
தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை ஆழ்கடலுக்குள் மூழ்கடித்து செயற்கை கீழ்க் கரையமைப்புகளை உருவாக்க இலங்கையின் மீன்வளத்துறை (Department of Fisheries and Aquatic Resources – DFAR) பரிந்துரை செய்துள்ளது. இது மீனவளத்தை பெருக்குவதற்கான நடவடிக்கை என்று அந்நாட்டு அரசு கூறினாலும், இருநாடுகளுக்கு இடையிலான கடல்சார் உரிமை மற்றும் மீன்வள சிக்கல்களில் இது மேலும் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
❖ படகுகளை செயற்கை கரையாக்கும் இலக்குடன் பரிந்துரை
இலங்கையின் மீன்வளத்துறை இயக்குநரால் அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தின் அடிப்படையில், 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் 34 படகுகளை ஆழ்கடலில் மூழ்கடித்து செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி மீன் வளத்தை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் கடல் உயிரின வகைகள் அதிகரிக்கும், மற்றும் உள்ளூர் மீன்வளம் மேம்படும் என இலங்கை தரப்பினர் நம்புகிறார்கள்.
மேலும், கடலடிப் பாறை அமைப்புகள் அல்லது கடலடி செயற்கை கரையமைப்புகள் (Underwater Reef Structures) கடல்சார் உயிரினங்களுக்கு பாதுகாப்பான வாழிடங்களை உருவாக்கும் என்றும், மீன்பிடி வளங்களை அதிகரிக்கும் என்றும் இலங்கை மீன்வளத்துறை தெரிவிக்கிறது. இதற்காக மாவட்ட அளவிலான மீன்வள அலுவலர்களிடம் தங்களது பரிந்துரைகளை வழங்குமாறு இலங்கை மீன்வளத்துறை கேட்டுள்ளது.
Also Read : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்! இருநாடுகளின் ராணுவ வலிமை என்ன? விரிவான பார்வை!
❖ இந்திய மீனவர்களுக்கு கடும் பாதிப்பு
இப்போது வரை, இலங்கை அரசு தமிழ்நாடு மீன்வர்களின் 74 படகுகளை கைப்பற்றி வைத்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமாக 170க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் சிலவற்றை மட்டுமே விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. மீதமுள்ள படகுகள் பல ஆண்டுகளாக கம்பிகளுக்குள் சிதைந்து கொண்டிருக்கின்றன.
இந்திய வெளியுறவுத் துறை, படகுகளை விடுவிக்க வேண்டி பலமுறை மனுக்கள் மற்றும் தூதரகம் மூலம் இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் படகுகளை கடலுக்குள் மூழ்கடிகடிப்பது என்று முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை அரசின் திட்டம், இருநாட்டு உறவுகளில் மேலும் பதற்றத்தை உருவாக்கக்கூடும் என தெரிகிறது.

❖ மீனவர் சங்கங்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்த பரிந்துரை குறித்து இந்திய மீனவர்களின் சங்கங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. ஆனால், மீனவர்களிடையே கடும் எதிர்ப்பும் வருத்தமும் காணப்படுகிறது. ஏற்கனவே படகு பறிமுதல் காரணமாக வாழ்வாதார சிக்கலில் சிக்கியுள்ள மீனவர்கள், இப்போது அவர்களது சொத்துகளையே கடலுக்குள் மூழ்கடிக்க திட்டமிடப்படுவது வேதனையளிக்கிறது என்று கூறுகின்றனர்.
❖ தீர்வு என்ன?
இந்த விவகாரம் மீன்வள உரிமைகள், கடல் எல்லைகள் மற்றும் இருநாட்டு ராஜதந்திரக் கொள்கைகளை நேரடியாகத் தாக்குகின்ற முக்கியமான விவகாரமாகத் திகழ்கிறது. இருநாடுகளும் கூட்டு ஆலோசனை நடத்தி, நிரந்தர தீர்வை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
❖ கடல் எல்லை
ஒவ்வொரு நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட கடற்பரப்பு (Territorial Waters) என்பது, அந்த நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து 12 கடல் மைல் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது 22.2 கி.மீ. அல்லது 13.8 மைல். 1982-ம் ஆண்டில் நடந்த கடல் சட்டங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடல் எல்லையை மீறுவதாகக் கூறி தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களை படகுகளை பறிமுதல் செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry