
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அஇஅதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த 26ம் தேதி The Hindu ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்(சுருக்கமாக).
பெண்களின் சமூக வளர்ச்சி – நிலைமை என்ன?
தமிழக பெண்கள் இன்று வீடுகளில் மட்டும் அல்லாமல், வேலைவாய்ப்பு மற்றும் பொதுவாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் கடும் உழைப்பும், உரிமை மீதான விழிப்பும், தமிழ்நாட்டின் சமூக வளர்ச்சியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
திட்டங்கள் – அறிவிப்பும், நடைமுறையும்
திமுக அரசு பெண்களுக்கு பல திட்டங்களை அறிவிக்கிறது. ஆனால், அவை மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என்பது கேள்விக்குறி. திட்டங்களை உருவாக்குவது ஒரு பக்கம், அவற்றை மக்களுக்கு பயனுள்ளதாக செயல்படுத்துவது இன்னொரு பக்கம். இது அரசியல் விழிப்புணர்வுள்ள ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான உண்மை.
உதவித் திட்டங்களில் உள்ள குறைகள்
குடும்பத் தலைவிகளுக்கான மாத உதவித் திட்டத்துக்கு தமிழ்நாடு முழுவதும் 2.06 கோடி பெண்கள் விண்ணப்பித்தாலும், 1.06 கோடி பெண்கள் மட்டுமே 2024-இல் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு கோடி பெண்கள் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இது கிராமப்புற பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவண சிக்கல்கள், நிர்வாகத் தடைகள் ஆகியவை திட்டத்தின் செயல்பாட்டில் பெரும் தடையாக உள்ளன.
பல பெண்கள், குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில், உரிய ஆவணங்கள் இல்லாததால் திட்டத்தில் சேர முடியவில்லை. 9.24 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இந்த நிராகரிப்புகளுக்கு எதிராக முறையாக மேல்முறையீடு செய்துள்ளனர், இது பொதுமக்களிடையே நிலவும் விரக்தியையும், நிறைவேறாத எதிர்பார்ப்பையும் பறைசாற்றுகிறது.
இலவச பேருந்து, குழந்தை பராமரிப்பு – நடைமுறை சவால்கள்
பெண்களுக்கு இலவச பேருந்து பயண வசதி அறிவிக்கப்பட்டது. ஆனால், கிராமப்புறங்களில் பேருந்து சேவை குறைவாக உள்ள நிலையில், பாதுகாப்பு சவால்களும் தொடர்கின்றன. பெண் நடத்துநர்கள் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது பெரும்பாலும் காணப்படவில்லை.
அதேபோல், “அம்மா குழந்தை பராமரிப்பு கருவிகள்” போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டாலும், அவற்றில் புதிய பரிணாம வளர்ச்சி இல்லாததால், மக்களுக்கு அந்த உணர்வுப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. சுய உதவிக் குழுக்களுக்கான ஆதரவு திட்டங்களும் குறைந்த விகிதத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதா கொண்டுவந்த முன்னோடி திட்டங்கள்
ஜெயலலிதா தலைமையில் உருவாக்கப்பட்ட திட்டங்கள் மக்களிடையே நேர்மறையான நேரடி தாக்கத்தை ஏற்படுத்தின. ‘தொட்டில் குழந்தை திட்டம்’ மூலம் பெண் சிசுக்கொலைக்கு எதிராக புதிய மாற்றத்தை உருவாக்கினோம். 1990களில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பெண் குழந்தைகளை மரியாதையுடன் வளர்க்க வேண்டிய உணர்வை சமூகத்தில் ஏற்படுத்தியது. இதன் விளைவாக சிசுக்கொலை விகிதம் பல மாவட்டங்களில் 75% வீழ்ச்சி கண்டது.
அதேபோல், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் — பெண்களின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தின் நேரடி பதிலாக அமைந்தது. 2021-இல் 222 காவல் நிலையங்களாக வளர்ந்து, மகளிர் நீதிக்கான ஒரு முக்கிய அடையாளமாக அவை இருக்கின்றன. இவை அனைத்தும் குறைவான விளம்பரங்களோடு, செயல்பாட்டில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியவை.
Also Read : ‘பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்’? – உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
உள்ளாட்சித் தேர்தல் – பெண்களின் பங்கு
உள்ளாட்சித் தேர்தல்களில் 50% இடஒதுக்கீடு வழியாக பெண்கள் இன்று ஆயிரக்கணக்கில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகின்றனர். பெண்கள் வாக்காளர்களாக அல்ல, நிர்வாகத்திலேயே நுழைந்து, தங்கள் சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றனர். தாலிக்குத் தங்கம் திட்டம், பட்டதாரி பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன், தங்க நகையும் புரட்சித் தலைவி ஜெயலலிதா அரசு வழங்கியது. இது வெறும் நிதி உதவியாக இல்லாமல், பெண் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் திட்டமாகவும் இருந்தது.
அரசியல் நோக்கங்களை தாண்டிய திட்டங்கள்
அம்மா உணவகங்கள், சைக்கிள் திட்டம், இலவச பாடப்புத்தகங்கள், மாணவியர் ஊக்கத்தொகைகள் என புரட்சித் தலைவி ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு நேரடியாகக் காரணமானவை. இவை ஓர் இலட்சிய அரசியல் நோக்குடன் கூடிய திட்டங்கள்.
பெண்கள் விரும்புவது என்ன?
திமுக அரசு அறிவிக்கும் பல திட்டங்கள் விளம்பரங்களில் மட்டுமே பெரிதும் பேசப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் அதன் தாக்கம் குறைவு. எத்தனை அறிவிப்புகள் என்பதைவிட, எத்தனை பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்பதே முக்கியம்.
இன்றைய அரசியல் சூழலில், பெண்கள் உண்மையான அதிகாரம் பெற வேண்டுமானால், ஆட்சியின் நோக்கம், செயல் திறன், மற்றும் நேர்மையான திட்டமிடலே அவர்களுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கும். அரசியல் வாக்குறுதிகள் மட்டுமல்ல, நடைமுறை மாற்றங்கள் வேண்டும் என்பதே பெண்களின் விருப்பம்.
தமிழாக்கம் : அம்மா கோபி, மூத்த ஊடகவியலாளர், அஇஅதிமுக ஐ.டி.விங். நிர்வாகி.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry