
ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால், பதற்றமும் உயிர் பயமும் ஏற்படுவது இயல்பு. ஆனால், அந்த பதற்றம்தான் முதல் எதிரி என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், பாம்புக்கடி ஒரு தீவிரமான பொது சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. உலக அளவில் நிகழும் பாம்புக்கடி இறப்புகளில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில்தான் நிகழ்கின்றன என்பது கவலைக்குரிய உண்மை.
Also Read : பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
இந்தியாவில் பாம்புக்கடி புள்ளிவிவரங்கள்:
* ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் பாம்புக்கடிகள் இந்தியாவில் ஏற்படுகின்றன.
* இவற்றில் 27 லட்சம் விஷக்கடிகளாக மாறுகின்றன.
* ஆண்டுக்கு 45,900 முதல் 58,000 பேர் வரை பாம்புக்கடியால் உயிரிழக்கின்றனர்.
* கடந்த 20 ஆண்டுகளில், இந்தியாவில் சுமார் 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிரிழந்துள்ளனர்.
* பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் 30 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள், மற்றும் கால் பகுதியினர் குழந்தைகள்.
* பெரும்பாலான பாம்புக்கடி மரணங்கள் பருவமழை காலத்திலேயே (ஜூன் – செப்டம்பர்) நிகழ்கின்றன.
* விவசாயிகள் மற்றும் வெளிப்பணி செய்பவர்களே பெரும்பாலும் பாம்புக்கடிக்கு ஆளாகின்றனர்.
* பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் பாம்புக்கடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் 60-க்கும் மேற்பட்ட இனங்கள் விஷத்தன்மை கொண்டவை அல்லது லேசான விஷம் கொண்டவை. மருத்துவ ரீதியாக மிகவும் முக்கியமானவை, “பிக் ஃபோர்” (Big Four) என்று அழைக்கப்படும் நான்கு வகை பாம்புகள்:
* கண்ணாடி விரியன் (Russell’s Viper)
* கட்டு விரியன் (Common Krait)
* நல்ல பாம்பு (Cobra)
* சுருட்டை விரியன் (Saw-scaled Viper)
பாம்பு கடித்தவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது?
பாம்புக்கடி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் யுனிவர்சல் ஸ்னேக்பைட் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும், முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ், பிபிசியிடம் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்:
- பதற்றப்படக்கூடாது: பாம்பு கடித்தால், முதலில் பதற்றப்படக்கூடாது. பதற்றப்படும்போது ரத்த ஓட்டம் அதிகரித்து, நஞ்சு வேகமாக மற்ற பாகங்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது.
- கயிறு கட்டக்கூடாது: பலர் பாம்பு கடித்த இடத்துக்கு மேலாக கயிறு, துணி போன்றவற்றை இறுக்கமாகக் கட்டுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. ரத்த ஓட்டம் முழுவதும் தடைபடுவதோடு, நஞ்சு அங்கேயே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். திசுக்கள் அழுகி, அந்தப் பாகத்தையே நீக்கும் அபாயம் உருவாகலாம். உடனடியாக மருத்துவமனை செல்ல முடியாத சூழலில் (ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்றால்) மட்டுமே இது முதலுதவியாக செய்யலாம்.
- கழுவக்கூடாது: நாய்க்கடிக்குச் செய்வது போல சோப்பு போட்டு கண்டிப்பாகக் கழுவக்கூடாது.
- ஓடக்கூடாது: பாம்புக்கடிக்கு ஆளான நபர் நடப்பது, ஓடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. எலும்பு முறிவு ஏற்பட்டால் எப்படி அந்த இடத்தைச் சிறிதும் அசைக்காமல் சிகிச்சைக்குச் செல்வோமோ, அதேபோல்தான் பாம்புக்கடியின் போதும் செயல்பட வேண்டும். உடல் அசைவுகள் நஞ்சு விரைவாகப் பரவ வழிவகுக்கும்.
- கீறவோ, உறிஞ்சவோ கூடாது: சிகிச்சை என்ற பெயரில் கடிபட்ட இடத்தைக் கீறிவிட்டு, வாய் வைத்து நஞ்சை உறிஞ்சி வெளியே எடுக்க முயற்சி செய்யக்கூடாது. இப்படிச் செய்வதால் நஞ்சு வெளியேறாது. மாறாக, நஞ்சு மேலும் ஆழமாகப் பரவலாம். வாய் வைத்து உறிஞ்சும் நபருக்கு வாய் புண் இருந்தால், நஞ்சு அந்த நபருக்கு வேகமாகப் பரவும் அபாயம் உண்டு.

பாம்பு கடித்தவுடன் செய்ய வேண்டியது என்ன?
- பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும்: இந்தியாவில் ஏற்படும் பாம்புக்கடி சம்பவங்களில் சுமார் 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. வெறும் 5% மட்டுமே நச்சுப் பாம்புகளால் ஏற்படுகின்றன. எனவே, முதலில் பயப்படுவதையும் பதற்றப்படுவதையும் தவிர்ப்பது அவசியம்.
- உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்: நஞ்சுள்ளதோ, நஞ்சற்றதோ, பாம்பு கடித்துவிட்டாலே உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது மிகமிக அவசியம். பாம்பு கடித்த 30 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரத்துக்குள் மருத்துவ உதவியைப் பெற்றால் உயிருக்கு ஆபத்து ஏதுமின்றிக் காப்பாற்ற முடியும்.
- ஆபரணங்களை அகற்றவும்: கடித்த இடத்திலோ அல்லது அதைச் சுற்றியோ அணிந்திருக்கும் வளையல், கொலுசு, மெட்டி, மோதிரம் போன்ற ஆபரணங்கள் அல்லது கயிறுகள் என எதுவாக இருந்தாலும் அவற்றை அகற்றிவிட வேண்டும்.
- மாற்றங்களை கவனிக்கவும்: பாம்புக்கடிக்கு உள்ளான நபரின் உடலில் ஏற்படும் மாற்றங்களை (உதாரணமாக, வலி, வீக்கம், தலைச்சுற்றல்) குறித்து வைத்து மருத்துவரிடம் தெரிவிப்பது சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்தியாவில் நஞ்சுமுறி மருந்துகளின் நிலை என்ன?
பாம்புக்கடிக்கான நஞ்சுமுறி மருந்துகளில் (antivenom) இரண்டு வகைகள் உள்ளன:
1. மோனோவேலன்ட் (Monovalent): ஒரு குறிப்பிட்ட பாம்பின் நஞ்சை முறிக்கப் பயன்படும் மருந்து.
2. பாலிவேலன்ட் (Polyvalent): ஒன்றுக்கும் மேற்பட்ட பாம்புகளின் நஞ்சுக்கு எதிராகச் செயல்படக்கூடிய மருந்து.
இந்தியாவில் பாலிவேலன்ட் நஞ்சுமுறிவு மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதாவது, நாகம், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டு விரியன் என எந்தப் பாம்பு கடித்தாலும் அதற்கு ஒரே நஞ்சுமுறி மருந்து மூலம் சிகிச்சையளிக்க முடியும்.
சிகிச்சை முறை:
பாம்பு கடித்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், உடனடியாக நஞ்சுமுறி மருந்து வழங்கப்படாது. 20 நிமிட ரத்த உறைவு பரிசோதனை (20min WBCT) மேற்கொள்ளப்படும். இந்த சோதனையில், ரத்தம் உறையும் தன்மை சரியாக உள்ளதா என்று கண்டறியப்படும். நச்சுப் பாம்பு கடித்திருந்தால், அதன் நஞ்சின் காரணமாக ரத்தம் 20 நிமிடங்களுக்கு உறையாது.
இதன் மூலம், கடித்தது நச்சுப் பாம்பா, நஞ்சற்ற பாம்பா என்பதை மருத்துவர்கள் கண்டறிவார்கள். நச்சுப் பாம்புதான் கடித்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே நஞ்சுமுறி மருந்து வழங்கப்படும். நஞ்சில்லாத பாம்பு கடித்து, நஞ்சுமுறி மருந்து கொடுக்கப்பட்டால், அதன் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பாம்புகள் சுற்றுச்சூழலுக்கு அவசியமானவை. பாம்புகளை வேட்டையாடுதல், கொலை செய்தல், பாம்பு பிடிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலமே பாம்புத் தாக்குதல்களை குறைக்க முடியும் என்று முனைவர் மனோஜ் வலியுறுத்துகிறார்.
Image Source : Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry</a