
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியப் பெருமக்களே… அரசு ஊழியர்களே… நமது பொறுமையை அரசு பலவீனம் என்று நினைத்துவிட்டது. நேற்று (22.12.2025) அமைச்சர்கள் குழுவுடன் ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ(JACTO-GEO & FOTO-GEO) கூட்டமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தை, நமது உரிமைகளை மீண்டும் ஒருமுறை பறிக்கும் முயற்சியாகவே அமைந்ததால், உடன்பாடு ஏற்படவில்லை.
பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒரு நாடகம்:
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண வேண்டிய நிதியமைச்சரும், கல்வி அமைச்சரும் அங்கே வெறும் “வேடிக்கை பார்ப்பவர்களாக” மட்டுமே அமர்ந்திருந்தனர். இது, ஒரு பேச்சுக்கு அழைத்தார்கள்!.. பேச்சு வார்த்தைக்காக அழைக்கவில்லை! என்பதுபோலத்தான் இருந்தது.
தேர்தலைச் சொல்லி திசைதிருப்பும் தந்திரம்:
“தேர்தல் ஆணையம் இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் தேதியை அறிவிக்கப்போகிறது; எனவே உங்கள் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்” என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியிருப்பது, கிராமங்களில் சொல்வார்களே – “ஒரு பேச்சுக்காகக் கூப்பிடுவது” – அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான். நான்கரை ஆண்டுகளாக முதலமைச்சருக்குத் தெரியாத கோரிக்கையா இன்று புதிதாகத் தெரியப்போகிறது?
ஐஏஎஸ் அதிகாரிகளின் பிடியில் மாநில அரசு?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஐஏஎஸ் அதிகாரிகளின் பிடியில் சிக்கிக்கிடக்கிறதா? மத்திய அரசுடனும் இணக்கமாக இருக்கும் அதிகாரிகள், மாநில அரசு ஊழியர்களின் நலன்களைத் திட்டமிட்டுப் புறக்கணிப்பதாகவே புகார் கூறப்படுகிறது. முதலமைச்சரின் வாக்கு வங்கி அவரது செயல்பாட்டில் இருக்கிறது; ஆனால் அதிகாரிகள் அதைச் சிதைக்கப் பார்க்கிறார்கள். இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் உணரவில்லை?
ஜனவரி 6: தமிழகமே ஸ்தம்பிக்கப் போகும் நாள்!
ஆறேகால் லட்சம் பேர் புதிய பென்ஷன் (CPS) திட்டத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். 2026-ல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) பெற்றுத் தருவது எம்மைப் போன்ற மூத்தோர்களின் கடமை.
* இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு.
* காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல்.
* பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்தல்.
என இழந்ததை மீட்டெடுக்கின்ற ஒரு புத்தாண்டாக 2026 அமையட்டும். தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணும் போதுதான், ஏமாற்றத்தின் எதிர்மறைத் தாக்கம் திமுக அரசைப் பலமாகத் தாக்கும்!
தவறை சுமந்து நிற்கும் திமுக அரசு!
“சங்கங்கள் தோற்றதாக உலக வரலாறே இல்லை. ஆனால், அரசு ஊழியர்களைப் பகைத்துக்கொண்டு மீண்டும் அரியணை ஏறியதாகத் தமிழகத்தில் வரலாறு இல்லை. கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றிலே பறக்கவிட்ட திமுக அரசு என்ற வரலாற்று தவறை சுமந்து நிற்கும்!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
