நிர்வாக மாறுதல் முறைகேடு: ஆசிரியர்களின் கண்ணீரும், ஜனநாயகத்தின் கேள்வியும்! ஐபெட்டோ சுளீர்!

0
394
teachers-transfer-corruption-tamil-nadu-vels-media
An exclusive investigation into the systemic flaws of administrative transfers for teachers in Tamil Nadu. Discover how this issue, under the sharp scrutiny of AIFETO Annamalai’s, challenges the very foundations of democratic fairness. Image - TN School Education Minister Anbil Mahesh and AIFETO National Secretary V. Annamalai.

அரசியல் களத்தில் நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கும் ஜனநாயகத்தின் குரல்களை நசுக்கும் விதமாக, தமிழ்நாடு ஆசிரியர்கள் சந்திக்கும் ஒரு பெரும் சவால் தற்போது எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கல்வித்துறை நிர்வாக மாறுதல்களில் நடைபெறும் முறைகேடுகள், ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன.

இதுகுறித்து அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (AIFETO – ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றச் சொல்லி அறிவித்துள்ள நிலையில் (கடைசி தேதி: 25.06.2025), சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் அதிர்ச்சியை அளிக்கின்றன.

Also Read : மாநில கல்விக் கொள்கையை உடனடியாக வெளியிட வேண்டும் – கோச்சிங் சென்டர்களை தடை செய்யவும் ஐபெட்டோ வலியுறுத்தல்!

“கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் முன்னரே, காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிர்வாக மாறுதல் மூலம் நிரப்பப்படும். அதற்காக குறிப்பிட்ட நபர்களை அணுகினால், தயக்கமின்றி உத்தரவுகளைப் பெறலாம்” என்ற செய்திகள் பகிரங்கமாக உலா வருகின்றன. புலனக் குழுக்கள், பத்திரிகைகள் என பல தளங்களிலும், “நிர்வாக மாறுதல்கள் ஒரு வசூல் வேட்டையாக மாறிவிட்டன” என்ற குற்றச்சாட்டுகள் ஓங்கி ஒலிக்கின்றன.

இது, ஆசிரியர்கள், போராட்டக் குழுக்கள் மற்றும் ஜாக்டோ-ஜியோ போன்ற இயக்கங்கள் தொடர்ந்து முன்வைக்கும் கோரிக்கைகளை அரசு எந்தளவுக்கு செவிமடுக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. மாறாக, பள்ளி கல்வித்துறை அமைச்சகம், ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் காட்டிலும், நிர்வாக மாறுதல்களை ஒரு கொள்கை முடிவாக எடுத்து தைரியமாகச் செய்து வருகிறது. இது, பொதுமக்களின் வரிப்பணமும், நிர்வாக அமைப்பின் நேர்மையும் எந்தளவுக்குக் கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது என்பதற்கான சான்றாக அமைகிறது.

விதிமீறல்கள், அதிகார அத்துமீறல்கள்: ஓர் எடுத்துக்காட்டு

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் நடந்த ஒரு சம்பவம் நிர்வாகச் சீர்கேட்டைத் தெளிவாகக் காட்டுகிறது. ஒரு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர், அலகு விட்டு அலகு (unit to unit) நிர்வாக மாறுதல் பெற்று, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேர்ந்துள்ளார். இது ஒரு தனிப்பட்ட நிகழ்வாகத் தோன்றினாலும், இந்த வகையிலான நிர்வாக மாறுதல்கள் எந்த விதிகளின் கீழ் நடக்கின்றன, அவை எந்த நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்பது பெரும் மர்மமாகவே உள்ளது.

Also Read : சென்னையில் பள்ளி அருகே விற்கப்படும் புகையிலைப் பொருட்கள்! மளிகைக் கடைகளில் கிடைக்கும் மதுபானங்கள்! அரசு தூங்குகிறது – மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது!

முந்தைய ஆட்சிக் காலங்களில் இது நடக்கவில்லையா? என்று சிலர் கேட்கலாம். எல்லா ஆட்சி காலத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன, ஆனால் ஒரு கட்டுப்பாடான எல்லைக்கோடு இருந்தது. மூத்த இயக்குநர்கள் இருந்த காலத்தில், அமைச்சர்கள் அளவில் பரிந்துரைகள் வந்தால் கூட, “தொடர்ந்து இதுபோன்ற நிர்வாக மாறுதல்களை வழங்கினால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும்” என்று இயக்குநர்களே அமைச்சர்களுக்குத் தைரியமாக எடுத்துச் சொல்லக்கூடிய நிலை இருந்தது. ஆனால் இன்று, இயக்குநர்கள் தங்கள் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதிலேயே முனைப்பு காட்டுகிறார்கள். இது, நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கும் பெரிய சரிவை சுட்டிக்காட்டுகிறது.

வெறும் பெயர்ப்பலகைகளா பொறுப்புகள்?

இணை இயக்குநர் (நிர்வாகம்), இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி), இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) போன்ற பொறுப்புகள், நிர்வாக மாறுதல்களை வழங்குவதற்காகவே தற்போது செயல்பட்டு வருகின்றனவா? என்ற கேள்வி எழுகிறது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலம் தொடங்கி, நீதிமன்ற ஆணைகளை ஆழமாக படித்துவிட்டே அரசாணைகளை வெளியிடுவார்கள். தற்போதைய அதிகாரிகள், அரசாணைகளின் விதிகளைச் சரியாகப் படிக்காமல், தெரிந்துகொள்ளாமல், ஆசிரியர்களுக்குப் பணப் பயன்களைப் பிடித்தம் செய்வதில் அக்கறை காட்டிய இயக்குநர்களைக் கல்வித்துறையில் காண முடிகிறது.

Also Read : குழந்தை பெறுவதை தவிர்க்கும் தம்பதிகள் – ‘DINK’ வாழ்க்கை முறை பற்றிய முழுமையான பார்வை!

உதாரணமாக, இதர பாடங்களில் பட்டம் பெற்ற 766 ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதி ஆணை வழங்கியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி தொடக்கக் கல்வி இயக்குநர் (செயல்முறைகள்) வெளியிட்டுள்ளார். இதே நிர்வாக மாறுதல்களில் கையொப்பம் இடப்பட்டு, அன்றாடம் பேரம் பேசப்பட்டு, மாறுதல் ஆணைகள் வெளியாகும் போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? இந்த முரண்பாடுதான் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அசைக்கிறது.

கையொப்பமிடும் அதிகாரிகள் உணர்ந்து செயல்பட வேண்டும்!

“அமைச்சர்கள் எந்த வகையிலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால், இந்த மாறுதல் ஆணைகளில் கையொப்பமிடுபவர்கள் தான் ஒருநாள் பெருத்த பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்பதை உணர வேண்டாமா?” இது வெறும் குற்றச்சாட்டு அல்ல, எச்சரிக்கை. சட்டத்தின் பிடியில் சிக்கும் போது, அதிகாரிகள் மட்டுமே தனித்து விடப்படுவார்கள் என்பதை வரலாறு பலமுறை காட்டியுள்ளது.

அரசாணை 243க்கு திருத்திய அரசாணை வெளியிடும் வரை மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றால், குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்குப் பெருத்த பாதிப்பு ஏற்படும் என்பதை கடுமையாகவே பதிவு செய்கிறோம். பதவி உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவராத வரையில், நடைபெறுகின்ற மாறுதல் கலந்தாய்வினால் ஆசிரியர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்பதும் நிதர்சனம்.

admin-transfer-malpractices-tamil-nadu-vels-media

வெளிப்படைத்தன்மைக்கு ஒரு வாய்ப்பு: எச்சரிக்கை அல்ல, அக்கறை!

இதுவரையில் வெளிவந்துள்ள நிர்வாக மாறுதல்களை மாவட்ட வாரியாகப் பட்டியல் தயாரித்து வருகிறோம். சம்பந்தப்பட்டவர்கள் நிர்வாக மாறுதல்களை எவர் மூலம், எப்படிப் பெற்றார்கள் என்பதையும் சேகரித்து வருகிறோம். பட்டியலை வெளியிட வேண்டிய நெருக்கடியைத் தொடக்கக் கல்வித்துறையோ, பள்ளி கல்வித்துறையோ ஏற்படுத்துமேயானால், செய்தியாளர்களை அழைத்து, எங்களை போன்ற இயக்கத்தின் மூத்த தலைவர்கள், ஆட்சியின் மீது அக்கறை கொண்டவர்கள், அதை வெளியிடத் தயாராக உள்ளோம் என்பதை வெளிப்படைத்தன்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Also Read : பாம்புக்கடி: உயிர் காக்கும் கோல்டன் நிமிடங்கள்! செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்..!

நிர்வாக மாறுதல்களை நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!

கடந்த ஆட்சிக் காலத்தில், ஊழல் வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று வந்த ஒரு அமைச்சரை நாங்கள் சந்தித்தபோது, அவர் மனம் வருந்திப் பதிவு செய்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது: “இரண்டு இயக்குநர்களின் பெயரைச் சொல்லியே, ‘அவர்கள் இதைச் செய்ய வேண்டாம் என்று எனக்குச் சொன்னார்கள். ஆனால், சில இயக்குநர்கள் ‘நீங்கள் கவலைப்பட வேண்டாம், செய்யுங்கள்!’ என்று சொன்ன காரணத்தினால்தான் சிறைக்குச் செல்லக்கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்” என்றார்.

இது, அதிகாரிகளின் பொறுப்பின்மையால், அரசியல் தலைவர்கள் கூட எவ்வாறு சிக்கலில் சிக்குகிறார்கள் என்பதற்கான ஒரு நேரடி சான்று. உணர வேண்டும்! இதை உணர்ந்து நிர்வாக மாறுதல் நிறுத்தப்பட வேண்டும்! நிர்வாக மாறுதல் மூலமாக இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட வேண்டுமா?

Also Read : விவசாயிகள் வறட்சியை எதிர்கொள்வதற்கான புதிய அறிவியல் புரட்சி! வேளாண்துறையை கட்டி ஆளப்போகும் நவீன தொழில்நுட்பம்!

பொதுத் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் கடைசி மாறுதல் கலந்தாய்வு இதுதான். இந்த பொது மாறுதல் கலந்தாய்வினை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டாமா? இது எச்சரிக்கை உணர்வு அல்ல; ஆட்சியின் மீதுள்ள அக்கறை உணர்வோடு வலியுறுத்துகிறோம்! நிர்வாக மாறுதலில் கையொப்பம் இடக்கூடியவர்கள்… உங்கள் மேசையின் மீது இருக்கக்கூடிய காந்தியடிகளின் படத்தினைப் பாருங்கள்! சத்திய சோதனை உங்கள் நெஞ்சத்தைத் தொடட்டும்!

முந்தைய ஆட்சியாளர்களைப் பார்த்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூன்று வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள்! அந்த மூன்று வார்த்தைகளும் தற்போது நடைபெற்று வரும் நிர்வாக மாறுதல்களில் இரண்டறக் கலந்துள்ளது என்பதை முதலமைச்சரின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம். தீர்வு காண முன்வருவார்களா? தீர்வு காண வேண்டுகிறோம்.

Contact AIFETO Annamalai @ 94442 12060 / 9962222314. annamalaiaifeto@gmail.com

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry