
3.30 Mins Read : கடையில் பொருட்கள் வாங்கும் போது, பாக்கெட், கேன்கள் அல்லது பாட்டிலில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை பார்த்திருப்போம். இன்றைய காலகட்டத்தில் நாம் வாங்கும் பெரும்பாலான பொருட்கள் பேக்கேஜ் வடிவத்தில் தான் கிடைக்கின்றன. பாக்கெட்டின் மேல் இரண்டு தேதிகள் எழுதப்பட்டிருக்கும். ஒன்று இந்த பொருள் இந்த மாதத்தில், இந்த தேதியில் தயாரிக்கப்பட்டது என்றும், இன்னொன்று இந்த தேதிக்குப் பிறகு காலாவதியாகும் என்பதையும் குறிக்கும். காலாவதி தேதிக்குப் பிறகு அந்த உணவை சாப்பிடவே கூடாதா? என்பதுதான் கேள்வியே.
பால், ரொட்டி, நம்கீன், மசாலா, கிரீம், பவுடர் போன்ற அனைத்து பேக் செய்யப்பட்ட பொருட்களின் பாக்கெட்டுகளிலும் காலாவதி தேதி அல்லது இந்த தேதிக்கு முன் பயன்படுத்துவது நல்லது என ஏன் எழுதப்பட்டுள்ளது என்று யோசித்திருக்கிறீர்களா? இந்தத் தேதி கடந்துவிட்டால், அந்தப் பொருள் கெட்டுப்போய் சாப்பிடுவதற்கு தகுதியற்றதாக மாறிவிடுமா? காலாவதியான பிறகு அந்த பொருளை பயன்படுத்துவதில் ஏதேனும் தீங்கு உண்டா?
உற்பத்தி மற்றும் காலாவதி தேதி என்றால் என்ன?
FSSAI விதிகளின்படி உணவு, அழகுசாதனப் பொருட்கள், பானங்கள் அல்லது நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களின் பாக்கெட்டில் அதன் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி எழுதப்பட்டிருக்க வேண்டும். உற்பத்தித் தேதி என்பது பொருள் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட தேதியாகும். அதேசமயம் காலாவதி தேதி என்பது இந்த தேதிக்குப் பிறகு பொருளைப் பயன்படுத்த வேண்டாம் என்று குறிப்பதற்கான தேதியாகும்.
இதுபற்றி சுருக்கமாகத் தெரிந்துகொள்ளலாம். “Best Before” or “Expiry” along with “Sell By” and “Use By” போன்ற இந்த வாசகங்கள் அனைத்தும் தனித்துவமான அர்த்தங்களை கொண்டவை. இந்த வார்த்தைகள் எதைக் குறிக்கின்றன என்பதை பார்க்கலாம்.
Sell By Date : குறிப்பிட்ட பொருளை எத்தனை நாள் காட்சிக்கு வைக்க வேண்டும் என்பதை தேதி மூலம் கடைகளுக்கு தெரியப்படுத்துவது. காலாவதி தேதிக்கு முன் குறிப்பிட்ட பொருளை வாங்க வேண்டும். அதுமட்டுமல்ல, இது பயன்பாட்டுத் தேதிக்கு மிகவும் நெருக்கமாகவே இருக்கும்.
Best Before or Expiry Date : குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கூறுகிறது. இந்த தேதிக்குப் பிறகும் நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்தலாம், ஆனால் அதன் தரம் குறைந்தே இருக்கும்.
Use By Date : பயன்பாட்டுத் தேதி என்பது இறுதி காலாவதி தேதி. இந்த தேதிக்குப் பிறகு நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் பொருட்கள் முழுமையாகத் தரத்தை இழந்து கெட்டுவிடும்.
இதுமட்டுமல்ல, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மேலும் சில விஷயங்களும் உள்ளன. வெவ்வேறு உணவுப் பொருட்கள் வெவ்வேறு காலாவதி ஆயுளைக் கொண்டுள்ளன. அதாவது, எல்லா உணவுப் பொருட்களும் ஒரே விகிதத்தில் கெட்டுப்போவதில்லை. மேலும், உணவு நிறுவனங்கள் காலாவதி தேதியை அதிகரிக்க Preservativeகளை பயன்படுத்துகின்றன. காலாவதி தேதிகள் எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை. இந்தத் தேதிகளை அவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப வரையறுக்க உணவு உற்பத்தியாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலாவதி தேதி முடிந்தவுடன் பொருட்கள் கெட்டுப் போகுமா?
எந்தவொரு பொருளானாலும் காலாவதி தேதி முடிந்தவுடனோ அல்லது அதற்கடுத்த நாட்களிலிலோ அதைத் தூக்கி எறிய வேண்டும் என்பதே உணவுத்துறை அதிகாரிகளின் அறிவுரையாக உள்ளது. ஏனென்றால் அதன் சுவை, வாசனை ஆகியவற்றில் சில வேறுபாடுகள் இருக்கலாம். துர்நாற்றம் வீசலாம்; பாலாக இருந்தால் திரிந்து போகலாம். தயிரின் சுவையில் வித்தியாசம் இருக்கலாம். மசாலா, உலர் பழங்கள், பிற உணவுப் பொருட்கள், எண்ணெய்கள், ஷாம்புகள், கிரீம்கள் போன்றவற்றை, அவை காலாவதியான பிறகும் 8-10 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இதனை உடனடியாக தூக்கி எறிய வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் இதற்கும் ஒரு வரம்பு இருக்கிறது.
இந்த விவகாரம் சட்ட நடவடிக்கையுடன் தொடர்புடையது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபோன்ற காலாவாதியான ஒரு பொருளை உட்கொண்டதால் மக்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி வழக்கு ஒன்று நீதிமன்றத்திற்கு வந்தது. அவர்கள் சம்மந்தபட்ட நிறுவனம் மீது வழக்கும் பதிவு செய்தனர். ஆனால் காலாவதி தேதியை கடந்த பிறகும் அந்த நபர்கள் பொருட்களை பயன்படுத்தியுள்ளது அதன்பிறகே தெரிய வந்தது. அதன் காரணமாகவே இதை சாப்பிட்ட நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் அந்த நிறுவனத்தின் மீது எந்த தவறு இல்லாத காரணத்தினால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
உணவு, மருந்து
மருந்துகளைப் போலவே உணவுப் பொருட்களும் காலப்போக்கில் கெட்டுப்போகின்றன. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும், இரண்டிற்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. மருந்துகளில் பயன்படுத்தப்படும் ரசாயனக் கலவை குறிப்பிட்ட நாள் கழித்து விஷமாக மாறுகிறது. அதனால்தான், ஒரு ‘காலாவதி தேதி’ உள்ளது, அதன் பிறகு மருந்தை உட்கொள்ளக்கூடாது, தூக்கி எறிய வேண்டும். இங்கே ‘பாதுகாப்பு’ தான் பிரச்சினை, ‘தரம்’ அல்ல.
உணவுப் பொருட்கள் படிப்படியாக கெட்டுப்போகின்றன மற்றும் அரிதாகவே காலப்போக்கில் விஷமாக மாறுகின்றன. அவை பெரும்பாலும் சுவை, நறுமணம் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கின்றன, அதாவது அவை காலப்போக்கில் ‘தரத்தை’ இழக்கின்றன. எனவே இங்கே, ‘தரம்’ தான் பிரச்சினை, ‘பாதுகாப்பு’ அல்ல. அதனால்தான்; பெரும்பாலான உணவுப் பொருட்களுக்கு காலாவதி தேதி இல்லை.
கவனிக்க வேண்டியவை
பேக்கேஜிங் அல்லது போக்குவரத்தின் போது, சில பாக்கெட்டுகள் சேதமாகியிருக்கும். கேன்களில் மெல்லிய விரிசல் அல்லது லீக்கேஜ் இருக்கும். சில்லறை விற்பனையாளர் அதை கவனித்திருக்க மாட்டார். இத்தகைய பாக்கெட்டுகள், ஈக்கள் மற்றும் கொறித்துண்ணிகளை ஈர்க்கின்றன, இது விஷமாக மாறக்கூடும். பாக்கெட்டுகள் சேதமாகியிருந்தால் உள்ளே இருக்கும் உணவு கெட்டுப்போகத் தொடங்குயிருக்கும் என்பதை உணர வேண்டும்.
சில கேன்கள் அல்லது பாக்கெட்டுகள் உப்பியிருக்கும். இதன் பொருள் என்னவென்றால், உணவில் தீவிரமான பாக்டீரியா செயல்பாடு நடக்கிறது. இது விஷத்தை ஏற்படுத்தும்.
பாக்கெட்டுக்கு வெளியிலேயே துர்நாற்றம் வீசினால், அதில் எலி சிறுநீர் கழித்திருக்கலாம். பாக்கெட் அல்லது டப்பாவில் கரும்புள்ளிகள் இருந்தால், அவை எலியின் மலத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்பதை அறிய வேண்டும்.
சில நேரங்களில், மேலே உள்ள சிக்கல்கள் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் கேன் அல்லது பாக்கெட்டைத் திறந்தவுடன், ஏதோ தவறாக இருப்பதை உணருவீர்கள். அத்தகைய சந்தர்ப்பத்தில், உங்கள் புலன்களைப் பயன்படுத்துங்கள். உணவு நிறமாற்றம் அடைந்ததாகத் தோன்றினால் அல்லது அவற்றின் மீது பச்சை அல்லது கருப்பு திட்டுகள் இருப்பதாகத் தோன்றினால், இது பெரும்பாலும் பூஞ்சை வளர்ச்சியாக இருக்கலாம்.
உணவில் அசாதாரண வாசனை இருந்தால், அது மிகவும் வலுவாக இருந்தால், உணவு புளிப்பாக மாறியிருக்க வாய்ப்புள்ளது. தோசை அல்லது இட்லி மாவு, தயிர் / யோகர்ட்டில் இது அடிக்கடி நிகழ்கிறது.
உணவுப் பொருட்கள் மெலிதானதாகவோ அல்லது ஒட்டும் தன்மையாகவோ இருந்தால், இது பாக்டீரியா அல்லது வைரஸ் மாசுபாட்டின் காரணமாக இருக்கலாம். இறைச்சியுடன் இது அடிக்கடி நிகழ்கிறது.
சந்தேகப்படும்படியான உணவின் ஒரு சிறிய மாதிரியை எடுத்து சுவைத்துப் பாருங்கள். இது வழக்கத்தை விட கசப்பான அல்லது புளிப்பு சுவையோடு இருந்தால், உள்ளே பாக்டீரியா செயல்பாடு இருக்கலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry