
இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.
இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும், ஏழாம்பார்வை தனுசு ராசியிலும், ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது.
இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது. இதனை கணித்தவர் ஜோதிட முனைவர் கே.பி. வித்யாதரன். Part – 1, 2,3ல் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கான குருபெயர்ச்சி பலன்களை பார்த்துவிட்ட நிலையில், அடுத்த மூன்று ராசிகளுக்கான பலன்களை தெரிந்துகொள்வோம்.
Also Read : Guru Peyarchi 2025: மேஷம் முதல் மிதுனம் வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 1
Also Read : Guru Peyarchi 2025: கடகம் முதல் கன்னி வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 2
Also Read : Guru Peyarchi 2025: துலாம் முதல் தனுசு வரை..! குருபெயர்ச்சி பலன்கள் Part – 3
மகரம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025
எங்கும் எதிலும் முதலிடத்தைப் பிடிக்க நினைக்கும் நீங்கள் சிரமங்களையும் சிரித்த முகத்தோடு எதிர்கொண்டு வெற்றி காண்பவர்கள். உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) மே 14 முதல் 6-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். அலைச்சலும் வேலைச்சுமையும் உண்டு என்றாலும், குருவின் திருவருள் பார்வை உங்களுக்குப் பலவிதத்திலும் ஆதாயத்தை அளிப்பதாக அமையும். நண்பர்கள் சிலர் உங்களை விட்டு ஒதுங்கிப் போவார்கள்.
வீண் வதந்திகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சின்னச் சின்ன பகையும், மோதலும் ஏற்படும். கவனம் தேவை. சகோதர, சகோதரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். வயல், வாய்க்கால் விஷயமாக ஏதேனும் மனஸ்தாபம் இருந்தால் பேசி, தீர்த்துக் கொள்ளவும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்து கட்டுவீர்கள். ஊர் மக்களிடமும் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பழைய வழக்குகள் ஏதேனும் இருந்தால், அவை தொடர்பாக கவனம் செலுத்துவது அவசியம். வழக்கறிஞரை ஆலோசித்துச் செயல்படுங்கள். தானாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். பேச்சிலும், செயலிலும் நிதானம் அவசியம். இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும். சிறு சிறு வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதேபோல் வாகனம் பழுதுபட்டு, பயணம் தடைபடவும் வாய்ப்பு உண்டு.
குரு பகவானின் பார்வை பலன்கள்: குருபகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சந்தோஷம் நிரம்பியிருக்கும். பல வகையிலும் பணவரவு உண்டு. எல்லா விஷயங்களிலும் வெற்றி உண்டு. பேச்சில் நிதானம் பிறக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் இருந்த சந்தேகம் தீரும். தாம்பத்தியம் இனிக்கும். மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள்.
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தை குருபகவான் பார்ப்பதால், உத்தியோகத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டு. மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பணிச்சுமை உண்டு என்றாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளுக்குத் தெரியாமல், அலுவலகத்தில் கொடுக்கல் – வாங்கலில் ஈடுபட வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றி தலைமையிடத்தில் புகார் கூறும் எண்ணத்தை கைவிடவும். வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும்.
உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், வீடு வாங்குவது, கட்டுவது நல்லபடியே நிறைவேறும். அரைகுறையாக நின்றுபோன கட்டிட பணிகளை தற்போது, முழு மூச்சுடன் முடிப்பீர்கள். கட்டிட அனுமதி, வங்கிக்கடன் ஆகியவை தாமதமின்றி கிடைக்கும். தாய் வழிச் சொத்துகள் கிடைக்கும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
மேற்கொண்டு, கல்வியில் தன்னை மேம்படுத்திக் கொள்ள அவருக்கு அறிவுறுத்தவும். தள்ளிப்போன உங்கள் மகளின் கல்யாணத்தை விஐபிகள் முன்னிலையில் நடத்துவீர்கள். சம்பந்தியுடன் ஏதேனும் மனஸ்தாபம் இருந்தால், முதலில் பேசித்தீர்க்கவும். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். அடுத்தவரைப் பற்றி புகார் கூறித்தான் முன்னேற வேண்டும் என்பதில்லை. உங்கள் முயற்சிகள், ஆலோசனைகளை முன்வைத்து, வெற்றி பெறுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களுடைய ராசிக்கு சுகாதிபதியும், லாபாதிபதியுமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் பயணிப்பதால் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் உண்டு. தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். அதே நேரத்தில் திடீர் பண வரவும் உண்டு. வியாபார வகையில் லாபம் உண்டு. சிலருக்கு ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வாய்ப்பு இருக்கிறது. புதிய பங்குதாரர்களுக்கும், பழைய பங்குதாரர்களுக்கும் இடையே ஏதேனும் கருத்து மோதல் இருந்தால், அதை மேலும் வளர விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
நமது வெற்றி தோல்விக்கு, அவர்களின் பங்கும் உண்டு என்பதை மனதில் கொள்ளவும். ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் பயணிப்பதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். அமைதியாக இருந்து செயல்படுங்கள். திடீர் செலவுகள் இருக்கும். கண் வலி, கண் நோய் வர வாய்ப்பு இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மனைவி, தாய் ஆகியோரை அவ்வப்போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று தக்க வைத்தியம் பார்க்கவும்.
உங்களுடைய தைரிய ஸ்தானாதிபதியும், விரயாதிபதியுமான குரு பகவான் அவருடைய நட்சத்திரத்தில் 13.8.25 முதல் 01.6.26 வரை பயணிப்பதால் திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர சகோதரிகளால் நல்லது நடக்கும். அவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். விலையுயர்ந்த நகை வாங்குவீர்கள். அரைகுறையாக நின்று போன வீட்டை முழுமையாக முடிப்பீர்கள். கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் அரசு காரியங்கள் உடனே முடியும். எதிர்பாராத பணம் கைக்கு வரும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் தடைகள் உடைபடும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்து வழக்குகள் சாதகமாகும்.
வியாபாரத்தில், அடுத்தவரை நம்பி அகலக்கால் வைக்க வேண்டாம். பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். போட்டிகள் அதிகரிக்கும். உங்களின் கனிவான பேச்சால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. புதியதுறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்கள் எடுத்தெறிந்துப் பேசினாலும், ஆத்திரப்படாதீர்கள்.
உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பதவி, சம்பள உயர்வு தேடி வரும். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினித்துறையினர் உற்சாகத்துடன் காணப்படு வார்கள். கலைஞர்களுக்கு அரசு பாராட்டு உண்டு. இந்த குரு பெயர்ச்சி புதுப் புது யுக்திகையை கையாண்டு இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகிலுள்ள தென்குடித் திட்டையில் அருள்பாலிக்கும் வசிஷ்டேஸ்வரர் – உலகநாயகி அம்மனையும், குருபகவானையும் வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வழிபட்டு வாருங்கள். கோயில் அன்னதானப் பணிக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள். எல்லா வகையிலும் வெற்றி தேடி வரும்.
கும்பம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நீங்கள், பிரச்சினைகளின் ஆணி வேரை கண்டறிந்து அகற்றிவதில் வல்லவர்கள். உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) மே 14 முதல் 5-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் குருபகவான். இதுவரை 6-ல் அமர்ந்து, பல சிரமங்களை அனுபவிக்க வைத்த குருபகவான், இனி பல்வேறு யோகங்களை அருளப் போகிறார். மன நிலை, குணநிலை, உடல்நிலை அனைத்து வகையிலும் சந்தோஷம் உண்டு. பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டு. சொல்வாக்கு கூடும்.
சொத்துப் பிரச்சினையில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தடைகள் நீங்கி, மகளின் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெறும். அடகிலிருந்த வீட்டுப் பத்திரங்களை மீட்டெடுப்பீர்கள். இனி, உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். குலதெய்வம் கோயிலுக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், புது உத்வேகம் பிறக்கும். விஐபிகளின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். தோற்றப் பொலிவு கூடும். உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தை குரு பார்ப்பதால், தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அவர் வழிச் சொத்துகள் கைக்கு வரும். இதுவரை வறண்டு கிடந்த பணப்பை, இனி நிரம்பும். சேமிக்கும் அளவுக்கு பொருள் வரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
லாபஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், தொழில்-வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டாகும். புது முதலீடுகள் செய்வீர்கள். புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். இழுபறியான வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். மனைவிக்கு விலையுயர்ந்த பட்டுப் புடவை, தங்க ஆபரணம் வாங்கிக் கொடுப்பீர்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள். உங்கள் மீது இருந்த வீண் பழியும் அகலும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களுடைய தைரியஸ்தானத்துக்கு அதிபதியும் ஜீவனஸ்தானத்துக்கு அதிபதியுமான செவ்வாய் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் பயணிப்பதால் எல்லா வகையிலும் உங்களுக்கு வெற்றி உண்டு. எதிர்ப்புகள் எல்லாம் விலகும். நெடுங்காலமாக நடந்து வந்த சொத்து வழக்குகள் சாதகமாகும். விஐபிகள் அறிமுகமாவர்கள். விலை உயர்ந்த பொருள்கள், நகைகள் வாங்குவீர்கள்.
புது வேலை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குருபகவான் பயணிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். விலகிப் போனவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். எதிர்ப்புகள் விலகும். நம்பிக் கொடுத்த பணம் வரவில்லை என்று நீங்கள் வருந்திய நிலை மாறி இனி அந்தப் பணம் திரும்பி வரும். கௌரவ பதவிகள் கிடைக்கும்.
உங்களுடைய தன, லாபாதிபதியான குரு பகவான் தன்னுடைய நட்சத்திரத்தில் 13.8.25 முதல் 01.6.26 வரை பயணிப்பதால் திடீர் பணம் வரும். செல்வாக்கு உயரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த சொத்துகள், நகைகள் வாங்குவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.
குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் ஏமாற்றம், மனக்கவலைகள் வந்து போகும். வழக்கு சம்பந்தபட்ட விஷயங்களில் அவசரம் காட்டாதீர்கள். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தை குறையுங்கள். யோகா, தியானம் என்று மனதை செலுத்துங்கள்.
வியாபாரத்தில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள், கணினி, உணவு, என்டர்பிரைசஸ், கமிஷன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
உத்தியோகத்தில் உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள், இனி நட்புறவாடு வார்கள். வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடன் இருந்த பனிப்போர் நீங்கும். திடீரென்று ஊதியம் உயரும். தலைமையிடத்தின் பார்வை உங்கள் மீது படும். கணினித்துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். புதிய புராஜெக்டுக்கு தலைமையேற்கும் நிலை உருவாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். கலைஞர்களுக்கு, அரசாங்கப் பரிசு கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி லட்சியப் பாதையை நோக்கி பயணிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: சென்னை பாடியில் அமைந்துள்ள திருவலிதாயத்தில் வீராசன கோலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். தந்தையை இழந்த பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். சகல செல்வங்களும் கிடைக்கும்.
மீனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025
குறி விலகாத அம்பை போல் குறிக்கோள் தவறாத நீங்கள், கள்ளம் கபடமில்லாத வெள்ளையுள்ளம் கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) மே 14 முதல் 4-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் குருபகவான். இதுவரை 3-ல் இருந்தபடி பல விஷயங் களையும் முடக்கி வைத்திருந்தார் குருபகவான். இப்போது அவர், நான்காம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், தடங்கல்கள் நீங்கும். செயலில் வேகம் பிறக்கும். சகல வகைகளிலும் புதிய தொடர்புகளும், அவற்றால் ஆதாயங்களும் உண்டாகும். சில சவால்களை போராடி வெற்றி பெறுவீர்கள். மனதுக்குள் அவ்வப்போது இனம் புரியாத வெறுமை வந்து போகும்.
சில நேரங்களில் வாழ்வில் சலிப்பு ஏற்படலாம். செலவுகளும் தொடர்ந்து வரும். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகவும். காலில் அடிபடும். நீர், நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். சேமிப்புகள் கரையும். நட்பு வட்டாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றிய விமர்சனங்களுக்கு செவி சாய்க்காதீர்கள். நீங்கள் உங்கள் மனசாட்சிப்படி நல்லவராக நடந்து கொண்டால் போதும். மற்றவர்கள் உங்களைப் பாராட்ட வேண்டுமென நினைக்காதீர்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீடு – மனை வாங்குவதிலும் விற்பதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும்.
குரு பகவானின் பார்வை பலன்கள்: குருபகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால், பயணங்கள் உண்டு. அவற்றால் ஆதாயமும் ஏற்படும். எல்லா வகையி லும் செல்வாக்கு அதிகரிக்கும். குருபகவான் 10-ம் இடத்தைப் பார்ப்பதால், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். சிலருக்கு வேறு நிறுவனங்களிலிருந்தும் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
12-ம் இடத்தை குருபகவான் பார்ப்பதால், மறைமுகப் பணவரவு உண்டு. எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எல்லா வகையிலும் வெற்றி அடையும் யோகம் கூடிவரும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அரசியல்வாதிகள் ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களுடைய தன, பாக்யாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் பயணம் செய்வதால் எல்லா வகையிலும் வெற்றி உண்டு. உங்க வார்த்தைக்கு மரியாதை கூடும். அதிகார பதவியில் உட்காருவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் பயணிப்பதால் செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணங்களும் உண்டு. ஞாபக மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும்.
உங்களுடைய ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குரு பகவான் அவருடைய நட்சத்திரத்தில் 13.8.25 முதல் 01.6.26 வரை பயணிப்பதால் உங்களுக்கு எல்லா வகையிலும் முன்னேற்றம் இருக்கும். ஆளும் திறமை, நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அழகு, அறிவு கூடும். புது வேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பதவி முன்னேற்றம் காண்பீர்கள்.
குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விஐபிகள் அறிமுகமாவார்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.
வியாபாரத்தை விரிவுபடுத்தி லாபத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய அணுகுமுறைகளைக் கையாளுங்கள். புதிய வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். கெமிக்கல், பர்னீச்சர் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் கொஞ்சம் முரண்படுவார்கள். அவர்களையும் அனுசரித்துச் செல்லவும்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உங்களுக்கு எதிராகச் சிலர் குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். மேலதிகாரியுடன் மனஸ்தாபங்கள் வரும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. எனினும் விரைவில் உங்களுக்குச் சாதகமான நிலையே உருவாகும். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கணினித்துறையினருக்கு வேறு நல்ல நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி பயிலும் முயற்சியிலும் இறங்கவும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது. கலைத் துறையினருக்கு மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். எதிலும் வெற்றி காண்பீர்கள். இந்த குரு பெயர்ச்சி, தடைகளை தகர்த்தெறிந்து வெற்றிக் கனியை சுவைக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: தேனி மாவட்டம் குச்சனூரில் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் அருள்பாலிக்கும் குருபகவானை வியாழக்கிழமைகளில் சென்று வழிபட்டு வாருங்கள். பார்வையற்றவர்களுக்கு உங்களால் இயன்றதை செய்யுங்கள். எதிலும் வெற்றியுண்டு.
Disclaimer : ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘வேல்ஸ் மீடியா’வின் கருத்துகள் அல்ல.
Courtersy : Indhu Thamizh Thisai.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry