
இந்தியப் பொருளாதாரம் உலக அரங்கில் ஒரு மாபெரும் சாதனையைப் பதிவு செய்திருக்கிறது. நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் அறிவித்தபடி, உலகப் பொருளாதாரத்தில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய தருணம்.
அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, ஜப்பானை நாம் முந்தியிருப்பது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதை சரியான திசையில் செல்கிறது என்பதற்கான வலுவான அறிகுறியாகும். உலகப் பொருளாதார நிதி நிறுவனத்தின் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இந்தியாவின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றுகிறது.

இதே 6 சதவிகித வளர்ச்சி விகிதம் தொடருமானால், இன்னும் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஜெர்மனியையும் முந்தி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என்பது இந்தியர்களை தலைநிமிரச் செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் இத்தகைய சாதனைக்கு வித்திட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்தியாவை விட மிகக் குறைவு என்பதால், மூன்றாவது இடத்தைப் பிடிப்பது எளிய இலக்காகவே தெரிகிறது.
உலகப் பொருளாதார வல்லரசாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் கனவு நனவாக, நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவின் பொருளாதாரம் நம்மை விட 8 மடங்கும், சீனாவின் பொருளாதாரம் 5 மடங்கும் பெரியதாக இருப்பதால், அந்த நாடுகளை முந்திச் செல்ல இந்தியா இன்னும் துரிதமான மற்றும் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய சவால்கள் இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி, எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.
Also Read : ‘பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்’? – உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
ஆனால், இந்த வேகமான பொருளாதார வளர்ச்சி, இந்தியக் குடும்பங்களிலும், தனிநபர் வருமானத்திலும் எந்த அளவுக்குப் பிரதிபலித்திருக்கிறது என்பது ஒரு முக்கியமான கேள்வி. புள்ளிவிவரங்களின்படி, இந்திய மக்கள்தொகையில் சுமார் 120 கோடி பேர் குறைந்த வருவாய் பிரிவிலும், 6.6 கோடி பேர் நடுத்தர வருவாய் பிரிவிலும், 1.6 கோடி பேர் உயர் நடுத்தர வருவாய் பிரிவிலும், வெறும் 20 லட்சம் பேர் மட்டுமே உயர் வருவாய் பிரிவிலும் உள்ளனர். நாட்டின் மொத்தப் பொருளாதார வளர்ச்சி, தனிநபர் வருமானத்திலும் பிரதிபலிக்கும்போதே அது உண்மையான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அமையும். தனிநபர் வருமானத்தைப் பொறுத்தமட்டில், 181 நாடுகள் பட்டியலில் இந்தியா 122-வது இடத்திலேயே உள்ளது.
இந்த ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வது பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கான தலையாய கடமையாகும். அதற்கேற்ப கொள்கை முடிவுகளை வகுத்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு தேடி இந்தியாவுக்கு வரும் அளவுக்கு நமது கல்வித் தரத்தையும், தனிநபர் வருமானத்தையும் உயர்த்தினால் மட்டுமே, உலக அரங்கில் நாம் முழுமையான வெற்றியைப் பெற முடியும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதோடு, மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்போதே, இந்தியா ஒரு உண்மையான பொருளாதார வல்லரசாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை. இந்த லட்சியத்தை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry