
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில்தான் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் இந்த ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து பாகிஸ்தான் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

நீடிக்கும் ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீரில் எல்லைப் பகுதிகளில் தாக்குதலை நடத்தி இருக்கிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
இதற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ஆயுதப் படை தாக்குதல் நடத்தி இருக்கிறது. டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ஆயுதப் படைகள் இன்று காலை பாகிஸ்தானில் பல இடங்களில் உள்ள விமான பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை குறிவைத்து தாக்கி இருக்கின்றன. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு அதே துறையில், அதே தீவிரத்தில் இந்தியா பதிலடி வழங்கப்பட்டிருக்கிறது.
லாகூரில் உள்ள ஒரு விமான பாதுகாப்பு அமைப்பு அழிக்கபட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா, பரமுல்லா, உரி, பூஞ்ச், மேந்தர் மற்றும் ராஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் தனது அத்துமீறிய துப்பாக்கிச்சூட்டினை நடத்தி இருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை(08 மே), இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்களையும், அமைப்புகளையும் குறிவைத்தன. இந்தியாவின் பதில் தாக்குதல் தீவிரத்துடன் இருந்தது. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி துறைகளில் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் மோர்டார் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே துப்பாக்கிச் சூட்டின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.
மே 07-08, 2025 அன்று இரவு, அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பட்டிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தரலாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல இராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்க முயன்றது.
வான் பாதுகாப்பு அமைப்புகளால் இவை செயலிழக்கச் செய்யப்பட்டன. இந்த தாக்குதல்களின் சிதைவுகள் தற்போது பாகிஸ்தானின் தாக்குதல்களை நிரூபிக்கும் பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி துறைகளில் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் மோர்டார் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே துப்பாக்கிச் சூட்டின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு காரணமாக மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட பதினாறு அப்பாவி உயிர்கள் பலியாகின. இங்கும், பாகிஸ்தானில் இருந்து மோர்டார் மற்றும் பீரங்கித் தாக்குதலை நிறுத்த இந்தியா பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.
Also Read : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்! இருநாடுகளின் ராணுவ வலிமை என்ன? விரிவான பார்வை!
எல்லையில் அதிகரித்து இருக்கும் பதற்றம்; பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ள முக்கிய முடிவுகள் என்னென்ன?
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவை:
- இந்தியா-பாகிஸ்தான் எல்லை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.
- சந்தேகத்திற்குரியவராக யாராவது தென்பட்டால், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் அவர்களைச் சுடலாம்.
- எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களைத் தவிர, வேறு யாரும் எல்லைப் பகுதிக்குச் செல்லக் கூடாது.
- பாதுகாப்புக் காரணங்களால், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் பிகானேர் விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த காவல்துறை மற்றும் ரயில்வே ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- சுகோய்-30 எம்கேஐ ஜெட் விமானங்கள் கங்காநகரில் இருந்து ரான் ஆஃப் கட்ச் வரை வான்வழி ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
- எல்லைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மற்றும் பரீட்சைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
- எல்லைப் பகுதிகளில் உள்ள மக்களை அரசு பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்து வருகிறது.
- டிரோன் தாக்குதல்களைத் தடுக்க ஆன்டி-டிரோன் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.
- எல்லைப் பகுதிகளில் கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry