
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான கோலி, 14 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி, பல சாதனைகளை படைத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோலி, இந்திய அணிக்காக டெஸ்ட்டில் அந்த நீல நிறத் தொப்பியை அணிந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. உண்மையாக சொல்லப்போனால் நான் இப்படியொரு பயணத்தை கற்பனை செய்து கூட பார்த்தது இல்லை. நான் நிறையவே சோதிக்கப்பட்டிருக்கிறேன், அதன் வழி நிறைய மேம்பட்டிருக்கிறேன். நிறைய கற்றிருக்கிறேன். இதையெல்லாம் என் வாழ்க்கை முழுமைக்கும் வைத்துக் கொள்வேன்.

வெள்ளை உடை அணிந்து ஆடுவதில் தனிப்பட்ட முறையில் ஒரு ஆழ்ந்த திருப்தி இருக்கிறது. கடினமான நீண்ட பயணத்துக்கு இடையே யாருடைய கண்ணிலும் சிக்காமல் இருக்கும் சின்னச்சின்ன நற் தருணங்கள் எப்போதும் என்னுடன் இருக்கும்.
நான் இப்போது டெஸ்ட்டிலிருந்து விலகுகிறேன். இது சுலபமான முடிவு அல்ல. ஆனால், இதுதான் சரியான முடிவு என நினைக்கிறேன். நான் இந்த ஆட்டத்துக்காக என்னுடைய எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறேன். பதிலுக்கு இந்த ஆட்டமும் நான் நம்பியதை விட நிறைய விஷயங்களை எனக்குக் கொடுத்திருக்கிறது. இதயம் நிறைந்த நன்றிகளுடன் விடைபெறுகிறேன். என்னுடை டெஸ்ட் கரியரை எப்போதுமே ஒரு சிறு புன்னகையுடன் திரும்பிப் பார்த்துக் கொள்வேன்.’ எனக் கூறியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பிற்கு பிசிசிஐ நன்றி தெரிவித்துள்ளது.
𝗧𝗵𝗮𝗻𝗸 𝘆𝗼𝘂, 𝗩𝗶𝗿𝗮𝘁 𝗞𝗼𝗵𝗹𝗶! 🙌
An era ends in Test cricket but the legacy will continue FOREVER! 🫡🫡@imVkohli, the former Team India Captain retires from Test cricket.
His contributions to #TeamIndia will forever be cherished! 👏 👏 pic.twitter.com/MSe5KUtjep
— BCCI (@BCCI) May 12, 2025
123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 48.7 சராசரியுடன் 9,230 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 30 சதங்களும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் கோலி நான்காவது இடத்தில் உள்ளார்.
2018-19 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. கோலியின் தலைமையின் கீழ், இந்திய அணி 68 டெஸ்ட் போட்டிகளில் 40ல் வெற்றி பெற்றுள்ளது. இது அவர் அணியின் மீது கொண்டிருந்த தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
ஜூன் 20 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தார். ரோஹித் சர்மா ஓய்வு முடிவை அறிவித்த சில தினங்களிலேயே இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலியின் ஓய்வு இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோலியின் ஓய்வு இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தத்தின் முடிவாக கருதப்படுகிறது. அவரது அபாரமான ஆட்டம், சிறந்த தலைமைத்துவம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் மீதான அவரது ஆழமான தாக்கம் ஆகியவை என்றென்றும் நிலைத்திருக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry