“பொய்யாலும், விளம்பரத்தாலும் ஆட்சி நிலைக்காது” – ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

0
12
EPS Slams Stalin Over 7.5% Internal Reservation Claim Ahead of TN Elections.
Former TN CM Edappadi K. Palaniswami accuses Stalin of false claims over 7.5% medical quota and criticises DMK’s debt-driven governance.

வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக் கொண்டு செயல்படும் ஸ்டாலின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, முதல்வர் ஸ்டாலின் பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் . சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை திமுக அழுத்தத்தால் கொண்டு வந்தது போன்ற ஒரு மிகப் பெரிய பொய்யை கட்டமைத்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்காக, மாணவர்களோ, பெற்றோர்களோ, எதிர்க்கட்சியினரோ கோராத போது, எனது மனதில் உதித்த இந்தத் திட்டத்தை நிறைவேற்ற, ஆளுநரின் ஒப்புதலுக்கு கால தாமதமானதால், அந்த நடப்பு கல்வியாண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள உரிமையை பயன்படுத்தி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டேன்.

‘சத்துணவு திட்டம் என்றால் எம்ஜிஆர்’, ‘தொட்டில் குழந்தை திட்டம் என்றால் ஜெயலலிதா’, 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்றால் எனது தலைமையிலான அரசு’ என்று எங்களது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஏற்கெனவே நான் முதல்வராக இருந்தபோது, சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியார் பங்களிப்புடன் அமல்படுத்தினோம். இந்தத் திட்டத்தையே உல்டாவாக்கிய முதல்வர், தான் புதிதாகக் கொண்டுவந்தது போல் தம்பட்டம் அடித்து வருகிறார்.

2021 முதல் நான்கரை ஆண்டு காலமாக தூங்கிவிட்டு, 5 லட்சம் கோடி கடன் வாங்கி, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கிவிட்டு, நிதியைப் பெருக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, ஆட்சி முடியும் தருவாயில் கடந்த 3 மாதங்களாக பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலேயே, அடிக்கல் நாட்டுவது; ஒப்பந்தம் கோருவது; மக்களின் வரிப் பணத்தில் விளம்பரம் தேடுவது போன்றவைகளால், தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.

தான் ஒரு முதல்வர் பதவி வகிக்கிறோம் என்ற எண்ணம் கூட இல்லாமல், வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக்கொண்டு செயல்படும் ஸ்டாலினின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது. `பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது’ என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வர உள்ளது. இனியாவது இதுபோன்ற பொய்யை கட்டமைப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிdசாமி கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry