TASMAC CASE: அப்ரூவர் ஆகிறாரா விசாகன் IAS? ஆட்சியாளர்களை வளைக்க அமலாக்கத்துறை ஆயத்தம்? முதலில் சிக்கப்போவது யார்?

0
112
Breaking news on the TASMAC scandal: Reports suggest Visakan IAS might turn approver, a move that could see the Enforcement Directorate tighten its grip on ruling politicians. Stay informed on this developing story.

டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகன் ஐ.ஏ.எஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியுள்ளது. விசாகனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக தங்களுடைய அலுவலகத்திற்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

Also Read : ஸ்டாலின் நடத்துவதை ‘ஆட்சி’ என்று கூறுவதுதான் ஆகப்பெரிய ‘ஹம்பக்’ – ஈபிஎஸ் சாட்டையடி!

இன்று(மே 16-ம் தேதி) காலை 6:30 மணியளவில், சென்னை மணப்பாக்கத்திலுள்ள விசாகன் வீட்டில் சோதனையை தொடங்கியபோதே, ‘கே ஸ்மார்ட்’ நிறுவனத்தின் உரிமையாளர் கேசவன் தொடர்புடைய இடங்கள், சூளைமேட்டில் உள்ள SNJ மதுபான நிறுவன அலுவலகம், திமுகவுக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர்களான திருவல்லிக்கேணி தொழிலதிபர் தேவகுமார், அடையாறு சாஸ்திரி நகரில் ராஜேஷ்குமார், சேத்துப்பட்டில் பாபு உள்ளிட்ட சிலரது அலுவலகம் மற்றும் வீடு, ஆழ்வார்பேட்டையில் ‘டான் பிக்சர்ஸ்’ திரைப்பட தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஆகாஷ் பாஸ்கரன், கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவின் பேத்தியை திருமணம் செய்துள்ளார். இவர் இட்லி கடை (தனுஷ் மற்றும் நித்யா மேனன்) மற்றும் பராசக்தி (சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன்) உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் ஆவார்.

மேலும், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் ரத்தீஷின் எம்.ஆர்.சி. நகர் வீட்டுக் கதவையும் அமலாக்கத்துறை தட்டியிருக்கிறார்கள். வீட்டில் அவர் இல்லாததால், சோதனை மட்டும் நடந்து வருகிறது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையை நடத்தி வருகிறது.

ரத்தீஷ்

டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகனின் மணப்பாக்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையிட்டு வருகிறது. டாஸ்மாக் கொள்முதலில் தொடங்கி, சில மதுபான ஆலைகளுக்குச் சாதகமாக ஆர்டர்கள் வழங்கப்பட்டது வரையில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது, வாட்ஸ்அப் உரையாடல்களின் ‘ஸ்கிரீன் ஷாட்’கள் நகல் எடுக்கப்பட்டு, அவை கிழிந்த நிலையில் விசாகன் வீட்டின் அருகே கண்டெடுக்கப்பட்டன.

TASMAC Scam: Is Visakan IAS Turning Approver? ED Nears Rulers!
விசாகன் ஐ.ஏ.எஸ். வீட்டிற்கு வெளியே கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆவணம்.
விசாகன் ஐ.ஏ.எஸ். வீட்டிற்கு வெளியே கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆவணம்.

அந்த நகல்களில், ‘டியர் தம்பி’ என்ற வாசகங்களுடன், டாஸ்மாக் டெண்டர்கள் தொடர்பாக சில தரவுகளும் சிக்கின. அதைத்தொடர்ந்து, மேல் விசாரணை நடத்துவதற்காக விசாகனையும், அவரது மனைவியையும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அமலாக்கத்துறை கடுமையாக நெருக்கியுள்ளதால் விசாகன் பெரும் பதற்றத்தில் இருக்கிறார். அவரை அப்ரூவராக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. நடந்த விஷயங்களையெல்லாம் விசாகன் கொட்டத் தொடங்கினால், திமுகவின் முதல் குடும்பம் தொடங்கி, ஆட்சியாளர்களில் முக்கியமான பலருக்கும் நெருக்கடிகள் முற்றலாம் என அமலாக்கத்துறை வடடாரங்கள் கூறுகின்றன.

விசாகன் ஐ.ஏ.எஸ். வீடு.

இந்த ரெய்டில், கே ஸ்மார்ட் கேசவன், டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இடங்களில் நடக்கும் சோதனைதான் பலரது புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது. ‘அவர்களுக்கும் ‘டாஸ்மாக்’ முறைகேடுக்கும் என்ன சம்பந்தம், அவர்களுடைய இடங்களில் ஏன் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

தி.நகரில் உள்ள கேசவனின் KS ஸ்மார்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைப் பெற்றுள்ளது. மேலும், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை, நகராட்சி நிர்வாக ஆணையரகம், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், ஆவின் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு மாநிலத் துறைகளிடமிருந்தும் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.

முதலமைச்சரின் உறவினர் சுற்றிவளைப்பு

டாஸ்மாக் வழக்கை கவனித்து வரும் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், “அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் உதவியாளராக பணிபுரியும் வாளாடி கார்த்தியின் மைத்துனர்தான் இந்த ஆகாஷ் பாஸ்கரன். இவர் முதலமைச்சரின் உறவினரும் கூட. பி.ஆர்.ஆர். ஸ்வர்ண மாளிகை என்ற நகைக்கடையையும், ஶ்ரீ வேலவன் டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தையும் ஆகாஷின் குடும்பம் நிர்வகித்து வருகிறது.

சில திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஆகாஷ் பாஸ்கரன், தயாரிப்பாளர் அவதாரமெடுத்து, சில முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்துள்ளார். திரைத்துறையில், கடந்த ஆறு மாதங்களில் அபரிமித வளர்ச்சியை அவர் அடைந்துள்ளார். இந்தச் சூழலில், டாஸ்மாக் கொள்முதல் விவகாரங்களில் அவருக்கு தொடர்பிருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதைத்தொடர்ந்துதான், அவருடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

இடது ஓரத்தில் ஆகாஷ் பாஸ்கரன்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, கடந்த மார்ச் 6-ம் தேதி அந்நிறுவனத்தின் தலைமையகத்திலும், அம்பத்தூர் குடோனிலும் சோதனை அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. மூன்று நாள்கள் தொடர்ந்த அந்தச் சோதனையில், ஏராளமான ஆவணங்கள் சிக்கின. பார் டெண்டர் தொடங்கி, பணியிட மாற்றங்கள் வரையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை சப்ளை செய்யும் ஆலைகளில் நடத்தப்பட்டச் சோதனையில், சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனுக்கு ஈ.டி. சம்மன் அனுப்பியது. அதற்குள்ளாக, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைகோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. ஆனால், ‘அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது’ என கடந்த மாதம் 23-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. பின்னர் இரண்டவது முறையாக விசாகனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவே இல்லை.

முன்னதாக, டாஸ்மாக் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 14ந் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நராயணன் அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகள், டாஸ்மாக் நிர்வாகம், லஞ்ச ஒழிப்புத் துறை, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐக்கு உத்தரவிட்டனர்.

மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஜாமினை தக்க வைத்துக்கொள்ள பதவி விலகியதற்கும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய மூன்று நாள் சோதனையை சட்டவிரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என சவால் விடுத்த தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கும் பிறகு, இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் வேகம் கூடியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry