
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், மாணவர்களின் நலன் கருதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சியினை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டுமென கோரியுள்ளார்.

இதுதொடர்பான அவரது அறிக்கையில், சுட்டெரிக்கும் வெயில், வெப்ப அலையை பொருட்படுத்தாமல், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் உத்தரவிட்டிருக்கிறார். வெப்பத்தின் தாக்கம் அதிகமாவதால், வெயிலின் அளவைப் பொறுத்து பள்ளித் திறப்பை தள்ளி வைப்பது பற்றி முதலமைச்சரிடம் பேசி முடிவு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகிறார்.
மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள கோடை விடுமுறையை மீறி எந்த பள்ளியிலும் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற அரசின் அறிவுரைகளையும், பள்ளிக்கல்வித் துறையின் செயல்முறைக் கடிதத்தையும் மாவட்ட ஆட்சியர் கண்டு கொள்ளவில்லை.
வட்டார அளவிலான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்கள் விருதுநகர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5.5.2025 முதல் 15.5.2025 காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது pic.twitter.com/QAbJg2LiqM
— District Collector, Virudhunagar (@VNRCollector) May 3, 2025
மாணவர்களின் உடல்நலம், உள்ள நலன் பற்றி கவலைப்படாமல், கோடைகால சிறப்பு பயிற்சி என்ற பெயரால், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களில், ஒன்றியத்திற்கு 50 மாணவர்களை தேர்வு செய்து, காலை 9. 00 மணி முதல் 1.00 மணி வரை ஒன்றியத் தலைநகரங்களில் பயிற்சி முகாம் நடத்த முனைவர் ஜெயசீலன் உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு நேர்முக அறிவுரையையும் அவர் வழங்கியுள்ளார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கோடைகால சிறப்புப் பயிற்சி பற்றிய தகவலை தெரிவித்துள்ளார்கள். மாணவர்களை அழைத்துச் சென்று, மீண்டும் வீடு சேர்க்கும் வரை, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ளார்கள். கத்தரி வெயில் தொடங்கிவிட்ட நிலையில், வழக்கத்தை விட 6 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், மதியம் 12 மணி முதல் 3 மணிவரை வெளியே வருவதைத் தவிர்க்குமாறும் வானியலாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இப்படியிருக்க, அரசின் உத்தரவை மீறி கோடைகால பயிற்சி என்ற பெயரில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களையும், ஆசிரியர்களையும் வதைப்பது நியாயமா? சுட்டெரிக்கும் வெயிலையும், குழந்தைகளின் உடல் பாதுகாப்பைப் பற்றி கிஞ்சித்தேனும் கவலைப்படாமல், இன்று தொடங்கி(மே 5) முதல் 15ஆம் தேதி வரை கோடைக்கால சிறப்பு பயிற்சி நடைபெறவுள்ளது.
இதேபோன்று கடந்த ஆண்டும் கோடைகால சிறப்பு பயிற்சியை இதே ஆட்சியர் அறிவித்தார். அப்போதும் ஐபெட்டோ மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தோம்.
இதையடுத்து, தலைமைச் செயலாளர் கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு கூடாது என்று செய்தியாளர்கள் மூலம் தெரிவித்தார். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், பயிற்சி வகுப்பில் இருந்து தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் விலக்கு கொடுத்தார்.
அதிகார வரம்பினை மீறி, மனிதநேயமற்ற உணர்வுடன் செயல்பட்டு வரும் முனைவர் ஜெயசீலன் இந்த ஆண்டும் கோடைகால சிறப்பு பயிற்சியை நடத்துகிறார். விருதுநகர் மாவட்டத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் மீது, பெற்றோரும் ஆசிரியர்களும் சங்கடப்படுகிற சூழ்நிலையை ஆட்சியர் உருவாக்குகிறார். உடனடியாக பயிற்சி வகுப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறோம். தவறினால், இதை ஊடகங்கள் மூலம் மாநில அளவிலான பிரச்சனையாக்குவதுடன், பெற்றோரை இணைத்து கடுமையான எதிர்ப்புணர்வை பதிவு செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry