‘பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்’? – உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

0
37
AIADMK General Secretary Edappadi Palaniswami heavily criticized TN CM M.K. Stalin for skipping three NITI Aayog meetings, alleging 'fear' of ED raids and corruption pushed him to meet PM Modi now.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காதது ஏன், இப்போது திடீரென சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள், அமலாக்கத்துறை சோதனைகள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

“மக்கள் நலனில் அக்கறையில்லா முதலமைச்சர்!”

“தமிழகத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை, திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லி, கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அந்த மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் தமிழகத்துக்குத் தேவையான நிதியைப் பெற்றிருக்கலாம், புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கலாம், மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை கூட்டத்தில் தெரிவித்திருக்கலாம். ஆனால், இவர் மக்கள் மீது அக்கறையில்லாத முதலமைச்சர் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது,” என்று எடப்பாடி பழனிசாமி சாடினார்.

Also Read : நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் இறப்பு! மு.க. ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!

“ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல், பயம்!”

திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். “ஸ்டாலின் மாடல் ஆட்சியில், பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. டாஸ்மாக் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியுள்ளது. எனவே, அமலாக்கத்துறை நடவடிக்கைள் மற்றும் அதனால் ஏற்பட்ட பயம்தான் இப்போது பிரதமரை சந்திக்கக் காரணம். முதலமைச்சர் தன் கடமையை செய்யத் தவறிவிட்டார்,” என்றார் அவர்.

“திமுகவின் இரட்டை வேடம்!”

திமுகவின் நிலைப்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மோடி தமிழகம் வந்தபோது எல்லாம் கருப்பு பலூன் விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதே மோடி தமிழகம் வரும்போது வெள்ளைக் கொடி பிடிக்கின்றனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியான பிறகு ஒரு நிலைப்பாடு. இதுதான் திமுகவின் இரட்டை வேடம்,” என்று பழனிசாமி விமர்சித்தார்.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் பயம் குறித்த சர்ச்சை:

“கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமரை சந்திக்காமல், இப்போது திடீரென சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? பிரச்சனை வந்துவிட்டது என்பதால் சந்திக்கிறார்கள். உதயநிதி கூறியது போல் பயமில்லை என்றால், அவர் தம்பி ஏன் வெளிநாட்டுக்கு ஓடினார்? இந்த வீர வசனம் எல்லாம் உள்ளூரில் இருந்துகொண்டுதான் பேச வேண்டும்,” என்று எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry