பாலியல் பலாத்காரங்களால் கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர்! அல்வா சாப்பிட்டுக்கொண்டு அமைதியாக இருக்கும் முதலமைச்சர்!

0
64
Amid rising concerns, opposition parties claim that the Tamil Nadu government has not done enough to stop sexual assaults. Discover the key allegations and responses in the state.

தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் மாணவிகளிடம் ஆசியர்களே அத்துமீறும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன. பள்ளிக்கூடங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது, பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அமைதிப்பூங்காவா?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. பெண்களுக்குப் பாலியல் தொல்லை, காவல்துறையினரிடமே செயின் பறிப்பு, காவல் நிலையத்திலேயே பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை, காவல்துறையினர் மீது தாக்குதல், சமூக ஆர்வலர்கள் கொலை, காவல்துறை உயராதிகாரி மீதான கொலை முயற்சி போன்ற சம்பவங்கள் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மேலும் வலுவாக்குகின்றன. இந்தநிலையில் தான் ஆசிரியர்களால், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் சம்பவம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன.

Also Read : திமுக எதிர்ப்பு உணர்வுள்ள கட்சிகள் அதிமுகவோடு கரம் கோர்க்க வேண்டும்! முன்னாள் அமைச்சர் செம்மலை அழைப்பு!

ஒரு வாரத்தில் மாணவிகள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள்

  • கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வந்த மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மூன்று ஆசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி கருவுற்று கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
  • திருச்சி மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  பள்ளி தாளாளரின் கணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • சேலம் ஓமலூர் பகுதியில் அரசுப் பள்ளியில் +1 படிக்கும் மாணவியிடம் அத்துமீறி நடந்ததாக, உடற்கல்வி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வரும்11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
  • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 7 குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, 72 வயது முதியவர் உட்பட ஏழு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குமுறும் பெற்றோர்

பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் ஆபத்துகளில் இருந்து தங்களது பிள்ளைகளை ஆசிரியர்கள் பாதுகாப்பார்கள் எனக் கருதினால், வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆசிரியர்களே பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் சம்பவங்கள் பெற்றோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் பள்ளி சென்ற மாணவர்கள், மாலையில் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா என மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read : பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாதவரா பள்ளிக் கல்வி அமைச்சர்? NEET தேர்வின் ஒத்திகையே SLAS தேர்வு! ஐபெட்டோ கடும் விமர்சனம்!

பெண்களுக்கு எதிராக தொடரும் குற்றங்கள்

திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறிய இந்த நான்கு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடந்த பாலியல் வன்கொடுமை, சில்மிஷங்களின் பட்டியல் மேலும் நீளும். கடந்த 36 நாட்களில் 95 பாலியல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே ஒரு மாணவிக்கு, பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் மாநிலத்தையே உலுக்கியது.

கோவை மேட்டுப்பாளையத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். காரமடை அருகே ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. கோவை அருகே 78 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், இளம்பெண்ணை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில், வேலூர் அருகே 4 மாத கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கவலை அளிப்பதாக தேசிய மகளிர் ஆணையம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, சட்டங்கள் மட்டும் இயற்றினால் மட்டும் போதுமா? என்பதே கேள்வியாக உள்ளது. பதிவு செய்யப்படும் பல வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படுவதில் காலதாமதம், உரிய ஆதாரங்கள் இன்றி விடுவிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

அண்மையில்,  புகார் தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் பொதுவெளியில் வெளியான சம்பவம், பெண்கள் பாதுகாப்பிற்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காக பல முன்னோடி திட்டங்களை கொண்டு வருவதாக மார்தட்டிக் கொண்டால் மட்டும் போதுமா? பள்ளி மற்றும் கல்லூரிகளில் மட்டுமின்றி, ஒவ்வொரு இடத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டாமா?

ஆனால், ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர், மூத்த அமைச்சர் துரைமுருகனோ, தமிழ்நாட்டில் மட்டுமா பாலியல் பலாத்காரங்கள் நடக்கிறது? டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற ஊர்களில் எல்லாம் நடக்கவில்லையா என சட்டமன்றத்திலேயே கேட்கிறார். இந்த அரசிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்து இதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்?

Image Source : Getty Image.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry