
அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளரும் (AIFETO – ஐபெட்டோ), தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “சென்னை வேப்பேரியில் 188 ஆண்டுகள் பழமைவாய்ந்த “பென்டிங்க்” (Bentinck) பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் பிரிவு மற்றும் சுயநிதி கல்வி பிரிவு என இரண்டு பிரிவுகளைக் கொண்டு இயங்கி வருகிறது. பள்ளி நிர்வாகம் அரசு உதவி பெறும் பிரிவுகளில் (aided section) மாணவிகள் சேர்க்கையைத் திட்டமிட்டு மறுத்து வருவதாகத் தெரிகிறது.

அதேநேரம், CBSE பாடத்திட்டத்தின் கீழ் உள்ள சுயநிதிப் பிரிவில் (Self Finance) குழந்தைகளைச் சேர்க்குமாறு பள்ளி நிர்வாகம் பெற்றோரை கட்டாயப்படுத்துவதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், கல்வி உலகில் ஒரு கருப்புப் புள்ளியையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அத்துமீறல்கள் தமிழக அரசின் கல்வி கொள்கைகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை நேரடியாகப் பறிக்கும் செயலாகும்.
அரசு உதவி பெறும் பிரிவில் முழுக்க முழுக்க ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள் அதிகம் படித்து வருகின்றனர். ஆனால், அரசு உதவி பெறும் பிரிவை விட அதிக கட்டணம் கொண்ட CBSE பாடத்திட்டத்தில்தான் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
அரசு உதவி பெறும் பிரிவு மாணவர்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கப்படுகிறது, மேலும் அரசு உதவி பெறும் ‘பிரிவு மூடப்படுகிறது’ என்று போலிக் காரணம் கூறி மாணவர்களின் கல்வி உரிமை அப்பட்டமாக மறுக்கப்படுகிறது,” என்ற குற்றச்சாட்டு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இது கல்வி உரிமைச் சட்டம் (Right to Education – RTE Act) வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.
Also Read : ஞாபக மறதி இனி இல்லை! நினைவாற்றலை அதிகரிக்கும் 15 சிறந்த உணவுகள்! மூளை ஆரோக்கியத்துக்கான டிப்ஸ்!
சில ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் மாணவிகள் சேர்க்கை மறுக்கப்படுவதால், 2000 மாணவிகள் படித்த வந்த அந்தப் பள்ளியில், தற்போது வெறும் 500 மாணவிகளே படிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமல்ல, மாணவிகள் எண்ணிக்கை குறைந்ததை சுட்டிக்காட்டி, ஏற்கனவே 10 ஆசிரியைகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 ஆசிரியைகளை பணியிட மாற்றம் செய்யப்போவதாக 13.05.2025 அன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மாணவிகள் இதைக்கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்த பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பெற்றோர் 150 பேர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, மாவட்டக் கல்வி அலுவலர் கடந்த ஜனவரி மாதம் விசாரணை நடத்தியும், இதுவரை உறுதியான, வெளிப்படையான நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டனத்திற்குரியது.
சுயநிதிப் பிரிவில் ரூ.20,000 கட்டணம் செலுத்திச் சேர்க்கப்பட்ட மாணவிகளுக்கு முறையாக ரசீது கூட வழங்கப்படவில்லை என்ற பெற்றோரின் குற்றச்சாட்டு, பள்ளி நிர்வாகத்தின் சட்டவிரோத மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகளை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது. ஒரு அரசு உதவி பெறும் பள்ளி, இப்படி வெளிப்படையாகவே கட்டண வசூலில் ஈடுபட்டு, அதற்கான ரசீது கூட வழங்காமல் இருப்பது பெரும் முறைகேடாகும்.
பள்ளியில் ஏற்கனவே படிக்கும் குழந்தைகள் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரது முக்கிய கோரிக்கை, பள்ளியின் அரசு உதவி பெறும் பிரிவை மூடக்கூடாது என்பதே ஆகும். இந்தப் பள்ளியில் பல வருடங்களாக தெலுங்கு வழிக் கல்வி என்ற பெயரில் மாணவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டது குறித்தும், பிறகு உயர் அதிகாரிகளிடம் முறையிட்ட பின்னரே சேர்க்கை கிடைத்தது என்பதையும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இவை அனைத்தும் திட்டமிட்ட முறையில் அரசு உதவி பெறும் பிரிவை மூடி, சுயநிதிப் பிரிவை வளர்க்கும் சதிச் செயல்களாகவே தோன்றுகின்றன. அரசு உதவி பெறும் பிரிவை முற்றிலும் ஒழித்துவிட்டு சுயநிதி கல்வி பிரிவில் மட்டும் சேர்க்கை நடத்துவது என்பது, ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி உரிமையை முற்றிலும் பறிப்பதாகும். ஏழை மாணவிகளின் கல்வி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
வேப்பேரி “பென்டிங்க்” பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் அத்துமீறல்கள் குறித்து தமிழக அரசு, குறிப்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமை ஆசிரியை மற்றும் உதவித் தலைமை ஆசிரியை உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மீது விசாரணை நடத்தி, யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி அரசு உதவி பெறும் பிரிவில் சேர்க்கை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அப்பள்ளியை முழுமையாக அரசு உதவி பெறும் பள்ளியாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியை தனியார் பள்ளியாக மாற்ற முயற்சிக்கும் நிர்வாகத்தின் செயலை ஏற்கவே முடியாது.
தமிழகத்தின் கல்வித் தரத்தையும், சமூக நீதியையும் காப்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று அகில இந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (AIFETO) சார்பிலும், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் மூத்த தலைவர் என்ற முறையிலும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Contact AIFETO Annamalai @ 94442 12060 / 9962222314. annamalaiaifeto@gmail.com
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry