நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் இறப்பு! மு.க. ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!

0
19
Another student in Tamil Nadu tragically died due to NEET exam anxiety. Opposition leader EPS demands CM M.K. Stalin apologize, accusing the DMK of failing its promise to cancel NEET.

தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது; நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

நீட் தேர்வுக்கு அஞ்சி நடப்பாண்டில் மட்டும் இதுவரை 6 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, ஏப்ரல் 3-ஆம் தேதி எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி, கடந்த மே 4-ஆம் தேதி கயல்விழி என 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இப்போது கவுதம் என்ற மாணவர் உயிரிழந்திருக்கிறார்.

Also Read : நீட் தேர்வு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கிறது! திமுக அரசின் கபட நாடகம் குறித்து ஈபிஎஸ் விரிவான விளக்கம்!

சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம், இவர் ஏற்கனவே இரண்டு முறை நீட்தேர்வு எழுதி இருந்தார். போதிய மதிப்பெண் எடுக்காததால் தற்போது நடந்த நீட் தேர்வை மூன்றாவது முறையாக கௌதம் எழுதியிருந்தார். கௌதம் சரியாக தேர்வு எழுதவில்லை என தெரிகிறது. இதனால் சில நாட்களாக அவர் வீட்டில் சோகமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர் இல்லாதபோது நேற்று இரவு வீட்டிலேயே கௌதம் உயிரை மாய்த்துக்கொண்டார். சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு தலைமைமருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நீட் தேர்வு அச்சம் காரணமாக சேலம் அருகே மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், “ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா?” என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கவுதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு! ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா?

அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே – திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என இந்த டம்மி அப்பாவும், அவர் மகனும் கூறிய அத்தனையும் பொய்! பொய்! பொய்! ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும், ED ரெய்டுக்கு பயந்து “தம்பி”யை தப்பிக்க வைக்கவுமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.(#யார்_அந்த_தம்பி?)

இவர்களா நீட் ரத்து செய்யப்போகிறார்கள்? அத்தனையும் நாடகம்! திமுகவின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்! ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் தான் உலகமே. அவர்களை விட்டுச் செல்ல ஒருபோதும் நினைக்காதீர்கள்.

இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்துள்ளன. அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள். NEVER EVER GIVE UP! தம்பி கவுதமின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டாலின் அவர்களே – வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோஷூட்டை நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்!” என வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவது அதிகரித்துள்ளது. பல பாலியல் தொல்லை சம்பவங்களில், முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்படுவதில்லை. குறிப்பாக, திமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச்சம்பவங்களில், பேச்சுவார்த்தை மூலம் சரி கட்டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் இத்தகைய சர்வாதிகாரப் போக்கிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2026-ல் அதிமுக அரசு பதவியேற்றவுடன், அண்ணா பல்கலைக் கழக நிகழ்வில், ‘யார் அந்த சார்’ – குற்றத்தில் சம்பந்தப்பட்ட பிற ‘சார்’கள் விவரம் கண்டிப்பாக வெளிக் கொண்டுவரப்பட்டு, உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும். அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, மீண்டும் முழுமையாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு நீதி வழங்கப்படும்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு உரிய நீதி கிடைத்திடவும்; பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்திடவும்; தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் திராணியற்று வேடிக்கை பார்த்து வரும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அதிமுக தஞ்சாவூர் மாநகரத்தின் சார்பில், மே.23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில், தஞ்சாவூர் புதிய தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry