நேரடியாகத் தாக்கிய திமுக எம்.எல்.ஏ.? – கரூரில் ஜனநாயகம் படுகொலை! – செய்தியாளரை தாக்கி கடத்தியது எப்படி? பகீர் பின்னணி!

0
25
karur-dmk-mla-attacks-news-tamil-journalist-kathiravan-kidnapping
Detailed report on the brutal attack and kidnapping of News Tamil journalist Kathiravan by DMK MLA Palaniandi in Karur for exposing illegal quarrying activities.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது ஆளுங்கட்சியின் சட்டைப் பையில் சுருட்டி வைக்கப்பட்டு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கரூரில் சட்டவிரோதக் கல் குவாரி முறைகேட்டைத் திரையிடச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட 5 பேர் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நிகழ்த்தியுள்ள வன்முறை, தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.

பின்னணி: 23 கோடி ரூபாய் கனிமக் கொள்ளை!

குளித்தலை அருகே சிவாயம் வடக்கு கிராமத்தில் சுமார் 23.25 கோடி ரூபாய் மதிப்புள்ள கனிமங்களைச் சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததற்காக, ஏற்கனவே 2022-ல் பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதித்திருந்தது. இன்றும் அங்கே ஸ்ரீரங்கம் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டிக்குச் சொந்தமான குவாரியில் முறைகேடுகள் நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின், சமூக ஆர்வலர் சுடலை கண்ணு, வழக்கறிஞர் திருமலை ராஜன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் செய்தி சேகரிக்கச் சென்றனர்.

திட்டமிட்ட வேட்டை: 50 குண்டர்கள்.. 2 மணி நேரக் கடத்தல்!

அப்போது, குளித்தலை – மணப்பாறை நெடுஞ்சாலையில் இருந்து ட்ரோன் மூலம் முழுவதுமாக எம்.எல்.ஏ-வின் கல்குவாரியை கவர் செய்து வீடியோ, போட்டோ எடுத்துள்ளனர். ட்ரோன் பறப்பதைக் கண்டதும், ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ பழனியாண்டி மற்றும் அவரது 50-க்கும் மேற்பட்ட அடியாட்கள் செய்தியாளர்களைச் சூழ்ந்து கொண்டனர். கம்பு, இரும்புக்கம்பி மற்றும் கற்களால் செய்தியாளர் கதிரவன் மற்றும் செபாஸ்டினைச் சராமாரியாகத் தாக்கியுள்ளனர். அவர்களின் 2 கேமராக்கள், ட்ரோன் மற்றும் செல்போன்களைச் சுக்குநூறாக அடித்து உடைத்த அந்தக்கும்பல், செய்தியாளர்களைக் கடத்தியும் சென்றது.

இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் யாரும் தடுக்கக்கூட முன்வரவில்லை. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகச் செய்தியாளர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், மாவட்ட எஸ்.பி. ஜோஸ் தங்கையா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் அவர்களைக் கண்டுபிடித்து மீட்டனர்.

குளித்தலை காவல் நிலையத்தில் அரங்கேறிய அராஜகம்!

மீட்கப்பட்ட செய்தியாளர் கதிரவன், கேமராமேன் செபாஸ்டின் ஆகியோரை போலீஸார் குளித்தலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கேதான் உச்சக்கட்ட அவலம் அரங்கேறியது:

பாதுகாப்பற்ற சூழல்: படுகாயமடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட நின்ற செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, அவர்களை உடனடியாகக் காவல் நிலையத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டியுள்ளது.
எம்.எல்.ஏ ஆதரவாளர்களின் மிரட்டல்: காவல் நிலையத்தின் வாசலிலேயே எம்.எல்.ஏ பழனியாண்டியின் ஆதரவாளர்கள் பெரும் திரளாகக் கூடி நின்று, செய்தியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
காவல்துறையின் அலட்சியம்: வாசலில் அடியாட்கள் சூழ்ந்து நின்றபோது, செய்தியாளர்களைப் பாதுகாக்க வேண்டிய போலீஸார், வேடிக்கை பார்த்ததுடன் நில்லாமல், பாதிக்கப்பட்டவர்களையே வெளியே போகச் சொன்னது காவல்துறையின் ‘ஒருதலைப்பட்ச’ போக்கைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர் திருமலை ராஜன், உதவியாளர் ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதன்பிறகு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயமடைந்த நால்வரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்: “ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இது சட்டத்தின் ஆட்சியா? இல்லை ரவுடிகளின் ராஜ்ஜியமா?” எனச் சீறியுள்ளார். மேலும், இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் கொள்ளையும், கனிம வளத் திருட்டும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. அதிகாரத்தில் இருப்பதால், ஆணவத்தின் உச்சத்தில் இருந்து கொண்டு அடித்தட்டு மக்களை வஞ்சிக்கும் இந்த விடியா திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கி விட்டது என்று பதிவிட்டு உள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: “செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியது, ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்!” எனச் சாடியுள்ளார். மேலும், கொலை, கொள்ளைகளில் தொடங்கி பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திமுகவினர் தற்போது சட்டவிரோத குவாரிகளையும் நடத்தி வருவதன் மூலம் குற்றச் சம்பவங்களோடு திமுகவினர் பின்னிப் பிணைந்திருப்பது தான் திராவிட மாடலா?

கல்குவாரிகள் எனும் பெயரில் கனிமவளங்களைச் சுரண்டி அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படும் சட்டவிரோதச் செயல்கள் தமிழகத்தில் தொடர்கதையாகிவரும் நிலையில், அதனைச் செய்தியாகப் பதிவு செய்ய முயன்றோர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தின் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

2-3 நாட்களில், பண்ருட்டியில் விவசாயி உயிருடன் எரிக்கப்படுகிறார், அடையாறில் குடும்பமே சிதைக்கப்படுகிறது, கல்லூரி வளாகத்திலேயே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார், 75 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார், இப்போது கரூரில் செய்தியாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர் கடுமையாக தாக்கப்பட்டு கடத்தப்படுகிறார்கள்.

முதலமைச்சரோ, விலை உயர்ந்த வெளிநாட்டு பைக்கான Suzuki Hayabusaவில் உட்கார்ந்து ஃபோட்டோவுக்கு போஸ்கொடுத்துக் கொண்டிருக்கிறார். இது எதையும் அழுத்தமான செய்தியாக்காமல், ‘மெயின்ஸ்ட்ரீம்’ ஊடகங்கள் வாய்மூடி மௌனியாக இருப்பது வேதனை. திமுக-விடம் அடைக்கலமாகி உண்மையை மறைப்பது, இதழியல் தர்மத்திற்கே செய்யும் துரோகம்!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry