
அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானதால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இது எதிர்பாராத பின்னடியாக மாறியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டில் பதற்றம் அதிகரித்துள்ளது. திமுகவை நம்பியுள்ள சிறிய கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் திமுக கூட்டணிக்குள் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துவிட்டதால், கூடுதல் தொகுதிகளை இனி எப்படி கேட்கமுடியும் என்ற கவலை திமுக கூட்டணிக் கட்சிகளை அப்பிக்கொண்டுள்ளது. கடந்த மாதம் 10ம் தேதி வரை தமிழ்நாட்டிலுள்ள சிறிய கட்சிகளுக்கு, அதிமுக, திமுக, பாஜக, தவெக என 4 விதமான கூட்டணி வாய்ப்புகள் இருந்தன.
❖ விஜய்க்கு உள்ள வாய்ப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடைய அரசியல் சாணக்கியத்தனத்தின் வெளிப்பாடாக, ஏப்ரல் 11ந் தேதி அதிமுக – பாஜக கூட்டணி இறுதியான நிலையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிறிய கட்சிகளுக்கான வாய்ப்பு, அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என இரண்டாகச் சுருங்கிவிட்டது.

விஜய்யின் த.வெ.க., அதிமுக கூட்டணியில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே தெரிகிறது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் ஒற்றை இலக்கு நிறைவேற இது ஒன்றுதான் அக்கட்சிக்கான வழி. மேலும், கட்சியின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டால், விஜய்க்கு அதிமுக – பாஜக கூட்டணிதான் ஒரே வாய்ப்பாக இருக்கும். தனித்து நிற்பது நிலைபேறில்லாத எதிர்காலம் என்பதாலேயே, த.வெ.க. அதிமுக பக்கம் நகர வாய்ப்பு அதிகம்.
❖ அழுத்தம் கொடுக்கிறதா சிபிஐஎம்?
அதிமுக, தவெக என கூட்டணிக்கான வாய்ப்புகள் இருந்தவரை, தங்கள் பேர வலிமையை அதிகப்படுத்தலாம் என்று திமுக கூட்டணி கட்சிகள் நினைத்திருந்தன. குறைவான தொகுதிகளை கொடுப்பதாக இருந்தால் தாங்கள் அதிமுக அல்லது தவெக பக்கம் சென்றுவிடுவோம் என திமுகவுக்கு போக்குகாட்டின. அதன் வெளிப்பாடாகவே தங்களுக்கு குறைந்தது 25 தொகுதிகள் வேண்டும் என விசிக நிர்வாகிகள் வெளிப்படையாகவே வலியுறுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மொத்தமாக மவுனித்துவிட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் பொறுப்பேற்ற பிறகு, திமுக ஆட்சியின் அவலங்களில் ஒரு சிலவற்றை சுட்டிக்காட்டி பேசிவருகிறார். கொடுத்தால் போதும் என்ற மன நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசனும், கூடுதல் இடங்களை பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகமும் உள்ளனர். இதற்காகவே சண்முகம் அவ்வப்போது திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கிறார்.
❖ அதிகாரத்தில் பங்கு கேட்கும் காங்கிரஸ்
காங்கிரஸ் தரப்பிலும் கூடுதல் தொகுதிகள், கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கைகள் எழுகின்றன. 72 தொகுதிகள் கேட்டுப்பெற வேண்டும் என காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 2026ல் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் மாநில செயலாளர் ஏ.வி.எம்.ஷெரிஃப் போஸ்டர் ஒட்டினார். இதற்கு ஒருபடி மேலாக, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவருமான கே.ஆர். ராமசாமி, “நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்தைச் சொல்கிறோம். எங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என தெரிவிப்பதில் தவறில்லை. இதில் நாங்கள் பின்வாங்கவில்லை.” எனத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.
❖ திமுகவோடு இரண்டறக் கலந்துவிட்ட மதிமுக
2006 – 2011ல் கருணாநிதி தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. காங்கிரஸ் தயவில் திமுக மைனாரிட்டி ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது, அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, ஆட்சியில் பங்கு கோரினார். ஆனால் கருணாநிதி அதை கடைசிவரை ஏற்கவில்லை. அதன் நீட்சியாகவே தற்போது ஆட்சியில் பங்கு என்ற கருத்தை காங்கிரஸ் கட்சியினர் வலுவாக முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
மதிமுக-வைப் பொறுத்தவரையில், திமுகவோடு இரண்டறக் கலந்துவிட்டது. அக்கட்சிக்கென எம்.பி.க்களோ, எம்.எல்.ஏ.க்களோ கிடையாது. வரும் தேர்தலில் திமுக கொடுக்கும் ஒன்றிரண்டு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில்தான் அக்கட்சியினர் போட்டியிட்டாக வேண்டும்.
❖ அச்சத்தில் திருமாவளவன்
விசிக-வைப் பொறுத்தவரை, திமுகவின் ஒரு அணி போல செயல்படத்தொடங்கிவிட்டதாக விமர்சனம் இருக்கிறது. ஆட்சிக்கு எதிராக காலையில் மென்மையாக தோழமை சுட்டினால், மாலையில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம், சனாதன சக்திகள் எங்கள் கூட்டணிடை உடைக்க முயற்சிக்கின்றன என திருமாவளவன் தன்னிலை விளக்கம் கொடுப்பார். இது தொடர்ந்து நடந்து வருகின்றது. திமுக, தனது கட்சியை உடைத்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகவும் திருமாவளவன் அடங்கிச் செல்லலாம் என்றே கூறுகின்றனர்.

கடந்த தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு திமுகவிடம் அனுமதி வாங்க திருமாவளவன் படாதபாடுபட்டார். ஒருவழியாக 6 தொகுதிகள், தனிச்சின்னம் என திருப்தி அடைந்தது விடுதலை சிறுத்தைகள். மிகக்குறைவான தொகுதிகளை பெற்றுவிட்டதாக அப்போதே மனக்குமுறல் இருந்தது. மீண்டும் அதிமுக – பாஜக அணி வெல்லக் கூடாது, எனவே கொடுத்த தொகுதியை வாங்கிக்கொள்ளுங்கள் என விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை திமுக சமாதானப்படுத்தியது.
❖ அதிமுகவின் வியூகத்தில் சிதைந்த திமுக கூட்டணி
இந்த நிலையில், அதிமுக என்றதொரு வாய்ப்பு தங்களுக்கு உள்ளது என சுட்டிக்காட்டி, கடந்த ஒரு வருடமாகவே 2026 தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும் என, திமுக கூட்டணி கட்சிகள் காய் நகர்த்த ஆரம்பித்தன. அதிமுக – பாஜக கூட்டணி இறுதியானதால் அந்தக் கனவும் இப்போது கலைந்து போய்விட்டது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக என்ற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதேநேரம், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் வந்தாலும் ஏற்கும் நிலையில்தான் அதிமுக உள்ளது.
மற்றொரு வாய்ப்பென்றால் அது தவெக தான், ஆனாலும், அரசியலுக்குப் புதியவரான விஜய்யை நம்ப திமுக கூட்டணி கட்சிகளுக்கு தைரியம் யாருக்கும் இல்லை. அரசியலுக்கு புதிய வரவான த.வெ.க., வாக்கு வங்கி நிரூபிக்கப்படாத கட்சியாக இருப்பதால், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுகவை நம்பியே இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
திமுகவை நம்பியே அரசியல் நடத்த வேண்டிய கட்டயாத்தில் உள்ளதை மறைக்கும் விதமாகத்தான், “கூட்டணி தர்மத்துக்காகவே பெரிய வாய்ப்புகளை தருவதாக சொன்ன அதிமுக, தவெக- வின் கூட்டணி அழைப்புகளை நிராகரித்தேன்” என திருமாவளவன் பேசி வருகிறார்.
❖ கொடுக்கும் தொகுதிகளை பெற வேண்டிய கட்டாயம்
கடந்த காலங்களில் தேர்தல் நெருங்கும் வரையில் கூட்டணி கணக்குகள் மாறிக் கொண்டே இருக்கும். அதனால் சிறிய கட்சிகள் பேர வலிமையின் மூலம் கூடுதல் தொகுதிகளை பெறும் சூழல் இருந்தது. தற்போது தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக – பாஜக கூட்டணி அமைந்து விட்டது. இதனால், பாஜக-வை எதிர்க்கும் கட்சிகளால் அதிமுக பக்கம் இனி செல்லவே முடியாது. எனவே வழக்கம் போல திமுக கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு அமைதியாக போக வேண்டிய சூழலே இந்த முறையும் உருவாகியுள்ளது.
தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தது, அக்கட்சிகளின் நிர்வாகிகள் தொடங்கி அடிமட்டத் தொண்டர்கள் வரை வலுவானதொரு உறவை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பாமாக அமைந்துவிட்டது. இதன் மூலம் இருகட்சியினரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற ஏதுவான சூழல் உருவாகத் தொடங்கிவிட்டது. இதுபோன்றதொரு உறவை மேம்படுத்தும் நோக்கத்துடனேயே, விஜய்யின் த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகத் தெரிகிறது. ஒன்றிரண்டு மாதங்களுக்குள் அதிமுக – பாஜக கூட்டணியில் த.வெ.க., உள்பட சில முக்கிய கட்சிகள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திமுகவுக்கு நேரடியான சவாலாக மாறும். திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கூட்டணியாகவே இருக்கும்.
கட்டுரையாளர் : ‘அம்மா’ கோபி, மூத்த ஊடகவியலாளர்.
With Input from Indhu Thamizh Thisai.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry