
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் கல்விச் சீர்திருத்தம் தொடர்பான கட்டுரையை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “மோடி அரசின் கல்வி கொள்கைகள் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுப்பியுள்ள கவலைகளை, கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் என்ற முறையில் முழுமையாக ஆதரிக்கிறோம். நமது கல்வி முறையின் அடித்தளத்தையே அச்சுறுத்தும் மத்தியமயமாக்கல், வணிகமயமாக்கல் மற்றும் வகுப்புவாதமயமாக்கல் ஆகியவற்றின் ஆபத்தான பாதையை, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
Also Read : எள்ளின் பயன்களும், மருத்துவ குணங்களும்! கருப்பு vs வெள்ளை எள்: எது சிறந்தது?
இந்தியாவில் கல்வி என்பது, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான பொதுப்பட்டியலில் இருந்து வருகிறது. இது மாநிலத் தேவைகளை திறம்பட நிவர்த்தி செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும், மத்திய அரசின் முடிவெடுக்கும் அதிகாரத்தை அதிகரிப்பது, வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் சமூகங்களின் பல்வேறு கல்வித் தேவைகளை புறக்கணிக்கிறது.
மத்திய கல்வி ஆலோசனை வாரியம் (CABE) கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக செயலற்று உள்ளது. இது மாநில அரசுகள் மற்றும் கல்வியாளர்களின் குரல்களை அமைதிப்படுத்துகிறது. ஒரு ஜனநாயகக் கல்வி முறையானது, ஒருதலைப்பட்ச முடிவுகளின் அடிப்படையில் அல்ல, ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்.
கல்வியை தனியார்மயமாக்குதல், வணிகமயமாக்குதல் ஆகியவை மிகவும் கவலைக்குரியவை. கல்வி என்பது அடிப்படை உரிமை. அது, விற்பனைக்கானதல்ல. கல்வியைத் தனியார்மயமாக்குவதுடன், பொதுப் பள்ளிகளுக்கு அரசின் ஆதரவை குறைப்பது அல்லது திரும்பப் பெறுவது என்பது, ஒரு சாரார் மட்டுமே தரமான கல்வியை பெற முடியும் என்ற சமத்துவமற்ற நிலையை உருவாக்குகிறது.
Also Read : பாத்திரம் துலக்கும் ஸ்பாஞ்சில் மறைந்திருக்கும் ஆபத்து..! எத்தனை நாட்களுக்கு ஸ்பாஞ்சை பயன்படுத்தலாம்?
SSA திட்டத்துக்கான நிதியை அளிக்கத் தயங்கும் அதே நேரத்தில், PM SHRI பள்ளிகளை மத்திய அரசு ஊக்குவிப்பது, தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு இடையிலான வேறுபாடுகளை மேலும் அதிகரிக்கிறது. பொருளாதாரப் பின்னணி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்தர, இலவச மற்றும் சமமான கல்வியைப் பெற உரிமை உண்டு என்பதை மத்திய அரசு மறந்துவிடக்கூடாது.
பாடப்புத்தக மாற்றங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்டதொரு சித்தாந்தத்தை மேலோங்கச் செய்வதன் மூலம், கல்வி வகுப்புவாதமயமாகி இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கல்வி என்பது பன்முகத்தன்மைக்கான இடமாக இருக்க வேண்டும், அரசியல் தூண்டுதலுக்கான கருவியாக இருக்கக் கூடாது, இருக்கவும் முடியாது. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பங்கு, ஒற்றுமையை வளர்ப்பதே தவிர, பிளவுபடுத்தும் கதைகளை பரப்புவது அல்ல.
யுஜிசியின் 2025 வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து சோனியா காந்தி எழுப்பிய கவலைகளையும் முழுமையாக ஆதரிக்கிறோம். கல்வி என்பது கூட்டாட்சி உணர்வுடன் போற்றப்பட வேண்டும். கல்வி தொடர்பான மத்திய அரசின் தற்போதைய முன்மொழிவு, உயர்கல்வி நிறுவனங்களின் சுயாட்சியை அச்சுறுத்துகிறது மற்றும் மாநில அரசுகளை ஓரங்கட்டுகிறது. கல்வி என்பது மாணவர்களுக்கு அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும்.
Also Read : எப்பவும் கவலையா, பதற்றமாவே இருக்கா? இதை செஞ்சா மன அழுத்தத்துக்கும் குட் பை சொல்லலாம்..!
இந்தியாவின் பொதுக் கல்வி முறையின் தொடர்ச்சியான அழிவு அல்லது இறங்குமுகத்துக்கு முடிவு கட்டியாக வேண்டிய நேரம் இது. மாநில அரசுகள், கல்வியாளர்கள் அடங்கிய பரவலாக்கப்பட்ட மற்றும் உள்ளடக்கிய கொள்கையை உருவாக்க வேண்டிய தருணமிது. நிதி தடையாக இல்லாமல், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்து, பொதுக் கல்விக்கான நிதியை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு அதன் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நமது குழந்தைகளின் எதிர்காலத்தையும், இந்தியக் கல்வி முறையின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
மாநில அரசுகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோருடன் ஜனநாயகப்பூர்வமான விவாதத்தில் ஈடுபடுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இந்தியாவின் பொதுக் கல்வி முறை மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். தேவையற்ற அரசியல் தலையீடுகளிலிருந்து விடுபட்டு, கல்வி சுதந்திரத்தையும், மாணவர்கள் கல்வி பெறும் உரிமைகளையும் பாதுகாப்பதில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry