
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக, தமிழக அரசு வடிவமைத்துள்ள மாநில கல்விக் கொள்கை (SEP) அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படாதது குறித்து, அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (AIFETO – ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதியரசர் முருகேசன் குழுவால் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு 550 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அதை வெளியிடாமல் அரசு மௌனம் சாதிப்பது, உண்மையிலேயே ‘மில்லியன் டாலர் கேள்வி’ ஆகும். தமிழக அரசு இதற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும்.
நமது கல்விப் பரிணாமத்தை அடிப்படையாக மாற்றியமைத்து, சமூக நீதியை நிலைநிறுத்தக்கூடிய சீர்திருத்தங்கள் மாநில கல்விக் கொள்கையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பொதுமக்களுக்கு இந்த அறிக்கை வெளிப்படையாகத் தெரியாமல் இருப்பது வருந்தத்தக்கது.
கடந்த 10 ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழிலும், வேல்ஸ் மீடியா இணைய இதழிலும் வெளியான செய்திகளின்படி, மாநில கல்விக் கொள்கையின் சில முக்கிய அம்சங்கள் கசிந்துள்ளன. இந்த அம்சங்களில் பல வரவேற்கத் தகுந்தவை.
பொதுத்தேர்வு முறையில் சீர்திருத்தம்: தேசிய கல்விக் கொள்கையில் 3, 5, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என உள்ள நிலையில், மாநில கல்விக் கொள்கையில், உயர்நிலைக் கல்வி வரையில் 10 ஆம் வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு இருக்குமெனத் தெரிகிறது. “மாணவர்களுக்கு ஏற்படும் தேவையற்ற அழுத்தத்தைக் குறைத்து, மேலும் முழுமையான கற்றல் சூழலை இது உருவாக்கும். இது ஒரு வரவேற்கத்தக்க நகர்வு.
11, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிச் சேர்க்கை: 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் சேரலாம் என்ற பரிந்துரையும் நேர்மறையான அம்சமாகும். இது உயர்கல்வி சேர்க்கைக்கான நிலையான மற்றும் மன அழுத்தமில்லாத மதிப்பீட்டு முறையை உறுதி செய்கிறது.
பயிற்சி மற்றும் டியூஷன் மையங்களுக்குத் தடை: சமூக நீதிக்கு ஒரு திருப்புமுனை! இவற்றையெல்லாம் விட மிக முக்கியமான மற்றும் புரட்சிகரமான பரிந்துரை, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இணையாக, தனியார் பள்ளிகள் நடத்தும் அனைத்து கோச்சிங் சென்டர்கள் மற்றும் டியூஷன் சென்டர்களைத் தடை செய்ய வேண்டும் என்பதுதான். இந்த ஒரே ஒரு நடவடிக்கை, நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும். தற்போது பெருகிவரும், ஒழுங்குபடுத்தப்படாத இந்த கல்வி வணிகத்தால் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் சுரண்டப்படுவதை இது தடுத்து நிறுத்தும்.
கோச்சிங் சென்டர்கள் ஓய்வுபெற்ற அதிகாரிகளை நியமித்து, அதன் மூலம் பெற்றோர்களை ஈர்த்து, லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூலிக்கும் மிகப்பெரிய வணிகமாக மாறிவிட்டன. கல்வியின் இந்த முழுமையான வணிகமயமாக்கல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த முக்கியமான தடையை அரசு எவ்வாறு சாத்தியப்படுத்தப் போகிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
Also Read : இனி முகவரி தேடி அலைய வேண்டாம்! வருகிறது ‘டிஜிபின்’… தபால் துறை தொடங்கி வைத்த புதிய புரட்சி!
நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான தீர்வு, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்களில் இல்லை, மாறாக அரசுப் பள்ளிகளில் கல்விக் கட்டமைப்பை முறைப்படுத்தி வலுப்படுத்துவதில்தான் உள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பி, கற்பித்தல் பணியை முடுக்கிவிட்டால், நமது அரசுப் பள்ளி மாணவர்களும் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளில் எந்தவித வெளி உதவியும் இன்றி எளிதாகத் தேர்ச்சி பெறுவார்கள்.
ஆசிரியர் காலிப் பணியிடங்கள்: தமிழக அரசுப் பள்ளிகளில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சமீபத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் 2768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மட்டுமே அறிவித்துள்ளது. காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்புவதன் மூலமே அரசுப் பள்ளிகளின் கற்றல் தரம் மேம்படும்.
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள்: 2023 நீட் தேர்வில், தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் 12,997 பேர் எழுதினர். அவர்களில் 3,982 பேர் (30.67%) தேர்ச்சி பெற்றனர். இது முந்தைய ஆண்டை விட 4% அதிகம். 7.5% உள் ஒதுக்கீடு காரணமாக பல அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது. இருப்பினும், பயிற்சி மையங்களை நம்பாமல், அரசுப் பள்ளிகளிலேயே தரமான பயிற்சி அளிக்கப்பட்டால், தேர்ச்சி விகிதம் இன்னும் அதிகரிக்கும்.
கல்வி நிதி நிறுத்திவைப்பு: மத்திய அரசு, தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு கல்வி நிதி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது மாநில கல்விக் கொள்கையை விரைந்து அமல்படுத்த வேண்டிய அவசியத்தை மேலும் வலியுறுத்துகிறது.
மாநில கல்விக் கொள்கையை வெளியிடுவதிலும், அமல்படுத்துவதிலும் ஏற்படும் தாமதம் வெறும் நிர்வாகச் சிக்கல் மட்டுமல்ல; இது தமிழக இளைஞர்களின் எதிர்காலத்திற்கே இழைக்கப்படும் துரோகமாக ஆகிவிடும். மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், அது சமச்சீர் கல்வியை விட, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இருக்கும். மேலும், தேசிய அளவில் தமிழ்நாடு முன் உதாரணமாகத் திகழும் வாய்ப்பும் ஏற்படும். தமிழ்நாடு அரசு இந்த முக்கிய கல்விக் கொள்கையை உடனடியாக வெளியிட்டு, அதை அமல்படுத்த முன்வர வேண்டும்.” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &