள்வதுதான் சரியானதாக இருக்கும் என்பது அவர்களது அறிவுரை.
மேலும், வீட்டின் விலைகள் வெகுவாக அதிகரித்திருக்கின்றன. இந்த சிறிய வட்டிக் குறைப்பால் வீட்டின் விற்பனை அதிகரிக்காது. முதல் வீடு வாங்குவதாக இருந்தால், நீங்கள் தற்போது செலுத்திவரும் வாடகையைவிட பல மடங்கு அதிகமாக மாதத் தவணை கட்ட வேண்டியிருக்கும். இரண்டாவது வீடு என்றால், அது சரியான முதலீடாக இருக்காது.
வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறையும். ஏற்கனவே முதலீடு செய்த வைப்பு நிதிகளுக்கு, ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட காலத்திற்கு வட்டி குறையாது. அதாவது, ஒரு வருட வைப்பு நிதி, இரண்டு வருட வைப்பு நிதி என்றால் அந்த குறிப்பிட்ட காலம் வரை வட்டி குறையாது.
ஆனால், அதற்குப் பிறகு புதுப்பிக்கும்போது குறைவான வட்டி விகிதத்தில்தான் புதுப்பிப்பார்கள். இனிமேல் புதிதாக வைப்பு நிதியில் பணத்தை போட்டுவைத்தாலும் குறைவான வட்டியே தருவார்கள். எனவே, வைப்பு நிதிக்குப் பதிலாக கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அதில் வைப்பு நிதியைவிட கூடுதல் வட்டி கிடைக்கும். மாதாமாதம்கூட வட்டியைப் பெற முடியும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &