காவல் நிலையத்தையே காக்க முடியாத திமுக ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? – இபிஎஸ் கடும் கண்டனம்!

0
11
After a shocking police station attack near Thirumangalam, EPS asks Stalin whether the DMK can ensure public safety if even police stations are under threat.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் நேற்று இரவு புகுந்த முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள், “எங்கள் உறவினர்களை ஏன் கைது செய்தீர்கள்” எனக் கேட்டு, காவல் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் இரவுப் பணியில் இருந்த தலமைக் காவலர் பால் பாண்டியை தாக்கிவிட்டு அவர்கள் தப்பிவிட்டனர்.

இதையறிந்த திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் இன்று காலை காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்ய முற்பட்டார். போலீஸார் அவரை வி.சத்திரப்பட்டி கிராமத்துக்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஆர்.பி. உதயகுமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் கிராம மக்களுடன் இணைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக ஆட்சியில் காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை. காவல் நிலையத்தையே காக்க முடியாத முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்? மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, காவல்துறையால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம். ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை. தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை.

முதல்வர் ஸ்டாலினின் நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான். உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா முதல்வரே? காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன், மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &