
கல்லீரலை நம் உடலைத் தாங்கக்கூடிய உறுப்பு என்று சொல்லலாம். ஏனென்றால், அது தன்னைத் தானே அடிக்கடி ரிப்பேர் செய்து கொள்கிறது. கல்லீரலின் ஒரு பகுதி வெட்டப்பட்டாலும், அது தானே மீண்டும் உருவாகும். மேலும், கல்லீரலால் ஒரே நேரத்தில் சுமார் 700 செயல்பாடுகளைச் செய்ய முடியும். உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை கல்லீரல் நீக்குகிறது. புரதங்களை அதிகரிக்கிறது. செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
ஆரோக்கியமான கல்லீரலை பராமரிக்க முடியாமல் பலர் தோல்வியடைகிறோம். கல்லீரல் பழுதடைந்துள்ளது என்றால், அதன் அர்த்தம், உடலின் பல பாகங்கள் சேதமடைந்துள்ளன என்பதாகும். நாம் சரியான உணவை உண்ணாவிட்டால், கல்லீரல் பாதிப்படைகிறது. கொழுப்பு உள்ள உணவுகளை குறைக்க வேண்டும்.
Also Read : இளநீருக்குள் தண்ணீர் எப்படி செல்கிறது தெரியுமா? 90 சதவிகிதம் பேருக்கு தெரியாத ரகசியம் இதுதான்!
மது அருந்துவது கல்லீரல் பாதிப்பிற்கு ஒரு காரணமாகிறது. பச்சை குத்துவது, நச்சு வாயுக்களை சுவாசிப்பது, ரசாயனங்களை சுவாசிப்பது, சர்க்கரை நோய், அதிக எடை எனப் பல காரணங்கள் கல்லீரலுக்கு ஆபத்தை விளைவிக்கும். சாப்பாட்டை கவனமாக எடுத்துக் கொண்டாலே கல்லீரலை பாதுகாக்கலாம்.
தற்போதைய சூழலில் பலருக்கும் ஃபேட்டி லிவர் (Fatty-Liver) பிரச்சனை இருக்கிறது. இதில் கிரேட் 1, கிரேட் 2, கிரேட் 3, கிரேட் 4 என்று நான்கு நிலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 30-40% பேருக்கு கிரேட் – 1 ஃபேட்டி லிவர் இருக்கும் என்று கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன் பிபிசி நேர்க்காணலில் கூறியுள்ளார். அவர்களில் சுமார் 18% பேர் மட்டுமே குடிப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு அந்த பழக்கம் கிடையாது.

மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன் மேலும் கூறும்போது, Non Alcoholic Steatohepatitis என்ற வகையிலான, குடிப் பழக்கம் அல்லாத காரணங்களினால் கல்லீரல் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. இதற்கு காரணம் நமது மந்தமான வாழ்க்கை முறை. உடலின் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறோம். சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுகிறேன் என்று சொல்பவர்கள் சிலர் அதிகமாக குளிர்பானங்கள் குடிக்கலாம், இனிப்புகள் எடுத்துக் கொள்ளலாம், பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை சாப்பிடலாம். இவை எல்லாம் ஃபேட்டி லிவருக்கு இட்டுச் செல்லும்.
ஃபேட்டி லிவர் என்பது பலர் நினைத்துக் கொள்வது போல கொழுப்புச் சத்து அல்ல. ஃபேட்டி லிவருக்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட் எனும் மாவுச் சத்து தான். மாவுச்சத்தை கொழுப்பாக மாற்றும் திறன் கல்லீரலுக்கு உண்டு. எனவே அதிக மாவுச் சத்து, அதிக சர்க்கரை, இவை எல்லாமே கொழுப்பாக மாறி கல்லீரலில் சேரும்.
மிக எளிமையாக இதை சொல்ல வேண்டும் என்றால் – எந்த உணவாக இருந்தாலும் அது முதலில் கல்லீரலில் தான் சேரும். கல்லீரல் தான் உடலுக்கு தேவையான நல்ல உணவை வடிகட்டி அதை மட்டும் இதயத்துக்கு அனுப்பும். இதயம் அதனை உடல் முழுவதும் பகிர்ந்து கொடுக்கும்.

சர்க்கரை நோயாளிகள் உணவு கட்டுப்பாடுடன் இருக்கவில்லை என்றால், மிக விரைவில் கிரேட் 4 என்ற நிலையில் அவர்களின் கல்லீரல் பாதிப்பு தீவிரமாகலாம். உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும் இது பொருந்தும். அவர்கள் மாதத்துக்கு ஒரு முறை குடிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களின் கல்லீரல் பாதிப்புக்கு குடிபழக்கத்தை காரணம் சொல்ல முடியாது. சொல்லப்போனால், குடிப்பழக்கம் அல்லாத காரணங்களினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு சதவிகிதம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அலுவலகத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் அதிகமாகியுள்ளனர். குறிப்பாக ஐடி துறையில் இருப்பவர்கள் இரவு நேரங்களில் வேலை பார்க்கும் போது, பசித்த உடன் உணவு டெலிவரி ஆப் மூலம் உடனடியாக ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். அந்த உணவை எப்படி சமைக்கிறார்கள், அது என்ன மாதிரியான கடை என்றெல்லாம் பார்ப்பதில்லை, அருகில் இருப்பது எது என்று மட்டுமே பார்க்கிறார்கள். இவை எல்லாம் பாதிப்புகளை அதிகப்படுத்துகிறது.

பலரும் இரவு 10மணி, 11 மணிக்கு சாப்பிடுகிறார்கள். இப்போது அதிகாலை 2 மணி, 3 மணிக்கு கூட பிரியாணி கிடைக்கிறது. வயிறு முட்ட பிரியாணி சாப்பிடும் போது உடலில் தேவைக்கு மீறிய கலோரிகள் சேர்கின்றன. அவ்வளவு உணவை சாப்பிட்டு விட்டு, உடனே தூங்கிவிடுவார்கள், எந்த வேலையும் செய்ய போவதில்லை. அந்த உணவு நமது கல்லீரலில் தான் சென்று தங்கும்.
இரவு நேரத்தில் சாப்பிடும் போது உணவு செரிக்க நேரமாகும். அவை குடல் பகுதியிலேயே தங்கிவிடும். அப்போது பாக்டீரியாக்கள் செயல்பாடு அதிகரிக்கும். அதாவது பாலை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அது கெட்டுபோய்விடும் இல்லையா, அதே போல தான். உணவு செரிக்காமல் அதே இடத்தில் நீண்ட நேரம் தங்கியிருந்தால் அதுவும் கெட ஆரம்பித்துவிடும். அதனால் தான் பலருக்கு Irritable Bowel Syndrome போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. பாக்டீரியாக்கள் அதிகமாகும் போது அவை வாயு உற்பத்தி செய்யும். அந்த வாயு குடலை விரிக்கும். குடலை விரிக்கும் போது கழிப்பறைக்கு செல்லும் உந்துதல் ஏற்படும்.
நிறைய பேருக்கு தற்போது வேலை சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கிறது. இதனால் அவர்களது உடலில் அதிகபடியான சுரப்பிகள் வெளியாகின்றன. அவை குடலை பாதிக்கும். குடல் சாப்பாட்டை உடனே வெளியேற்றிவிட வேண்டும் என்று நினைக்கும். எனவே தான் சிலருக்கு சாப்பிட்ட உடன் கழிவறை பயன்படுத்த வேண்டிய உந்துதல் ஏற்படும். இவை எல்லாமே மன அழுத்தம் தொடர்பானது தான்.

பாராசிட்டமாமல் மாத்திரைகளை தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிப்பு, சில நேரங்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம். குழந்தைகளில் பாராசிடாமல் பாய்சனிங் (paracetamol poisoning) அதிகம் காணப்படுகிறது. ஒவ்வொருவரும் எவ்வளவு பாராசிடாமல் எடுத்துக் கொள்ளலாம் என்பது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்தது.
ஏற்கனவே குடிபழக்கத்தினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ள நபருக்கு ஒரு சில மாத்திரைகள் கூட ஆபத்தாக இருக்கலாம். கல்லீரல் பாதிப்பு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு வலியை குறைக்கக் கூட பாராசிடாமல் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்த்துவிடுவோம். அந்த அளவுக்கு பாராசிட்டமாலும், கல்லீரல் பாதிப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
Also Read : ஜிம் போகாமலேயே தொப்பையை குறைக்கணுமா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..!
அதே போன்று உடல் எடை குறைப்பதற்கான பவுடர்களை உட்கொள்வதால் தீவிர கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த பவுடரை எடுத்துக் கொள்ளும் போது திருப்தியாக சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். எனவே அந்த நாளில் நமக்கு தேவையான சத்துக்கள் எதையும் நாம் உட்கொள்ள மாட்டோம். அந்த பவுடரால் உடல் எடை குறையும். ஆனால் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து பல ஆய்வுகள் உள்ளன.
கல்லீரலுக்கு மீண்டும் வளரும் திறன் உள்ளது, ஆரோக்கியமாக இருப்பவரின் கல்லீரலில் 70% வெட்டி எடுத்துவிட்டாலும், அந்த 30% கல்லீரல் அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 80% ஆக வளர்ந்திருக்கும். குடிபழக்கத்துக்கு அடிமையானவர்கள், அந்த பழக்கத்தை அடியோடு விட்டுவிட்டால் அப்போது வரை ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கி கல்லீரல் மீண்டும் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிவிடும். ஆனால் இதை தான் குடிப்பவர்கள் சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். கல்லீரல் மீண்டு வளரும் திறன் கொண்டது என்றாலும் அதை தவறாக பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும்.” என்று மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன் கூறியுள்ளார்.
Image Source : Getty Images
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry