
460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான நமது பூமி, இன்று நாம் காணும் நிலைக்கு எப்படி வந்தது? எரிமலைகள், விண்கற்கள், பனி யுகங்கள் எனப் பல சவால்களைக் கடந்து உயிர்கள் தோன்றிய கதை ஒரு மாபெரும் பயணம். விண்வெளிப் புழுதி மேகத்தில் இருந்து ஒரு உருகிய பந்து, பின்னர் உயிர்கள் செழிக்கும் நீலக் கோளமாக மாறியது எப்படி என்பதை எர்த்.காம் இணைய இதழ் ஆங்கிலத்தில் விரிவாக எழுதியுள்ளது. அதை தமிழில் சுருக்கமாகப் பார்ப்போம்.
பூமிக்கு முந்தைய காலம்: சூரிய குடும்பத்தின் உருவாக்கம்
சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த பிரபஞ்சத்தில், நமது பூமி ஒரு புதுமையான கோள். நமது சூரிய குடும்பம் ஒரு நட்சத்திர வெடிப்பு (சூப்பர்நோவா) மூலம் உருவானதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அந்த மாபெரும் வெடிப்பின் அதிர்வு அலைகள், விண்வெளியில் பரவியிருந்த தூசி மற்றும் வாயு மேகங்களை ஒன்றாகச் சேர்த்து, ஈர்ப்பு விசையின் காரணமாகப் பாறைகளாகவும், பின்னர் சிறுகோள்களாகவும் மாறின. இந்தச் செயல்முறை, சேர்மானம் (Accretion) என்று அழைக்கப்படுகிறது. இப்படித்தான் நமது கிரகமும், சூரியனும் உருவானது.
புவியியல் காலம்: பூமியின் நாள்காட்டி
புவியியலாளர்கள் பூமியின் வரலாற்றை ஈயோன் (Eon), சகாப்தம் (Era), காலம் (Period), மற்றும் சகாப்தக் கூறு (Epoch) எனப் பிரித்துள்ளனர். நாம் தற்போது ஃபானரோசோயிக் ஈயோனில் உள்ள செனோசோயிக் சகாப்தத்தின், குவார்ட்டெர்னரி காலத்தின், ஹோலோசீன் சகாப்தக் கூறில் வாழ்கிறோம். பூமியின் நான்கு முக்கிய ஈயோன்களைப் பற்றிப் பார்ப்போம்.

1. ஹேடியன் ஈயோன் (460 – 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு): பூமியின் நரக காலம்!
இது பூமியின் ஆரம்ப காலம். இக்காலத்தில் பூமி உருகிய மாக்மா பந்தாக இருந்தது. தேயா (Theia) என்ற ஒரு கோள், பூமியின் மீது மோதியது. இந்த மோதலால் பூமியின் ஒரு பகுதி சிதறி, அதுவே நமது சந்திரன் உருவானதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
2. ஆர்க்கியன் ஈயோன் (400 – 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு): உயிர்களின் பிறப்பு!
லேட் ஹெவி பாம்பர்மென்ட் (Late Heavy Bombardment) எனப்படும் விண்கல் தாக்குதலுக்குப் பிறகு, பூமியின் மேலோடு திடமாக மாறியது. வளிமண்டலம் இல்லாத, உயிர்கள் வாழ முடியாத சூழல் அப்போது நிலவியது. சுமார் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் முதல் உயிரினங்களின் படிமங்கள் தோன்றின. இவை மிகவும் எளிய உயிரினங்கள். சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடலில் வாழ்ந்த நுண்ணுயிரிகள் ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்ஸிஜனை வெளியிடத் தொடங்கின.
3. புரோட்டோரோசோயிக் ஈயோன் (250 – 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு): பெரும் மாற்றங்கள்!
இது பூமியின் வரலாற்றில் மிக நீண்ட ஈயோன். சுமார் 230 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் குவியத் தொடங்கியது. இது கிரேட் ஆக்ஸிஜனேஷன் (Great Oxygenation) என்று அழைக்கப்படுகிறது. இதுவே பூமியில் முதல் பனி யுகத்திற்கு (Snowball Earth) வழிவகுத்தது. இந்த ஆக்ஸிஜன் கடலில் வாழ்ந்த பல ஆக்ஸிஜன் அற்ற பாக்டீரியாக்களுக்கு அழிவைக் கொண்டு வந்தது.

சுமார் 180 கோடி முதல் 80 கோடி ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் “போரிங் பில்லியன்” (Boring Billion) என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் பூமி நிலையாக இருந்தது. டெக்டோனிக் தகடுகள் பெரிய அளவில் நகரவில்லை, உயிர்கள் அதிகம் பரிணமிக்கவில்லை. எனினும், யூகாரியோட்டுகள் (யூகேரியோட்டுகள் – உட்கரு கொண்ட உயிர்கள்), பாசிகள் மற்றும் தாவரங்களின் ஆரம்ப வடிவங்கள் இக்காலத்தில் உருவானதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். டெக்டோனிக் தகடுகள் உருவானது உயிரினங்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்கியது.
4. ஃபானரோசோயிக் ஈயோன் (55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதல் தற்போது வரை): நமது நவீன பூமி!
இந்த ஈயோனின் தொடக்கம் கேம்ப்ரியன் எக்ஸ்ப்ளோஷன் (Cambrian Explosion) என்று அழைக்கப்படுகிறது. கடலில் ஊட்டச்சத்துக்கள் பெருகியதால், பலவிதமான புதிய உயிரினங்கள் தோன்றின. முதல் விலங்குகள் இக்காலத்தில் பரிணமித்தன. சுமார் 47 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள் கடலில் இருந்து நிலத்திற்கு வந்தன. சுமார் 10 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வேர்கள், இலைகள் மற்றும் தண்டுகளுடன் நாம் இன்று காணும் தாவரங்களைப் போல மாறின.
பெரும் கண்டங்கள் மற்றும் டைனோசர்கள்:
கோண்ட்வானா (Gondwana) மற்றும் பாங்கேயா (Pangea) போன்ற பெரும் கண்டங்களின் உருவாக்கம் மற்றும் உடைப்பு, பூமியின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவை காலநிலை மாற்றங்களுக்கும், உயிரினங்களின் பரவலுக்கும் வழிவகுத்தன. டைனோசர்கள் சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமியை ஆண்டன. டிரயாசிக், ஜுராசிக் மற்றும் க்ரிடேசியஸ் ஆகிய புவியியல் காலங்களில் இவை செழித்து வாழ்ந்தன.
மாபெரும் அழிவுகள் மற்றும் மனிதனின் தோற்றம்:
கேம்ப்ரியன் எக்ஸ்ப்ளோஷன் முதல் இதுவரை ஆறு மாபெரும் அழிவுகள் நிகழ்ந்துள்ளன. இவை உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றின. இந்த அழிவுகளுக்குப் பிறகு, தப்பிப்பிழைத்த உயிரினங்களிலிருந்து புதிய உயிரினங்கள் பரிணமித்து, நாம் இன்று காணும் உலகம் உருவானது.

மனிதர்கள் (ஹோமோ சேபியன்ஸ்) பூமியின் வரலாற்றில் மிக மிக அண்மையில் தோன்றியவர்கள். பூமியின் வயது 12 மணி நேரம் எனச் சுருக்கினால், மனிதர்கள் கடைசி 11 மணி நேரம் 59 நிமிடங்கள் 58 வினாடிகளில்தான் தோன்றியிருப்பார்கள்.
தற்போது நாம் வாழும் காலம் ஆந்த்ரோபோசீன் (Anthropocene) என ஒரு புதிய புவியியல் சகாப்தக் கூறாக அறிவிக்கப்பட வேண்டும் என்று சில விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மனிதர்கள் பூமியின் காலநிலையை மாற்றத் தொடங்கியதாலும், பிளாஸ்டிக் போன்ற பெரும் அளவிலான கழிவுகளை உருவாக்குவதாலும் இந்தப் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

பூமியின் வரலாறு தொடர்கிறது:
நாம் அறிந்தவரை, பூமிதான் உயிர்கள் வாழும் ஒரே கிரகம். ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி போன்ற கருவிகள் மூலம் விண்வெளியில் பூமி போன்ற கோள்கள் அதிவேகமாகக் கண்டறியப்பட்டு வருகின்றன. மற்ற பூமி போன்ற கோள்களைப் பற்றி நாம் அறிய அறிய, நமது நீலப் புள்ளியான பூமியின் வரலாற்றைப் பற்றியும் மேலும் அதிகமாகப் புரிந்துகொள்வோம்.
Source: Earth.com
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry