25வது லாக்அப் மரணம் – திமுக அரசின் வெற்றிக் குறியீடா? கோவில் காவலாளியின் கொடூர மரணம், நீதிக்கு சவாலா?

0
44
tamilnadu-police-torture-custodial-deaths-vels-media
Shocking details emerge from Sivaganga custodial death: Ajith Kumar allegedly tortured by a police 'special team' in illegal custody. Eyewitness accounts, legal implications, and ongoing demands for justice. Pic. - Deceased Temple Guard Ajith Kumar.

சிவகங்கை: ஜூன் 30, 2025 – தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே காவல் நிலைய மரணங்கள் அதிகரித்து அதுதொடர்பான அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிகழ்ந்துள்ள 25வது காவல் நிலைய கொலையாகப் பதிவாகியுள்ள, சிவகங்கையைச் சேர்ந்த அஜித் குமாரின் (27) மரணம், காவல்துறை ‘சிறப்புப் படையினரின்’ அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தியுள்ளது.

கோயில் காவலர் அஜித்குமார், சட்டவிரோதக் காவலில் விசாரணையின் போது கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையும், நீதிமன்ற விசாரணையும் இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகின்றன.

Also Read : அதிகாரி மேல் புகார் கொடுத்தா யார் விசாரிக்கிறாங்க தெரியுமா? சம்பந்தப்பட்ட அதிகாரி தான்! – மக்கள் நம்பிக்கையை குலைக்கும் ‘முதலமைச்சரின் முகவரி’(CM Cell)!

உடலில் 15க்கும் மேற்பட்ட காயங்கள்! – சாட்சியும், விசாரணையும்:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனையில், அவரது உடலில் குறைந்தது 15க்கும் மேற்பட்ட வெளிக்காயங்களும், மிகக் கடுமையான உள் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது, காவல்துறையால் அஜித்குமார் கொடூரமாகத் தாக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டை வலுப்படுத்துகிறது.

சம்பவத்தின் நேரடி சாட்சி, அஜித்தின் தம்பி நவீன் குமார். மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் பிரசாத் பதிவு செய்துள்ள வாக்குமூலத்தில், தான் உள்பட 5 பேர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், ‘சிறப்புப் போலீஸ் படை’யினர் அஜித் குமாரின் கைகளை கட்டி கடுமையாகத் தாக்கியதை தான் கண்டதாகவும், அதன் பின்னர் அஜித் மயக்கமடைந்து உயிரிழந்ததாகவும் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தச் சாட்சியம், விசாரணை என்ற பெயரால் காவல் துறையினர் நடத்திய அத்துமீறல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. நீதித்துறை விசாரணை உறுதி செய்துள்ள இந்தக் கொடூரத் தாக்குதல், காவல்துறையின் ‘சட்டவிரோதக் காவலில்’ நடந்தேறியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி:

சிவகங்கை மாவட்டம் மதுப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார், திருப்புவனம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற மாடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிகக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 27ந் தேதி அன்று, சிவகாமி மற்றும் அவரது மகள் நிகிதா என்ற இரண்டு பெண்கள் அளித்த புகாரின் பேரில் அஜித் முதலில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர்களது காரில் இருந்து பத்து சவரன் தங்க நகைகள் காணாமல் போனதாகப் புகாரில் கூறப்பட்டிருந்தது.

sivaganga-custody-death-ajith-kumar-vels-media

விசாரணையில், அஜித் குமார், அவரது சகோதரர் நவீன் மற்றும் மேலும் மூன்று பேர், சிறப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, காவல் நிலையத்திற்கு அல்லாமல், திருப்புவனம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த அதிகாரபூர்வமற்ற விசாரணைகளின் போது ஐவரும் தாக்கப்பட்டதாகவும், அஜித் இறுதியில் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பத்ரகாளியம்மன் கோசாலையில் வைத்தும் அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரும் தாக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

sivaganga-custody-death-ajith-kumar-vels-media
கோவிலின் பின்புறம் உள்ள கோசாலையில் அஜித் குமார் தாக்கப்பட்டார் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். சிதறிக் கிடக்கும் உடைந்த பிளாஸ்டிக் பைப்புகள், அஜித் உள்ளிட்டோரை அடிக்க பயன்படுத்தியது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

நேரடி வாக்குமூலத்தின் அதிர்ச்சித் தகவல்கள்:

நவீன் குமாரின் விரிவான வாக்குமூலம் நீதித்துறை மாஜிஸ்திரேட்டால் பதிவு செய்யப்பட்டுள்ளது. “எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லவில்லை. போலீஸ் வாகனத்தில் எங்களை வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்தார்கள். காவல்துறை எங்களை ஒரு ஏரி பகுதிக்கு அழைத்துச் சென்றது. அங்கே என் அண்ணனின் கைகளைக் கட்டி, அவரை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக என்னை அரை மணி நேரம் அடித்தார்கள்” என்று நவீன் குமார் தெரிவித்துள்ளார்.

குழுவினர் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முதலில் திருப்புவனம் கால்நடை மருத்துவமனைக்கு அருகில், பின்னர் மாடப்புரம் பள்ளி விடுதிக்குப் பின்னால், இறுதியாக உள்ளூர் பேருந்து டிப்போவுக்குப் பின்னால் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட ஏரி பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்குதான், அஜித் மயக்கமடையும் வரை மணிக்கணக்கில் தாக்கப்பட்டார் என்று நவீன் கூறியுள்ளார்.

Also Read : முதலமைச்சர் நிகழ்ச்சியில் மாணவர்கள் மீது ‘அதிகார அத்துமீறல்’: அரசும், போலீசும் சட்டத்தை மீறினார்களா?

சித்திரவதையை நிறுத்த விரும்பி, காணாமல் போன தங்கத்தை மீட்க உதவுவதாக அஜித் ஒப்புக்கொண்டார். கோவிலில் உள்ள உதவி ஆணையர் அலுவலகம் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகைக்குத் தன்னை அழைத்துச் சென்றால் உண்மையைக் கூறுவதாகக் கூறினார். ஆனால், அங்கே அழைத்துச் சென்றதும், தான் பொய் சொன்னதாக அஜித் ஒப்புக்கொண்டார். அவரால் சித்திரவதையைத் தாங்க முடியவில்லை என்று நவீன் நீதித்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார். இதன்பிறகு அஜித்துக்கு என்ன நடந்தது என்பது அவரது நவீன் உள்பட யாருக்கும் தெரியவில்லை.

அஜித் உடனடியாக மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவரது சகோதரர் நவீனிடம், அஜித் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் ‘இறந்துவிட்டதாகக்’ கூறப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

sivaganga-custody-death-ajith-kumar-vels-media

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள் – ஒரு FIR பதிவாகியுள்ளதா?

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறப்புப் படையில் இருந்த பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 6 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (BNSS) சட்டம் 176 (விசாரணைக்கான நடைமுறை) பிரிவின் கீழ், காவல் நிலைய மரணங்கள் தொடர்பான ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினர் மீது, தாக்குதல் அல்லது கொலை குற்றச்சாட்டு சுமத்தி எந்த ஒரு FIR-ம் நேரடியாகப் பதிவு செய்யப்படவில்லை.

எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

‘ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது’ என சினிமா Review எழுதிய முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? மு.க. ஸ்டாலின், விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையில் பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?,” என தனது எக்ஸ் பக்கத்தில் அஜித் மரணம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதி மறுக்கப்பட்டதா? அரசியல் தலையீடும், இழப்பீடு வாக்குறுதியும்:

அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு மாடப்புரம் கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்யக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர். இதற்கிடையில், உள்ளூர் திமுக நிர்வாகிகள் அஜித்தின் வீட்டிற்குச் சென்று குடும்ப உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திமுக கொடி பொறிக்கப்பட்ட வாகனத்தில் அஜித்தின் குடும்பத்தினர் காவல்துறையின் துணையுடன் அழைத்துச் செல்லப்பட்டதற்கு அதிமுகவினரும் கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் அதிகரித்தது. உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, காவல் நிலைய மரண வழக்குகளில் இது ஒரு தொடர்ச்சியான நடைமுறையாக மாறிவிட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் நடந்தவுடன் திமுக நிர்வாகிகள் உடனடியாக வந்து, காவல்துறையினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று குடும்பத்தினரை வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், அஜித்தின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் அமைச்சரின் அலுவலகத்திலிருந்து வெளியாகவில்லை.

Also Read : “பசியோடு நின்று கடன் கேட்கிறோம்… NOC, சிபில் ஸ்கோர் கேட்கிறார்கள்!” – புதிய விதிகளால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அவலம்!

சட்டப் பார்வையிலும், மனித உரிமை ரீதியாகவும்:

* சட்டவிரோதக் காவல் (Illegal Detention): இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21, ஒருவரின் உயிருக்கும், தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. காவல் நிலையத்திற்கு வெளியே, அதிகாரபூர்வமற்ற முறையில் ஒருவரைக் காவலில் வைத்து, சித்திரவதை செய்வது சட்டவிரோதம். இது BNSS சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
* பிரேதப் பரிசோதனை அறிக்கை (Post-mortem Report): அஜித்தின் உடலில் கண்டறியப்பட்டுள்ள காயங்கள், அவர் கடுமையாகத் தாக்கப்பட்டதற்கான நேரடி ஆதாரங்கள். இந்த அறிக்கை காவல் துறை அதிகாரிகள் மீது பி.என்.எஸ்.எஸ் சட்டம் 103 (காயம் விளைவித்தல்) அல்லது 104 (கடுங்காயம் விளைவித்தல்) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய போதுமான முகாந்திரத்தைக் கொண்டுள்ளது. மரணம் ஏற்பட்டால், பி.என்.எஸ்.எஸ் சட்டம் 101 (கொலை) பிரிவின் கீழ் வழக்குப் பதிய வேண்டும்.
* விசாரணைக்கான நடைமுறை (Procedure for Investigation): பி.என்.எஸ்.எஸ் சட்டம் 176ன் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது, இது காவல் நிலைய மரணங்களை விசாரிக்கும் நடைமுறை பற்றியது. ஆனால், இது காவல்துறையினர் மீதான நேரடிக் குற்றச்சாட்டாக அமையாது. உண்மையான விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
* நீதித்துறை விசாரணை (Judicial Inquiry): நீதித்துறை மாஜிஸ்திரேட்டால் நவீனின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பது ஒரு முக்கியமான படி. இது சித்திரவதைக்கு எதிரான முக்கிய ஆதாரமாக அமையும்.
* மனித உரிமை மீறல் (Human Rights Violation): காவல் நிலைய மரணங்கள், சித்திரவதைகள் போன்றவை அப்பட்டமான மனித உரிமை மீறல்களாகும். தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை இதுபோன்ற சம்பவங்களில் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
* அரசியல் தலையீடு: இது போன்ற வழக்குகளில் அரசியல் தலையீடுகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுக்கும் என்பதால், அரசு இந்தப் புகார்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முடிவுரை:

அஜித்குமாரின் மரணம் என்பது ஒரு தனிநபர் மீதான மீறல் அல்ல — அது தமிழ்நாடு காவல்துறையின் பயங்கரமான சீரழிவின் வெளிப்பாடாகும். இது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த 25வது காவல்நிலைய மரணம் என்பது ஒரு கணக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு, மனித உரிமை என்ற அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கும் மோசமான எச்சரிக்கையாகும்.

sivaganga-custody-death-ajith-kumar-vels-mediasivaganga-custody-death-ajith-kumar-vels-media

இது காவல்துறையின் சார்பு அதிகாரம் குறித்த தவறுகள் மட்டுமல்ல, சட்டத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை முற்றிலும் சிதைக்கும் வகையிலும் அமைந்துள்ளது. அஜித்குமாரின் மரணத்தில் தொடர்புடைய போலீசாரையும், அவர்களை பாதுகாப்பதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்ட அரசுப் பணியாளர்களையும், அரசியல் அதிகாரத்தையும் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போலியான விசாரணைகள் அல்லது தற்காலிக இடை நீக்கங்களால் முடிவதில்லை. கடுமையான சட்ட நடவடிக்கையும், நிரந்தர காவல் சீர்திருத்தங்களும் தேவையாக உள்ளன. இது போல இன்னொரு மரணம் தமிழ்நாட்டில் மீண்டும் நிகழக்கூடாது. காவல்நிலைய மரணத்தை சில்வர் ஜுப்ளியை கண்டுவிட்ட திமுக அரசு, இதற்குப் பிறகாவது கண்விழிக்குமா என்பது தெரியவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry