
சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல், குண்டு வெடிப்புகள், உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. சகிப்புத்தன்மையின்மை தலைவிரித்தாடும் இந்த காலத்தில், அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இத்தகைய வன்முறை செயல்களுக்கு காரணமான மனநிலை மிகவும் ஆபத்தானது. இது மனிதகுலம் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்னையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது – அதுதான் தவறான எண்ணம், வெறித்தனம் மற்றும் அச்சம்.
பயங்கரவாதி எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், அவனது செயலை நியாயப்படுத்த என்ன காரணம் சொன்னாலும், பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தையும், மனிதகுலத்தின் உள்ளார்ந்த ஆன்மீக ஒற்றுமையையும் உணராததே அடிப்படை காரணம்.
Also Read : கோவிலுக்கு வந்த கடவுள்..! கண்டுகொள்ளாத பூசாரி..! பிறகு நடந்தது என்ன? உணர்ச்சிப்பூர்வ ஆன்மிக தத்துவக் கதை!
கலாச்சாரங்களுக்கு இடையேயான தொடர்புகள் இல்லாமலும், பிற கலாச்சாரங்கள் மீது தவறான எண்ணம் கொள்வதாலும், தனிநபர்களும், சமூகங்களும் பேரழிவை சந்திக்க நேரிடுகிறது. இளம் மனங்களில் இருந்து தவறான எண்ணங்களையும், பயத்தையும் நீக்க பல கலாச்சார மற்றும் பல மத நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
அனைத்து நாடுகளும் பல கலாச்சார மற்றும் பல மத கல்வியை ஏற்றுக்கொள்வதும், பன்முகத்தன்மையை கொண்டாடுவதும் மிகவும் முக்கியமானது. மற்ற மதங்களோ அல்லது கலாச்சாரங்களோ நல்லதல்ல என்று ஒரு குழந்தை நினைக்கும்போது, அந்தக் குழந்தை மற்ற உயிர்களை எடுக்கவும் அல்லது தவறான எண்ணம் காரணமாக தன்னையே இழக்கவும் தயாராகிறது.
பிற கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றிய அடிப்படையையாவது புரிந்துகொள்ள் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, ஒரு குழந்தை அனைவருடனும் தொடர்பையும், சொந்தமான உணர்வையும் வளர்க்க உதவும். தொடர்பு உணர்வு இருக்கும்போது, ஒருவரால் மற்றவர்கள் மீது வெறுப்பைக் கொள்ள முடியாது.
அனைத்து மதங்களும் அகிம்சை, அமைதியான வாழ்வு, நட்பு, கருணை மற்றும் சமூக சேவை ஆகிய கொள்கைகளை வலியுறுத்துகின்றன. இந்த பொதுவான கொள்கைகளை குழந்தையின் கல்வியில் ஆரம்பத்திலேயே முன்னிலைப்படுத்தி அறிமுகப்படுத்த வேண்டும். தவறான எண்ணங்களும், தவறான கருத்துக்களும் கொண்ட ஒரு சிறு பகுதியினர் கூட சமூகத்திற்கு ஆபத்தை விளைவிக்க முடியும்.
துரதிருஷ்டவசமாக, இன்று ஒவ்வொரு மதத்திலும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களும், மற்ற கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைப் பற்றி பயம் மற்றும் தவறான எண்ணங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டுபவர்களும் உள்ளனர். மூடிய மனப்பான்மை, குறைந்த தொடர்புகள் மற்றும் பிற கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களுடனான தொடர்பின்மை ஆகியவை இத்தகைய வன்முறைச் செயல்களைத் தூண்டும் சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும்.
தனிநபர்கள் கோபம் மற்றும் வெறுப்பை கையாள ஆன்மீக கல்வி உதவுகிறது. அவற்றை கட்டுப்படுத்த வழி இல்லாவிட்டால், கோபம் மற்றும் வெறுப்பு ஒருவரை தன்னுணர்வை இழக்கச் செய்யும். பகுத்தறியும் திறன் இழக்கப்படும்போது, சகிப்புத்தன்மை மற்றும் கருணை போன்ற மனித விழுமியங்கள் இழக்கப்படுகின்றன. உயிர்களுக்கான மரியாதை, எல்லா மனித விழுமியங்களுக்கும் அடிப்படையானது.
பயங்கரவாதிகளுக்கு உயிர்கள் மீது எந்த மதிப்பும் இல்லை. உண்மையில், பயங்கரவாதிகளுக்கு மதம், தேசியம் மற்றும் தத்துவம் எதுவும் இல்லை, ஏனென்றால் அவர்கள் காரணக் குருடர்கள். ஆன்மீக கல்வி இல்லாததால் ஒருபுறம் உள்நாட்டு மற்றும் சமூக வன்முறை ஏற்படுகிறது, மறுபுறம் தற்கொலை எண்ணங்கள் தூண்டப்படுகின்றன.
ஒருவர் விரக்தியாகவோ, கோபமாகவோ அல்லது வெறுப்பாகவோ இருக்கும்போது, சகோதரத்துவமும், அகிம்சையும் மேலோங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சமூகத்தில் தொடர்பு உணர்வு என்பது, மக்கள் அகிம்சை கொள்கைக்கு எவ்வாறு நோக்குநிலை கொண்டுள்ளார்கள் என்பதைப் பொறுத்தது. அகிம்சை, அன்பு, நட்பு மற்றும் கருணை போன்ற மதிப்புகள் ஒரு தனிநபரில் வலுவாகப் பதிந்திருந்தால், விரக்தி அல்லது ஏமாற்றங்களை சிறப்பாகக் கையாள முடியும்.
உலகெங்கிலும் இருந்து உணவு, கலை மற்றும் இசையை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதேபோல், உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அறிவு மற்றும் ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும். நாம் உலகமயமாக்கல் யுகத்தில் வாழ்கிறோம் – நாம் ஞானத்தையும் உலகமயமாக்க வேண்டும். உலகின் ஒரு பகுதியில் இந்த மனிதநேய விழுமியங்களான நட்பு, சகிப்புத்தன்மை மற்றும் கருணை இல்லாவிட்டாலும், உலகம் பாதுகாப்பான இடமாக இருக்காது, ஏனென்றால் அந்த பகுதி பயங்கரவாதத்தை வளர்க்கக்கூடும்.
வன்முறைச் சம்பவங்களின் மூல காரணத்தை தாமதப்படுத்தாமல் விரைவாக கண்டறிய வேண்டும். பெரும்பாலும், அமைதியை விரும்பும் மக்கள் சமூகத்தில் அமைதியை ஊக்குவிப்பதில் முனைப்பு காட்டுவதில்லை, முனைப்பு காட்டுபவர்களுக்குள் அமைதி இல்லை. இன்றைய சமூகத்தில் அமைதி மற்றும் வேகம் இரண்டும் தேவை.
இது இலட்சியவாதமாகத் தோன்றினாலும், இது சாத்தியமற்றது அல்ல. சரியான கல்வி மற்றும் நோக்குநிலை மூலம் இது சாத்தியமாகும். நட்பு, கருணை மற்றும் ஆக்கிரமிப்பின்மை போன்ற மனித விழுமியங்களைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதில் நம்மில் ஒவ்வொருவரும் பங்கு வகிக்க முடியும்.
நட்பு, கருணை போன்றவை அனைத்து கலாச்சாரங்கள், சமூகங்களுக்கும் மற்றும் மதங்களுக்கான பொதுவான நெறிமுறை. அவை சமூக முன்னேற்றம் மற்றும் ஆன்மிக வளர்ச்சியின் சங்கமத்தை பிரதிபலிக்கின்றன. மத மற்றும் சமூகத் தலைவர்கள் தங்கள் சமூகங்களில் பயங்கரவாத போக்குகளை எவ்வாறு குறைக்கலாம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஆன்மிகம் ஒரு தனிநபருக்கு எல்லா இடங்களிலும் இருக்கும் வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வை அளிக்கிறது. இந்த விழிப்புணர்வு மற்றும் மனித உணர்வை உயர்த்துவதன் மூலம் மட்டுமே மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளை ஒழிக்க முடியும்.
This article was written in English by spiritual guru Sri Sri Ravi Shankar. Image Source : Getty Images.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry