
2.50 Mins Read: பா.ஜ.க-வுக்கும், அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையேயான மோதல் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு மோதல் அதிகரித்திருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ இதழான ஆர்கனைசரில், அந்த அமைப்பைச் சேர்ந்த ரத்தன் ஷர்தா (ஆர்.எஸ்.எஸ். தொடர்பாக ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்ற இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்) என்பவர் கட்டுரை எழுதியிருக்கிறார். ‘மோடி 3.0 – தவறுகளை சரிசெய்வதற்கான ஓர் உரையாடல்’ (Modi 3.0: Conversation for course correction) என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில், ‘பா.ஜ.க. தலைவர்களும், நிர்வாகிகளும் வீதிகளில் ஒலிக்கும் மக்களின் குரல்களுக்கு செவிசாய்ப்பதில்லை. மாறாக, பிரதமர் மோடியின் புகழ் வெளிச்சத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தங்களைப் பற்றிய அதீத நம்பிக்கையில் பா.ஜ.க. தலைவர்கள் இருந்தனர். ஆனால், யதார்த்த நிலை என்னவென்பதை தேர்தல் முடிவுகள் காண்பித்துவிட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் செல்வாக்கு என்ற குமிழுக்குள் வசதியாக அமர்ந்து கொண்டு, எப்படியும் 400 இடங்களில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு இந்த தேர்தல் முடிவு உண்மை நிலவரத்தை உணர்த்தி உள்ளது.

பிரதமர் மோடி, 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனக் கூறியது, தங்களுக்கு விதிக்கப்பட்ட இலக்கு என்பதையே அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. களத்தில் இறங்கி கடுமையாக உழைத்தால் மட்டுமே, இலக்கை அடைய முடியும் என்பதை உணரவில்லை. போஸ்டர்கள், செல்ஃபிகளை சமூக வலைதளங்களில் பகிர்வதால் வெற்றி கிடைக்காது. தெருவில் இறங்கி மக்களின் குரலை கேட்க, அவர்கள் தவறிவிட்டனர்.
மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உடன் பா.ஜ.க. ஆடிய தேவையற்ற அரசியல் ஆட்டங்கள், அங்கு மிக மோசமான முடிவைத் தந்துள்ளன. ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும், மும்பை தாக்குதலை ஆர்.எஸ்.எஸ். அரங்கேற்றியது என்றும் பேசிய காங்கிரஸ் தலைவர்களை பா.ஜ.க-வுக்குள் சேர்த்தது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1973, 1977க்கு பின் ஆர்.எஸ்.எஸ். நேரடி அரசியலில் ஈடுபட்டதில்லை.
தேசத்தை பாதிக்கும் பிரச்னைகள், வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், அவ்வளவு தான். நாங்கள் பா.ஜ.க-வுக்கான களப்படை அல்ல. அதையும் தாண்டி தேர்தல் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் ஒத்துழைப்பு தேவைப்பட்டால், அதை பா.ஜ.க. தலைவர்கள் தான் கேட்க வேண்டும். இந்த முறை அவர்கள் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை. எங்கள் ஒத்துழைப்பு தேவையில்லை என நினைத்திருக்கலாம்.
வேட்பாளர்கள் மாற்றம், கட்சி மாறியவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போன்றவை தோல்வியாக மாறியது. கட்சியில் சமீபத்தில் இணைந்தவர்களுக்கு இடமளிக்க, சிறப்பாக செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்கப்பட்டனர். வேட்பாளர்களில் சுமார் 25 சதவீதம் பேர் அண்மையில் பாஜகவில் இணைந்தவர்கள் என்பது தெரியவருகிறது. உள்ளூர் பிரச்சினைகள், வேட்பாளரின் சாதனைகள் முக்கியமானவை. உள்ளூர் பாஜக தொண்டர்களின் அக்கறையின்மையும் இலக்கை எட்ட முடியாததற்கான காரணியாக பார்க்கப்படுகிறது.
அமைச்சர்களை மறந்துவிடுங்கள், உள்ளூர் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வை சந்திப்பதற்கு சாத்தியமில்லை என்பதுதான் பல ஆண்டுகளாக பாஜக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மற்றும் சாதாரண குடிமகனின் மிகப்பெரிய குறையாக உள்ளது. பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள், அமைச்சர்கள் ஏன் எப்போதும் “பிஸியாக” இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் தங்கள் தொகுதிகளில் காணப்படவில்லை? ஐந்தாண்டுகளில் குறைந்தது மூன்று முறையாவது தனது தொகுதியில் தீவிரமாக பணியாற்றிய எம்.பி.யை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் நேரத்தை செலவிடும் பாஜகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், பெரும்பாலும் பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் படுகொலை குறித்து மௌனம் காத்தனர். இதனால் பாஜக தலைமைக்கு தொண்டர்கள் மீது அக்கறை இல்லை என்ற கருத்து வேரூன்றி விட்டது. ராமரையும், இந்து தர்மத்தையும் இழிவுபடுத்தும் நபர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கிறது.
அனுபவம் வாய்ந்த நுபுர் சர்மா, பொதுவெளியில் பகிரங்கமாக சாடப்படுகிறார். நான் பலமுறை சொன்னபடி, அவர் ஹதீஸை மட்டுமே மேற்கோள் காட்டி பேசினார்; அவர் தவறே செய்திருந்தாலும், முன்னணி களப்பணியாளர்களை இப்படித்தான் நடத்துவீர்களா? மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா போன்ற கடினமான சூழல் நிலவும் மாநிலங்களில் தொண்டர்கள் எவ்வாறு பாதுகாப்பாக உணர்வார்கள்?’ என்பது உள்பட பல்வேறு கருத்துகளை, விமர்சனங்களை ரத்தன் ஷர்தா பதிவு செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ.க-வின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க இடையிலான ஈகோ மோதலை வெளிப்படுத்தும் வகையில் சில கருத்துக்களைச் சொல்லியிருந்தார். அதாவது, தன் சொந்தப் பிரச்னைகளை தாமாகவே கையாளக்கூடிய நிலையில் பா.ஜ.க இருக்கிறது. அதற்கு ஆர்.எஸ்.எஸ் தேவையில்லை என்று அவர் கூறியிருந்தார். மேலும், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தையும், தற்போது மோடி பிரதமராக இருக்கும் காலத்தையும் ஒப்பிட்டு அவர் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். வாஜ்பாய் காலத்தில் ஆர்.எஸ்.எஸ். உதவி தேவைப்படும் அளவுக்கு சிறிய சக்தியாக பா.ஜ.க. இருந்தது. இப்போது பா.ஜ.க. வளர்ந்துவிட்டது. யாருடைய தயவுமின்றி பா.ஜ.க. சுயமாக இயங்குகிறது என்ற ரீதியில் ஜே.பி.நட்டா பேசியிருந்தார்.

ஆனால், ஜே.பி.நட்டா சொன்னதற்கு மாறாக, மக்களவைத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. பா.ஜ.க 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் வெற்றிபெறும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 240 தொகுதிகளில்தான் பா.ஜ.க. வென்றது. ஆட்சி அமைக்கத் தேவையான 272-ஐ பா.ஜ.க-வால் தொடமுடியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 293 இடங்கள்தான் கிடைத்தன. எனவேதான், யதார்த்தம் புரியாமல் பா.ஜ.க. தலைவர்கள் மிதப்பில் இருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் தரப்பு கூறுகிறது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சில கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது, ‘உண்மையான சேவகர்கள் திமிரோடு இருக்க மாட்டார்கள்’ என்று பா.ஜ.க-வினரை மறைமுகமாக அவர் விமர்சித்திருந்தார். ஆனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியதிகாரத்தில் அமரும் அளவுக்கு கட்சி வளர்ந்திருக்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்து இருப்பதற்கு பா.ஜ.க தலைவர்கள் விரும்பவில்லை என்பதையே இந்த மோதல் எடுத்துக்காட்டுகிறது. இது மேலும் தீவிரமடையும் என்றே தெரிகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry