
மூத்த வழக்கறிஞரும், மூத்த அரசியலாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சிக்கிறேன் என்கிற பெயரில், அதிமுக தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறுகிறார் கனிமொழி. அழாத குறைதான்.
அதிமுகவை பற்றி ரொம்ப கவலைப்படுகிறார். தமிழ்நாட்டின் இளம் விதவைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள் என்று தலையை தலையை ஆட்டிக்கொண்டு அவ்வளவு கம்பீரமாக சொன்னீர்களே கனிமொழி..! இப்பொழுது உங்கள் அண்ணா ஆட்சியில் விதவைகள் எல்லாம் எங்கே போனார்கள்?

சரி! பரதேசிப் பண்டாரங்கள் என்று பாஜகவை இளக்காரமாக கூறும் இதே கனிமொழியின் தந்தை கருணாநிதி, தமிழ்நாட்டில் முதல் முதலாகப் பாஜகவுடன் கூட்டணி வைத்தாரே, அப்போது அது துரோகம் இல்லையா? நள்ளிரவில் கலைஞர் கைதின் போது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் மத்திய பாஜக அரசு கடுமையாகப் பேசி விடுதலை செய்தது; அப்போது இந்துத்வா உங்கள் பார்வையில் தெரியவில்லையா?
கனிமொழி அவர்களே! நீங்கள் இரண்டாவது முறை எம்.பி. ஆன இறுதியில், நியாயப்படி இல்லாமல், பாஜக ஆட்சியில், டெல்லியில் உங்களுக்கு பங்களா டைப் வீட்டை ஒதுக்கினார்களே அப்போதெல்லாம் உங்களுக்கு பாஜக இனித்ததா? அருண் ஜேட்லி உங்களுக்கு உதவியாக இருந்ததை மறந்து விட்டீர்களா? வைகோவுக்கூட 6வது முறையான இப்போதுதான் தனி பங்களா கிடைத்தது. இதை மறந்து பேசுகிறார் கனமொழி.
எடுத்ததற்கெல்லாம் தமிழ், தமிழ் என்று ஏதோ தமிழுக்குத் தாங்களே உயிர்த்தியாகம் செய்தது போல பேசிக் கொள்கிறீர்களே! உங்கள் குடும்பத்தில், தமிழ் தமிழ் என எப்போதும் தூக்கிக்கிட்டு வருகிறீர்களே..! இதே பாஜக தலைவர் மோடி தமிழுக்கு என்னென்ன செய்திருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உண்டாக்கினார். தமிழ்நாட்டின் வீர விளையாட்டு ஆன சிலம்பத்தை தேசிய அடையாளமாக மாற்றினார். மட்டுமல்லாமல் புதிதாகத் திறந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோலை நிறுவினார். மிக முக்கியமாக காசித் தமிழ்ச் சங்கத்தையும், காசிப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையையும் உண்டாக்கினார்.
தமிழைக் கௌரவமான இந்திய தேசிய மொழிகளில் ஒன்று என எங்கு சென்றாலும் இன்று வரை எடுத்துக் கூறுகிறார். குஜராத் சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கத்தையும் நிறுவினார். கேலா இந்தியா தேசிய விளையாட்டில் சிலம்பத்தைச் சேர்த்தார். Houston Universityல் செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மையத்தை நிறுவியவரும் மோடி தான் என்பதை மறந்து விடக்கூடாது.
அவரின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக திருக்குறள் 63 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. பாரதியாரின் பாடல்களை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்புச் செய்ய வைத்துள்ளார். ஐஏஎஸ்., ஐபிஎஸ் தேர்வுகளை தமிழில் எழுத ஒப்புதல் தந்தார். மத்திய ரிசர்வ் படைத் தேர்வுகளை இப்போது தமிழில் எழுத முடிகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களில், மருத்துவம் – பொறியியல் போன்ற படிப்புகளுக்கான பாடங்களை அந்தந்த மாநில மொழிகளிலே மொழிபெயர்த்து அதில் படித்து தேர்வு பெறும் வகையில் அனைத்தையும் சீர்திருத்தம் ஆக்கினார்.
அந்த வகையில், மருத்துவம்- பொறியியல் படிப்பிற்கான பாடங்களை தமிழிலும் மொழிபெயர்த்துத் தரும்படி பிரதமர் மோடி நீண்ட நாள் கேட்டும் கூட உங்கள் அண்ணன் முதல்வர் ஸ்டாலின் அதற்கு ஆவண செய்யவில்லை. இப்படி எல்லாம் இருக்க, உங்கள் திமுக அரசு தமிழுக்கு என்னதான் செய்தது. தமிழை வைத்து வளர்ந்து கொண்டார்கள், அவ்வளவுதான்.
ஏதோ தமிழ் என்றால் நாங்கள் தான் அதற்கு அத்தாரிட்டி என்பது மாதிரி, ஒரு புல்லையும் கூடக் கிள்ளி போடாமல் முழுக்க ஆங்கிலத்திலேயே அனைத்தையும் ஆக்கிவிட்டு, நீங்கள் இந்தி படிக்க திமுகவினர் பள்ளிகள் நடத்தும் நிலை. உங்கள் அண்ணன் மகள் பள்ளியில் கூட…! இங்கு தமிழ் கட்டாய பாட மொழியாக இல்லை. தமிழுக்கு திமுக என்ன செய்தது என்பதையாவது நீங்கள் மக்கள் முன் தெரிவிக்க வேண்டும். களவியல் புத்தகங்களை தமிழ் இலக்கியம் என கொண்டு வந்தது அதிகமாக உள்ளது.
Also Read : Edappadi Palaniswami Fires Back at Stalin Over AIADMK-BJP Alliance Criticism!
இதையெல்லாம் விட, காங்கிரஸும் திமுகவும் ஈழத் தமிழர்களை அந்தரத்தில் விட்டு அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தது, சமாதானப் பேச்சுவார்த்தை என்கிற பெயரில் ராணுவத்தை அனுப்பி வீணாக இந்தியப் பணத்தை நாசம் செய்தது, கச்சத்தீவை வழங்கியது, காவிரி – முல்லை நதிநீர்ப் பிரச்சினைகளை இன்னும் தீர்க்க முடியாமல் இருப்பதற்கும் காரணமான இருப்பது என உங்களை விடவா பாஜக – அதிமுக கூட்டணி துரோகம் செய்திருக்கிறது.
அரசியலைப் பொறுத்த அளவிற்கு யார் யாரோடு கூட்டணி சேர வேண்டும் என்பதற்கு அவர் அவர்களுக்கான உரிமை இருக்கிறது. இதில் எங்கே துரோகம் வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு என்று அரசியல் ரீதியான ஒரு அமைப்பு இருக்கிறது. கனிமொழி அவர்களே, உங்கள் தந்தையும் பண்டாரம் பரதேசி என்று விமர்சனம் செய்து கொண்டே பாஜகவுடன் கூட்டணி வைத்ததை மறைத்துப் பேசாதீர்கள்?
நீங்கள் வைத்தால் கூட்டு! மற்றவர்கள் வைத்தால் துரோகமா? அந்த பாஜக இருக்கப் போய் தானே முரசொலி மாறன் இலாகா இல்லாத மந்திரி ஆகி சிகிச்சைக்காக அமெரிக்கா போய் வந்தார். அவர் இறந்தபோது, பிரதமர் வாஜ்பாய் பெசன்ட்நகர் இடுகாட்டில் வந்து அவரைத் தகனம் செய்யும் வரை உடன் இருந்தார் என்பதை மறந்து விட்டீர்களா? அதற்கு மறுநாளே சந்தர்ப்பவசமாக நீங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓடிப் போகவில்லையா?
அதன் பிறகு ஈழத் தமிழருக்காக நாடகம் ஆடி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ராஜினாமா செய்து கொண்டு நீங்கள் வரவில்லையா? 1,50,000 அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று குவித்தவனுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சி நடத்துகிற திமுகவிற்கு, எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது. நீங்கள் செய்த பல பல துரோகங்களை விடவா இந்தக் கூட்டணி துரோகம் செய்து விட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி, கிராமத்தில் விவசாயி குடும்பத்தில் பிறந்து, உங்களை போன்று வாரிசு அரசியல் மூலம் வாராமல், ஒரு சம்சாரியாக படிப்படியாக வளர்ந்து இன்று எம்ஜியாரின் அதிமுகவை வழி நடத்துகிறார். நாளைய தமிழக முதல்வர். உங்கள் அண்ணன் ஸ்டாலினின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவார். இதுவே தமிழகத்தின் குரல்! தெய்வத்தின் குரல்!!
ராஜா வீட்டு கன்னுகுட்டிகளாக, நீங்கள், உங்கள் அண்ணன், உங்கள் அண்ணன் மகன் எல்லோரும், படியில் ஏறி வாரமல், திடீரென்று லிஃப்டில் ஏறி உயரே சென்று விட்டீர்கள். கட்சியின் அடிப்படைக்கு உழைத்தவன், ஜெயிலுக்கு போனவன் எல்லாம், அங்கும் இங்கும் ஏதும் இல்லாமல் திரிகிறார்கள் பாவம். ஸ்டாலின் திமுகவில் அதிமுக காரன்கள் நன்றாக வாழ்கின்றனர்(இப்போது அமைச்சர்களாக உள்ள முன்னாள் அதிகமுகவினர்). பணம் கொடுத்து எப்போதும் ஓட்டை வாங்கி விடலாம் என உங்களுக்கு அசட்டுத் திமிர், தைரியம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry