
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் கடந்த 5 ஆம் தேதி அவரது வீட்டிற்கு வெளியே கொடூரமாக வெட்டிபடுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட11 பேரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள காவல்துறையினர், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார் என கூறப்பட்டது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் என்ன? கொலைக்கு மூளையாக செயல்பட்டது யார்? கூலிப்படையை வழி நடத்தியது யார்? ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக எவ்வளவு பணம் கைமாறியது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வெளியான சிசிடிவியில் கத்தியோடு ஓடி வந்தவர் கைதான ராமு என்ற வினோத் என்று தெரியவந்துள்ளது.
இந்த ராமு, ரவுடி ஆற்காடு சுரேஷின் மாங்காடு கிளப்பில் ஊழியராக வேலை செய்தவர். ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் மற்றும் ராமுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல கைது செய்யப்பட்ட 11 பேரின் 6 மாத வங்கி பரிவர்த்தனைகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தியும், வேறு நபர்களின் இருசக்கர வாகனத்தில் வந்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருசக்கர வாகன உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read : அரசுப் பள்ளிகளை பலவீனப்படுத்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு பாராட்டு விழாவா? அண்ணாமலை சுளீர் கேள்வி!
ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழி வாங்கவே அவரது சகோதரர் பொன்னை பாலு, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில், கைதாகியுள்ள 33 வயதான அருள் தான், ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டது விசாரணையில், தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததும் அவர்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய திமுக வழக்கறிஞர் பிரிவில் நிர்வாகியாக உள்ளார். இவர் தனது நண்பர்கள் சிலரது உதவியுடன் ஆம்ஸ்ட்ராங்கை தொடர்ந்து கண்காணித்து வந்ததும், கடந்த 5ஆம் தேதி தனது திட்டத்தை அரங்கேற்றியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை வாங்கிக்கொடுத்ததும் திமுக பிரமுகரான வழக்கறிஞர் அருள் என்பதும் தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவம் முடிந்த பிறகு ஆயுதங்களை அருளிடம் தான் பொன்னை பாலு கூட்டாளிகள் ஒப்படைத்ததுள்ளனர்.
திருநின்றவூர் நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த திமுக கிளை செயலாளர் கலை எம். சீனிவாசன், சதீஷ், நரேஷ் ஆகியோரின் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததும் கண்பிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆயுதங்களை தனிப்படை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும், சதீஷ், நரேஷ், சீனிவாசன் ஆகிய 3 பேரையும் பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர் கொடுத்த திட்டத்தின் படிதான் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்டோர் கொலை திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய தேவையான ஆயுதங்களையும் அருள் தான் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங்கை தாக்கும்போது, மிஸ் ஆகக்கூடாது என்பதால் ரத்தம் அதிகமாக வெளியேறும் நரம்புகளை குறிவைத்து வெட்டுமாறு கூலிப்படையினருக்கு வழக்கறிஞர் அருள் திட்டம் வகுத்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் மற்றொரு வழக்கறிஞருக்கு தொடர்பு உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள், மறைந்த ஆற்காடு சுரேஷ் உடன் 15 ஆண்டுகள் உடனிருந்ததும், அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளை இவர் கையாண்டதும், இவர் ஆற்காடு சுரேஷின் உறவினர் என்பதும், திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் நண்பர்கள் சிலரின் உதவியோடு ஆம்ஸ்ட்ராங் செயல்பாட்டை அருள் முழுவதுமாக கண்காணித்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் திமுக நிர்வாகி மூளையாக செயல்பட்டதாக தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry