
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு உளவுத் துறைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அட்டாரி-வாகா எல்லையை மூடுவது, பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்களை ரத்து செய்வது போன்ற பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. இதன் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ளது.
இந்நிலையில், ஒரு முழுமையான போருக்கு வழிவகுக்கும் வகையிலான ராணுவ நடவடிக்கைகளை இந்தியா எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் புறந்தள்ளிவிட முடியாது என்று தெற்காசிய நாடுகளின் அரசியலை கண்காணிக்கும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து அவசரம் காட்டக் கூடாது என்று ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.எச். பனாக் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் கொண்ட நாடு. இந்தியா ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுத்தால், அதற்குப் பதிலடி கொடுக்கும் அளவுக்குப் போதுமான ஆயுத பலம் பாகிஸ்தானிடம் இருக்கிறது என்று தி பிரின்ட செய்தி ஊடகத்திற்கு எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘India must keep Pakistan on tenterhooks. The day of reckoning will come like a thunderbolt’
Lt Gen H S Panag PVSM, AVSM (R), @rwac48, former GOC-in-C Northern Command and Central Command, writes#ThePrintOpinionhttps://t.co/ncpy006dO2
— ThePrintIndia (@ThePrintIndia) May 1, 2025
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 29ந் தேதி உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. எந்த இடங்களில், எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் முப்படைகளுக்கு வழங்கப்பட்டது. ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்துள்ள நிலையில், இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்திய எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இந்திய கடற்படையைச் சேர்ந்த போர் கப்பல்கள் அரபிக்கடலில் உள்ள இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (Exclusive Economic Zone) விரிவான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குஜராத் கடற்கரை அருகே உள்ள சர்வதேச கடல் எல்லைக்குப்பக்கமாக இந்தியக் கடலோர காவல் படையினரின் கப்பல்களும் முன்னணி பகுதிகளில் நிலைநாட்டப்பட்டுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தானியர்கள் கருதுகின்றனர். இதனால் அந்நாட்டில் பதற்றம் நிலவுகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மனுதாரரை கடுமையாக விமர்சித்த நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, பயங்கரவாதத்தை எதிர்த்து நாடே ஒன்றுபட்டுள்ள இந்த நேரத்தில், இதுபோன்ற மனுக்கள் பாதுகாப்புப் படையினரின் மன உறுதியைக் குலைக்கும் நோக்கத்துடன் மட்டுமே தாக்கல் செய்யப்படுவதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
இந்திய ராணுவத்தின் வலிமை
ராணுவ வலிமை குறித்த 2025ஆம் ஆண்டுக்கான தரவரிசையில், இந்தியாவைவிட 8 இடங்கள் பாகிஸ்தான் பின்தங்கியுள்ளது என்று குளோபல் ஃபயர் பவர் இணையதள தரவுகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய ராணுவ சக்தியைப் பொறுத்தவரை, 2025ஆம் ஆண்டில், 145 நாடுகளில், இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது, பாகிஸ்தான் 12வது இடத்தில் இருக்கிறது.
இந்திய ராணுவத்திடம் சுமார் சுமார் 22 லட்சம் ராணுவ வீரர்கள், 4,201 டாங்கிகள், 1.5 லட்சம் கவச வாகனங்கள், 100 சுயமாக இயக்கப்படும் பீரங்கிகள் மற்றும் 3,975 இழுத்துச் செல்லக்கூடிய பீரங்கிகள் உள்ளன. இது தவிர, 264 பீப்பாய் ராக்கெட் பீரங்கிகளும் இருக்கின்றன.

இந்திய விமானப் படையில் 3 லட்சத்து 10 ஆயிரம் விமானப்படை வீரர்கள், 513 போர் விமானங்கள், 270 போக்குவரத்து விமானங்கள் உள்பட மொத்தம் 2,229 விமானங்கள் இருக்கின்றன. மொத்த விமானங்களில் 130 தாக்குதல் விமானங்கள், 351 பயிற்சி விமானங்கள், 6 டேங்கர் கடற்படை விமானங்கள் ஆகியவை அடங்கும்.
இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளும் வைத்திருக்கும் மொத்த ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை 899. அவற்றில் 80 ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்த வல்லவை.
இந்திய கடற்படையில் 1.42 லட்சம் கடற்படை வீரர்கள் உள்ளனர். மேலும் 2 விமானம் தாங்கிக் கப்பல்கள், 13 Destroyer எனப்படும் அழிக்கும் கப்பல்கள், 14 போர்க்கப்பல்கள், 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 18 சிறிய போர் கப்பல்கள் உள்பட மொத்தம் 293 கப்பல்கள் உள்ளன. தளவாட வசதிகளைப் பொறுத்தவரை, இந்திய ராணுவத்திடம் 311 விமான நிலையங்கள், 56 துறைமுகங்கள், 6.3 மில்லியன் கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகள் மற்றும் 65,000 கிலோமீட்டர் ரயில் பாதைகள் இருக்கின்றன.
பாகிஸ்தான் ராணுவம்
குளோபல் ஃபயர் பவர் இணையதளத் தரவுகளின்படி, பாகிஸ்தான் ராணுவத்தில் சுமார் 13.11 லட்சம் ராணுவ வீரர்களும், 1.24 லட்சம் கடற்படை வீரர்கள் மற்றும் 78 ஆயிரம் விமானப்படை வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தானிடம் மொத்தம் 1,399 விமானங்கள் உள்ளன, அவற்றில் 328 போர் விமானங்கள், 90 தாக்குதல் வகைகள், 64 போக்குவரத்து விமானங்கள், 565 பயிற்சி விமானங்கள், 4 விமானம் தாங்கி கப்பல்கள், தாக்குதல் நடத்தவல்ல 57 ஹெலிகாப்டர்கள் உள்பட 373 ஹெலிகாப்டர்கள் ஆகியவை அடங்கும்.

மேலும் அந்நாட்டு ராணுவத்திடம் 2,627 டாங்கிகள், 17,500 வாகனங்கள், 662 சுயமாக இயக்கப்படும் பீரங்கிகள், 2,629 இழுத்துச் செல்லப்பட்டும் பீரங்கிகள் மற்றும் 600 மல்டிபேரல் ராக்கெட் பீரங்கிகள் ஆகியவை இருக்கின்றன. பாகிஸ்தான் கடற்படையிடம் 9 போர்க்கப்பல்கள், 9 சிறிய போர்க் கப்பல்கள் (corvettes), 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 69 ரோந்து கப்பல்கள் உள்பட மொத்தம் 121 போர்க் கப்பல்கள் உள்ளன.
தளவாடங்களைப் பொறுத்தவரை, பாகிஸ்தானிடம் மூன்று துறைமுகங்கள், 116 விமான நிலையங்கள் மற்றும் 60 வணிகக் கப்பல் படை மட்டுமே இருக்கின்றன. இது தவிர, 2 லட்சத்து 64 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகளும் 11 ஆயிரத்து 900 கிலோமீட்டர் ரயில் பாதைகளும் பாகிஸ்தானிடம் உள்ளன.

யாரிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன?
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு சிந்தனைக் குழுவான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கைப்படி, இந்தியாவில் 172 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 70 அணு ஆயுதங்களும் இருக்கின்றன.
இருப்பினும், இரு நாடுகளும் எத்தனை அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியுள்ளன என்பது தெளிவாக இல்லை. இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில், இந்தியா நீண்ட தூர ஆயுதங்களை நிலை நிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அதாவது, அந்த ஆயுதங்களால் சீனாவையும் தாக்க முடியும் என்று அந்த சிந்தனைக் குழு குறிப்பிட்டுள்ளது.
டிரோன்களின் எண்ணிக்கை
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் டிரோன்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரித்து வருகின்றன. அடுத்த இரண்டு முதல் நான்கு ஆண்டுகளில் இந்தியாவிடம் சுமார் 5,000 டிரோன்கள் இருக்கும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், 3.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள 31 பிரிடேட்டர் டிரோன்களை(Predator Drones) வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. உலகின் மிக வெற்றிகரமான மற்றும் ஆபத்தான டிரோன்களாக பிரிடேட்டர் டிரோன்கள் கருதப்படுகின்றன. மேலும், இலக்குகளை அழிக்கக்கூடிய 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள டிரோன்களும், லேசர் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஏவுகணைகளும் வாங்கப்பட்டுள்ளன.

அதேநேரம், துருக்கி மற்றும் சீனாவில் இருந்து, பாகிஸ்தான் டிரோன்களை இறக்குமதி செய்கிறது. ஜெர்மனி மற்றும் இத்தாலியில் இருந்தும் டிரோன்களை வாங்கியுள்ளது.இவற்றோடு, பாகிஸ்தான் பராக் மற்றும் ஷாபர் என்ற டிரோன்களையும் உருவாக்கியுள்ளது. பாகிஸ்தானிடம் துருக்கியின் நவீன ‘பைராக்டர்’ TB2 மற்றும் அகின்ஜி டிரோன்கள் உள்ளன. மேலும், சீனாவிடம் இருந்து விங் லோங் 2, சிஹெச்-4 போன்ற டிரோன்களையும் பாகிஸ்தான் வாங்கியுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry