அரசுக்கு எதிராக ஆசிரியர்களை திருப்பும் ஐஏஎஸ் அதிகாரிகள்! சட்டமன்ற தேர்தலிலும் எதிர் மனநிலையை உருவாக்க முயற்சி! ஐபெட்டோ குற்றச்சாட்டால் பரபரப்பு!

0
987
தலைமைச் செயலகம்; உள்படம் - ஐபெட்டோ அண்ணாமலை

4.30 Min Read : ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்ப அலையை விட, கல்வித்துறையில் அன்றாடம் வெளிவரும் அபாய அறிவிப்புகளினால் ஆசிரியர்கள் பெரிதும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள், கல்வித்துறை இதை உணர வேண்டாமா?. வெப்ப அலை தாக்குதலை விட, பணி நிரவல் அரசாணை மூலம் (G.O.243 நாள்:-21.12.2023) பதவி உயர்வு அமல்படுத்தும் அறிவிப்புகளை ஆசிரியர்கள் மத்தியில் பரவவிட்டு, ஏழை மாணவர்களின் கல்வி நலனை பாதிக்க வைக்க முன் வருவது ஏன்?” என்ற கேள்விகளுடன் அறிக்கையைத் தொடங்கியுள்ளார்.

டேராடூனில் கனவாசிரியர்கள் முன்னிலையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஜுன் 2024லில் இருந்து மாணவர்கள் வருகைப்பதிவை தவிர வேறு பதிவுகளை எமிஸ் இணையதளத்தில் செய்ய வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு இருக்காது என்றும், இதற்காகத் தனியாக 14,000 பேரை நியமிக்க இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார். எங்கு சென்றாலும் நம் நினைவாக இருக்கிறார் என்பதை இந்த அறிவிப்பு எடுத்துச் சொல்கிறது. வரவேற்றுப் பாராட்டுகிறோம்..! ஆனாலும் பள்ளிக்கல்வித்துறையில் என்ன நடைபெறுகிறது? என்பதனை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது நமது கடமையல்லவா?

மாணவர்கள் நலன் பாதிப்பது தெரியவில்லையா?

மே மாதம் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் தொடக்கக் கல்வித்துறை வாயிலாக 2 ஆயிரத்து 236 இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணிநிரவல் செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். 10 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை. முந்தைய அரசும், தற்போதைய அரசும் செய்யவில்லை, செய்ய முன்வரவுமில்லை. பின்தங்கிய எட்டு மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், காலிப் பணியிடங்களாகவே இருந்து வருகிறது. அந்தப் பகுதி மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதெல்லாம் அரசுக்குத் தெரியாதா?

ஆசிரியர்கள் பணி நிரவலால் மாணவர்களுக்கு பாதிப்பு

முறைப்படி ஆசிரியர்கள் நியமனம் செய்திருந்தால் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அரசு கணக்குப்படி 5 ஆயிரத்து 650 இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால் ஆயிரத்து 500 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 500க்கும் அதிகமான தலைமையாசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு அளிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Also Read : தமிழக வீரர்களை தேர்வு செய்வதில் பிசிசிஐ பாரபட்சம்! தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு!

மாநிலத்தில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற வேளையில், 2 ஆயிரத்து 236 ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்படுவது ஏழை, எளிய மாணவர்கள் தரமான கல்வி பெறுவதில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். 10 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் அறவே செய்யப்படவில்லை. இருந்தபோதிலும் 2 ஆயிரத்து 236 ஆசிரியர் உபரிப்பணியிடம் இருப்பதாக அரசு கூறுவது எந்த வகையில் என்று தெரியவில்லை? பணி நியமனம் செய்யப்படவில்லை, பதவி உயர்வு வழங்கப்படவில்லை, மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது! இதுவரை மூன்று லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளதாக அரசு செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த நேரத்தில் பணிநிரவல் அறிவிப்பு அவசியம் தானா?

அரசுக்கு எதிராக மடைமாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதை இதயம் தொட்டு பாராட்டாமல் இருக்க முடியாது. ஆனால் அரசுக்கு எதிரான வெறுப்புணர்வில் ஆசிரியர்கள் உச்சம் தொட்டுச் செல்வதற்கான வாய்ப்புகளைத்தான் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் உருவாக்கி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ளது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிடும். நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை நமக்குள் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நடைபெறப்போகும் சட்டமன்ற தேர்தலுக்குக் கூட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இந்த ஆட்சிக்குத் தவறியும் வாக்களிக்க முன்வரக்கூடாது என்று திட்டமிட்டு, இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர்கள் சிலர் செயல்படுகிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் எங்களால் நிரூபிக்க முடியும்.

சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்ற கோபம், நாடாளுமன்ற தேர்தலில் தபால் வாக்குகளில் பிரதிபலித்திருக்கலாம் என்பதை உணர முடிகிறது. அரசு எதையாவது செய்ய முன் வந்தாலும், செய்யவிடாமல் பார்த்து வருகின்ற அலுவலர்களை இனம் கண்டு, முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தீர்வு காண முன் வராததுதான் நமக்கு வேதனை அளிக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சிந்திக்க வேண்டும்

60 ஆண்டு காலமாக ஒன்றிய அளவில் இருந்த ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலினை மாநில அளவில் கொண்டு சென்று அரசாணை 243ஐ வெளியிட்டுள்ளார்கள். சுமார் பத்தாயிரம் பேர் நன்மை அடையக்கூடிய ஒரு அரசாணையினை பெண் ஆசிரியர்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்படுகின்ற நிலையினை உருவாக்கியுள்ளார்கள். ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் போராட்டங்களின் மூலம் முதலமைச்சருக்கு எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அரசாணை 243 அடிப்படையில் அனைத்து முன்னுரிமைப் பட்டியலினையும் தொடக்கக் கல்வி இயக்குனர் வழியாக, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிடச் செய்துள்ளார்.

குமரகுருபரன் ஐஏஎஸ், செயலாளர் – பள்ளிக் கல்வித்துறை

பதவி உயர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதே இடைநிலை தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலினை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று போர்முனையில் நின்று சொல்வதைப் போல பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆயத்தப்படுத்தி வருகிறார்.

நிதி நிலையை யோசிக்காமல் உத்தரவிடுவது ஏன்?

அடிப்படை வசதிகள்கூட இல்லாத முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் அரசுப்பள்ளி கட்டிடங்களில் மாணவர்களுக்கு இடையூறாக இயங்கி வருமேயானால், அந்த அலுவலகங்களை மட்டும் தனியார் கட்டிடங்களில் இயங்குவதற்கு அனுமதிக்கலாம். ஆனால், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பொறுப்பேற்றுதற்குப் பிறகு, அரசுப் பள்ளி கட்டிடங்களில் இயங்கி வருகின்ற முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் உடனடியாக தனியார் கட்டிடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும், அதற்கு ஒரு காலக்கெடுவினையும் கூறி ஆணையிடுகிறார்.

Also Read : ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி? சிம்ப்பிள் & சூப்பர் டிப்ஸ்!

நிதியைப் பற்றி கவலை இல்லை, அத்தனை கட்டிடங்களுக்கும் நான் நிதி பெற்றுத் தருகிறேன் என்று சொல்கிறார். நிதியே இல்லை என்று எந்தக் கோரிக்கைகளையும் செய்ய முன்வராத அரசில், அடிப்படை வசதியுடன் பள்ளி கட்டிடங்களில் இயங்கி வருகின்ற கட்டிடங்களையும் தனியார் கட்டிடத்திற்கு மாற்றி அதற்குரிய நிதியை நான் பெற்றுத் தருகிறேன் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சொல்கிறார் என்றால், நிதித்துறையைக் கூட கலந்தாலோசிக்காமல் இப்படி உத்தரவு வெளியிடுவது சரியானதாக இருக்க முடியுமா? இவர் மாற்றத்திற்கு பிறகு யாரிடம் போய் நாங்கள் நிதியினைப் பெற்று தனியார் கட்டிடங்களுக்கு வாடகை தருவது என்று பல முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்கிறார்கள். இதையெல்லாம் ஒரு ஐந்து நிமிடம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாமா?

தணிக்கைத் துறையை அமலாக்கத் துறையைப் போல ஏவுவதா?

பள்ளிக்கல்வித்துறையில் தணிக்கைத் துறையினை, அமலாக்கத் துறையைப் போல ஏவி வருகிறார். பள்ளிகள் வாரியாக சென்று 20 ஆண்டுகளுக்கு முன்பு முன்அனுமதி வாங்காமல் உயர்கல்வி படித்ததற்காக பெற்ற ஊக்க ஊதிய உயர்வுக்கு தணிக்கைத் தடை செய்து ஓய்வூதியக் கோப்புகள் அனுப்ப முடியாமல் திணறடித்து வருகிறார்கள். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தர ஊதியம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று ஒரு வரியில் உத்தரவு போட்டு பள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தெளிவுரை கேட்டால் விளக்கம் ஏதும் இல்லாமல் அப்படியே பள்ளிக் கல்வித்துறை செயலாளரால் தணிக்கைத் தடையில் குறிப்பிட்ட அதே வார்த்தையே பதிவாகி வருகிறது.

பெற்றோர் தயக்கத்தை அரசு உணர வேண்டும்

ஹைடெக் லேப் வழியாக ஒரே இடத்திலிருந்து அத்தனை ஆசிரியர்களையும் கண்காணிக்க முடியும் என்று இணையவழிக் கூட்டங்களில் பேசி வருகிறார். வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைமை உருவாகாத வரை, அரசுப் பள்ளிகளில் என்னதான் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாலும், மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர் தயக்கம் காட்டியும், தவிர்த்தும் வருகிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும்.

குஜராத்தைப் போல தமிழ்நாட்டிலும் பெரும்பாலான பள்ளிகள் ஈராசிரியர், ஓராசிரியர் பள்ளிகள்தான் அதிகம் இயங்கி வருகிறது என்பதை உணர வேண்டும். புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில், எழுத்தறிவு இல்லாத 20 பேரை மேமாதம் உடனடியாக சேர்க்க வேண்டும் என்று வயது வந்தோர் மற்றும் முறை சாரா கல்வி இயக்ககத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. வரும் மூன்றாம் தேதி பள்ளி மேலாண்மைக் கூட்டம் வேறு நடைபெற இருக்கிறது.

அமைச்சர் உடனடியாகத் தீர்வு காண வேண்டும்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சென்னை திரும்பியவுடன் பணிநிரவல் அறிவிப்பினை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 243ஐ அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். டேராடூனில் அறிவித்த எமிஸ் இணையதள அறிவிப்பினை ஜூன் முதல் அமல்படுத்திட அதிகாரிகளை விரைவுபடுத்த வேண்டும். பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர்கள் கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்தப் பணிகளுக்கு தீர்வு கண்டால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும், கல்வி நலனும் பெருமைக்குரியதாக அமையும். போகிற போக்கை பார்த்தால், எந்திரன் படம் போல இயந்திர ஆசிரியர்களை, ரோபோவை வைத்துக் கூட பாடம் நடத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பயணப்படுவார்களோ? என்ற எண்ணம் தோன்றுகிறது” என அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry