
தமிழ்நாடு அரசு பொதுமக்களின் குறைகளை நேரடியாக பெற்றுக்கொண்டு தீர்க்கும் நோக்கில் “முதலமைச்சரின் முகவரி” (CM Cell) என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. ஆனால், அந்த போர்ட்டலின் செயல்பாடு குறித்து சமீபத்தில் பல்வேறு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி DT Next நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது, தாங்கள் பதிவு செய்யும் புகார்கள், யாருக்கு எதிராக அளிக்கப்படுகிறதோ, அதே அதிகாரிகளிடமே விசாரணைக்காக அனுப்பப்படுகிறது. இதனால், அந்த போர்ட்டல் உண்மையில் குறைகளை தீர்க்கும் வகையில் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
புகார்தாரர்களின் அனுபவம்
சமூக ஆர்வலர் செந்தில், சமீபத்தில் மூன்று புகார்களை முதலமைச்சரின் முகவரி போர்ட்டல் மூலம் பதிவு செய்தார். அந்த மூன்றும், அவர் குற்றம்சாட்டிய அதே அதிகாரிகளுக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டன. இது குறை தீர்க்கும் அமைப்பின் நோக்கத்தையே சிதைக்கும் என்று அவர் கூறுகிறார்.
மேலும், மே 20 அன்று செந்தில், ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலைய போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை மற்றும் கடமையில் அலட்சியம் காட்டியதாக புகார் அளித்தார். இந்த புகார் போரூர் உதவி ஆணையருக்கு அனுப்பப்பட்டது. விதிகளின்படி, இந்த வகை புகார்களை விசாரிப்பது அவரின் பொறுப்பு.
Also Read : திட்டமிடல் இல்லாத திமுக அரசு – தடம் புரளும் சென்னையின் வளர்ச்சி! புயலாக கிளம்பும் EPS விமர்சனம்!
போரூர் உதவி ஆணையர் செந்திலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளார். செந்தில், “முறையான சம்மன் வழங்கப்பட்டால் மட்டுமே வருவேன்” என்று பதிலளித்துள்ளார். அதற்குப் பதிலாக, புகார் அளித்த அதே காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவருக்கு சம்மன் அனுப்பி, ஜூன் 18 அன்று ஆவணங்களுடன் விசாரணைக்கு வருமாறு கேட்டார். இது சட்டப்படி சரியான செயல்முறை அல்ல, மாறாக மிரட்டலாகவே உணர்ந்ததாக செந்தில் கூறுகிறார்.
இதையடுத்து, ஜூன் 20 அன்று செந்தில் மேல்முறையீடு செய்தார். இந்த முறை போரூர் உதவி ஆணையரின் பெயரையும் புகாரில் சேர்த்தார். ஆனால், இந்தப் புதிய புகாரும் மீண்டும் அதே அதிகாரிக்கே அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார். இது அதிகார துஷ்பிரயோகம், நீதிமுறைக்கு எதிரானது என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மற்ற துறைகளிலும் அதே நிலை
இதேபோன்று, 65 மாதங்களுக்கும் மேலாக போலி பட்டா ரத்து செய்யாதது குறித்து ஸ்ரீபெரும்புதூர் RDO-வுக்கு எதிராக ஜூன் 17 அன்று புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரும் அதே RDO-வுக்கே விசாரணைக்காக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி புகார்தாரரான செந்தில் கூறுகையில், “நான் முதலில் நேரடியாக RDO-வை அணுகினேன். நடவடிக்கை எடுக்கப்படாததால் போர்ட்டலில் புகார் அளித்தேன். ஆனால், அது மீண்டும் அவரிடமே சென்றது” என்றார்.
அதிகாரிகள் விளக்கம்
முதலமைச்சரின் முகவரி உதவி மையத்தை (1100) தொடர்பு கொண்டபோது, “எல்லா புகார்களும் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படுவதில்லை. சில சமயங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது உயர் அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்” என்று ஊழியர் ஒருவர் விளக்கினார். முதலமைச்சரின் முகவரி பிரிவின் சிறப்பு அதிகாரி பி. அமுதாவை இ.ஆ.ப-வை தொடர்புகொள்ள முயற்சித்தும் பதில் கிடைக்கவில்லை.
Also Read : தகுதியற்ற அரசியல் ஆலோசகர்களின் பெருக்கம்: இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு புதிய சவால்!
“முதலமைச்சரின் முகவரி” – எப்படி செயல்படுகிறது?
“முதலமைச்சரின் முகவரி” (Mudhalvarin Mugavari) எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்வோம். பொதுமக்களின் குறைகளை நேரடியாக பெற்றுக்கொண்டு, விரைவாக தீர்வு காணும் நோக்கில் “முதலமைச்சரின் முகவரி” என்ற இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த போர்ட்டல், மக்கள் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் தங்கள் குறைகளை பதிவு செய்து, அதன் நிலையை கண்காணிக்கவும், பதில்கள் பெறவும் வசதி அளிக்கிறது. இணையதளம், மொபைல் செயலி, 1100 என்ற இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், அஞ்சல் என பல்வேறு வழிகளில் புகார்கள் அளிக்க முடியும்.
பொதுமக்கள் தங்கள் மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை பயன்படுத்தி போர்ட்டலுக்குள் சென்று, குறையை விரிவாக விவரித்து, படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு புகாருக்கும் தனிப்பட்ட Grievance ID வழங்கப்படுகிறது. இந்த ID மூலம், புகாரின் நிலையை “My Dashboard” பகுதியில் எளிதாக கண்காணிக்கலாம். புகாரின் நிலைமைகள், நடவடிக்கைகள் குறித்து SMS மற்றும் இணையதளம் வழியாக தகவல் பெறலாம்.
இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யும் போது, அந்தப் புகார்கள் யாருக்கு எதிராக இருக்கிறதோ, அதே அதிகாரிகளிடம் விசாரணைக்காக அனுப்பப்படுவது, குறைதீர்ப்பு முறையின் நேர்மையையும், நியாயத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. இது, “நீதி கிடைக்கும்” என்ற நம்பிக்கையை குறைக்கிறது.
வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம்
ஒரு அரசு அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமென்றால், அது வெளிப்படையாகவும், நியாயமாகவும் செயல்பட வேண்டும். ஆனால், புகாருக்கு உள்ளான அதிகாரியே தன் மீதான புகார் குறித்து விசாரணை செய்யும் சூழல் உருவானால், பொதுமக்கள் “நியாயம் கிடைக்கும்” என்ற நம்பிக்கையை இழக்க நேரிடும். இது, அரசு அமைப்பின் மீது ஏற்கனவே நிலவும் சந்தேகத்தையும், அவநம்பிக்கையையும் அதிகரிக்கிறது.
பழிவாங்கும் சூழல் – மக்கள் மனதில் பயம்
இந்த நடைமுறைகள், “பழிவாங்கும்” அல்லது “தொல்லை கொடுக்கும்” சூழலை உருவாக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் மீது புகார் அளித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயத்தில், இனிமேல் குறைகளை பதிவு செய்ய தயங்கலாம். இது, பொதுமக்கள் உரிமை மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
முடிவில்…
“முதலமைச்சரின் முகவரி” போன்ற குறை தீர்ப்பு அமைப்புகள், மக்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் அளிக்க வேண்டும். ஆனால், தற்போதைய நடைமுறைகள் இந்த நம்பிக்கையை பாதிக்கும் வகையில் உள்ளது.
With Input: DT Next
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry