
நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த சென்னை மாநகரின் குடிநீர் கட்டண முறையில் ஒரு பெரும் மாற்றம் வரவிருக்கிறது. சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்(CMWSSB) ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்களை (Smart Water Meters) பொருத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இது குடிநீர் கட்டண வசூலை மேம்படுத்தவும், வருவாய் இழப்பைக் குறைக்கவும், அரிய மற்றும் விலையுயர்ந்த நீரை திறமையாகப் பயன்படுத்தவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Also Read : சென்னையை உலுக்கும் ஒலி மாசு: இரத்த அழுத்தம் முதல் மனநலம் வரை – தவிக்கும் போக்குவரத்து காவலர்கள்..!
ஒரு லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் – எங்கு, யாருக்கு?
DT Next நாளிதழ் செய்திப்படி, ஒரு லட்சம் ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்களை மெட்ரோ வாட்டர் பொருத்தவுள்ளது. இதில் கிட்டத்தட்ட முக்கால்வாசி மீட்டர்கள் (சுமார் 73,000) பல மாடி குடியிருப்புகளிலும் (multi-storey buildings) மற்றும் 2,500 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய தனி வீடுகளிலும் பொருத்தப்படும்.
* பல மாடி குடியிருப்புகளில் 25,677 இணைப்புகள்.
* பெரிய தனி வீடுகளில் 47,043 இணைப்புகள்.
* மீதமுள்ள மீட்டர்கள் வணிகம், பகுதி வணிகம், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்குப் பொருத்தப்படும்.
தற்போது, சென்னையில் 7.7 லட்சம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. அவற்றில் வெறும் 3.12% மட்டுமே மீட்டர் பொருத்தப்பட்டவை. அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, 24,095 இணைப்புகளில் மட்டுமே மீட்டர்கள் செயல்படுகின்றன. பெரும்பாலான பயனர்களுக்கு மீட்டர் இல்லாததால், பயன்பாட்டைக் கண்காணிப்பதிலும், உற்பத்திச் செலவுகளை மீட்டெடுப்பதிலும் சவால்கள் இருப்பதாக மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிலையான கட்டணம் vs. பயன்பாட்டு அடிப்படையிலான புதிய கட்டணம்:
தற்போது, வீட்டு உபயோக பயனர்களுக்கு தண்ணீர் பயன்பாட்டிற்கு ஒரு நிலையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்த திருத்தப்பட்ட கட்டணத்தின்படி, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட குடியிருப்பு வளாகங்களுக்கு, பயன்பாடு எவ்வளவாக இருந்தாலும், ஒரு குடியிருப்பு அலகுக்கு மாதத்திற்கு ரூ.105 வசூலிக்கப்படுகிறது.
ஸ்மார்ட் மீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பயன்பாட்டு அடிப்படையிலான கட்டண முறைக்கு நுகர்வோர் மாற்றப்படுவார்கள். இதன் கீழ், உண்மையான நீர் பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும். பயன்பாட்டு அடிப்படையிலான கட்டண விகிதங்கள் வெவ்வேறு அடுக்கு (slabs) அமைப்பைக் கொண்டுள்ளன:
* 10 கிலோ லிட்டர் (KL) வரை: கிலோ லிட்டருக்கு ரூ.6
* 11 KL முதல் 15 KL வரை: கிலோ லிட்டருக்கு ரூ.18
* 16 KL முதல் 25 KL வரை: கிலோ லிட்டருக்கு ரூ.28
* 25 KL க்கு மேல்: கிலோ லிட்டருக்கு ரூ.45
ஒரு கிலோ லிட்டர் என்பது ஆயிரம் லிட்டராகும். மீட்டர் பொருத்தப்பட்ட குடியிருப்பு இணைப்புகளுக்கு குறைந்தபட்ச மாதக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். “இந்த அடுக்கடுக்கான விலை நிர்ணயம், அதிகப் பயன்பாடு அதிகக் கட்டணங்களுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் தண்ணீரை வீணாக செலவழிப்பது குறையும்” என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
Also Read : குளிர்ந்த நீரா? வெதுவெதுப்பான நீரா? குடிப்பதற்கு எது சிறந்தது? – ஆச்சரியமான 6 உண்மைகள்!
உலக வங்கி நிதி மற்றும் வெளிப்படைத்தன்மை:
இந்த முன்முயற்சி உலக வங்கி நிதியுதவி பெறும் சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் (Chennai City Partnership Programme) ஒரு பகுதியாகும். இந்தத் திட்டம் வாரியத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து 15 நிர்வாகப் பகுதிகளையும் உள்ளடக்கியது, சமீபத்தில் சேர்க்கப்பட்ட பகுதிகளும் இதில் அடங்கும். முக்கிய நகரப் பகுதிகள் 73,608 இணைப்புகளையும், புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதிகள் 26,392 இணைப்புகளையும் கொண்டுள்ளன.
முன்மொழியப்பட்ட மேம்பட்ட மீட்டர் கட்டமைப்பு (AMI) ISO தரநிலைகளுக்கு இணங்கக்கூடிய மின்காந்த (electromagnetic) அல்லது அல்ட்ராசோனிக் (ultrasonic) மீட்டர்களைக் கொண்டிருக்கும். இந்த மீட்டர்கள் ஒரு மையப்படுத்தப்பட்ட பில்லிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படும். பயனர்கள், மொபைல் மற்றும் இணைய தளங்கள் வழியாக பயன்பாட்டைக் கண்காணிக்க முடியும்.
பொதுமக்களின் அச்சம்: கூடுதல் சுமை மற்றும் குழப்பம்!
தி. நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தைச் சேர்ந்த வி.எஸ். ஜெயராமன் கூறும்போது, “தனிப்பட்ட வீடுகளுக்கு வெவ்வேறு அளவிலான தண்ணீர் தேவை மற்றும் பயன்பாடு இருக்கும் என்பதால், இது அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். மெட்ரோ வாட்டர் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்திய பிறகு அனைவருக்கும் சமமாக பில் செய்தால், அது பெரிய பிரச்சனைகளை உருவாக்கும்,” என்று எச்சரித்தார்.
மேலும், ”மீட்டர் அமைப்பு எவ்வாறு செயல்படும், மெட்ரோ வாட்டர் எப்படி குறைபாடற்ற விநியோகத்தையும் வெளிப்படையான பில்லிங்கையும் உறுதி செய்யும் என்பது குறித்து சந்தேகங்கள் உள்ளன. இந்தத் திட்டம் நுகர்வோருக்கு பணத்தை மிச்சப்படுத்தினால், நாங்கள் வரவேற்போம்,” என்றும் ஜெயராமன் கூறினார்.
மாதூரைச் சேர்ந்த நாகப்பன் என்ற குடியிருப்பாளர் கூறுகையில், சொத்து வரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு கட்டணங்கள் அதிகரித்துள்ளன. குடியிருப்பாளர்களுக்கு சரியான முறையில் தண்ணீர் கிடைப்பதில்லை. “இந்த மீட்டர் அமைப்பு செயல்படுத்தப்பட்டால், எங்கள் நிலைமை மோசமடையும். இது எங்கள் மாத பட்ஜெட்டில் ஒரு கூடுதல் சுமையாக இருக்கும் என அஞ்சுகிறோம்,” என்று கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry