சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 66 அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. 2021ம் ஆண்டு மே மாதம் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக நானும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.
அதேபோல, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எதிர்க்கட்சி கொறடாவாகவும், எஸ்.ரவி துணைக் கொறடாவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றக் கட்சியின் செயலாளராக அன்பழகன், துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
2022ம் ஆண்டு ஜூலை17-ல் ‘கட்சியின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ண்மூர்த்தியையும் நியமித்திருக்கிறோம்’ என சபாநாயருக்கு கடிதம் அனுப்பினோம். அதைத் தொடர்ந்து, ஐந்து முறை நினைவூட்டல் கடிதமும் அனுப்பினோம். ஆனால், சபாநாயகர் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகரிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்கள் தொடர்ந்து அ.தி.மு.க உறுப்பினர்களுடன் இருப்பதால், எதிர்க்கட்சியினர் விவாதங்களில் தலையிடுவதால், கட்சியினரால் திறமையாகச் செயல்பட முடியவில்லை. எனவே, கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அங்கீகரிக்கும்படி, சபாநாயகருக்கும், சட்டமன்றச் செயலாளருக்கும் உத்தரவிட வேண்டும். அதேபோல, இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry