
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக இளைஞர் வேலையின்மை குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். இந்தக் கட்டுரை 27 மே 2025 அன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியானது.
இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் வேலையின்மை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நிலவும் இந்த அமைதியான நெருக்கடியை தற்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை என்று முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தின் வேலையின்மை விகிதம் 5.2% ஆக இருந்தது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும். பல ஆண்டுகளாகத் தொழில் துறையிலும், புதுமையான முயற்சிகளிலும், உயர்ந்த இலக்குகளை நிர்ணயிப்பதிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வந்துள்ளது. கடின உழைப்பால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை இங்கு நிலவியது. ஆனால் இன்று அந்த நம்பிக்கை தகர்ந்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், வெறும் பொருளாதாரப் பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒரு அமைதியான அவசர நிலையாக உருவெடுத்துள்ளது.
Also Read : பெண்கள் முன்னேற்றம்: ஜெயலலிதா ஆட்சியின் தொலைநோக்கு பார்வையும், திமுக அரசின் விளம்பர அரசியலும்! EPS சாடல்!
இதனை தற்போதைய அரசு முறையாகக் கவனிக்கவும் இல்லை, திறம்படக் கையாளவும் இல்லை. புள்ளிவிவரங்கள் இந்த பிரச்சினையின் ஒரு பகுதியை மட்டுமே காட்டுகின்றன. குறைவான ஊதியத்தில் வேலை பார்ப்பது, மறைமுக வேலையின்மை மற்றும் திறமையான இளைஞர்கள் வேலை தேடிப் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வது ஆகியவை, வேலைவாய்ப்பு இல்லாத சூழல் அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கின்றன. இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.
ஆளுங்கட்சி நடத்திய வேலை வாய்ப்பு முகாம்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு (GIM) மூலம் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் மற்றும் 14.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உறுதி அளிக்கப்பட்டதாக திமுக அரசு பெருமையாகக் கூறுகிறது. ஆனால், ஏப்ரல் 2024 வரை, வெறும் ரூ. 13,000 கோடி மட்டுமே முதலீடாக வந்துள்ளது.
உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை வெறும் 46,000 மட்டுமே – இது வாக்குறுதி அளிக்கப்பட்ட எண்ணிக்கையில் 3%க்கும் குறைவு. இந்த வேலைகள் பெரும்பாலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (MSMEs) உள்ளன. இவற்றில் வேலை பாதுகாப்பு, வளர்ச்சி வாய்ப்புகள் அல்லது போதுமான ஊதியம் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
இன்று, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே ஒரு ஆபத்தான இடைவெளி நிலவுகிறது. வேலையின்மை விகிதம் மட்டும் இங்கு பிரச்சினையல்ல. அரசாங்கத்தின் திட்டங்கள் நம்பகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்ற பொதுமக்களின் நம்பிக்கை சரிந்து வருவதும் ஒரு பெரிய சோகம்.
அதிமுக ஆட்சியில் வேலைவாய்ப்பு உருவாக்கம்
முன்னதாக நிலைமை இப்படி இருக்கவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆட்சியில் வேலை வாய்ப்பு உருவாக்கம் என்பது ஒருபோதும் பின்னுக்குத் தள்ளப்பட்டதில்லை. வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் இளைஞர்களுக்கு எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களை வழங்குவது ஆகியவற்றில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.
எங்கள் தலைவர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில் (2011-2016), தொழில் வளர்ச்சியை வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் மையமாக வைத்திருந்தார். அவரது தொலைநோக்கு தலைமையின் கீழ் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 2.42 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதில் 65% க்கும் அதிகமான முதலீடுகள் செயல்படுத்தப்பட்டு, 2.5 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு உலகளாவிய உற்பத்தி மையமாக, நம்பகமான இடமாக உருவெடுத்தது.
2017 ஆம் ஆண்டு ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியபோது, தமிழ்நாடு ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இணைந்தது நமக்கு பெருமை அளிக்கிறது. 2019 ஆம் ஆண்டில் இது மேலும் விரிவடைந்தது. இதன் மூலம் உயர்நிலை மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது.
ஃபாக்ஸ்கான், டெல் மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்கள் இங்கு பெரிய அளவில் தொழிற்சாலைகளை நிறுவின, இதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புற பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். அக்காலத்தில் வேலைவாய்ப்பு என்பது வெறும் பொருளாதார புள்ளிவிவரமாக இல்லாமல், சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக இருந்தது.
மின் வாகனத் துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள்
2017 முதல் 2021 வரை நான் முதலமைச்சராக இருந்தபோதும் இந்த தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்தேன். செப்டம்பர் 2019இல், தமிழ்நாடு மின் வாகனக் கொள்கையை வெளியிட்டோம். இதன் மூலம் ரூ. 50,000 கோடி முதலீடுகளையும், 1.5 லட்சம் வேலை வாய்ப்புகளையும் இலக்காக நிர்ணயித்தோம். டிசம்பர் 2019 இல், Ather Energy நிறுவனம் ஓசூரில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரி உற்பத்தி ஆலையை நிறுவ முடிவு செய்தது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பாகும். இந்த முயற்சி ஓசூரை ஒரு மின் வாகன உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய படியாக அமைந்தது.
டிசம்பர் 2020 இல், ஓசூரில் ரூ. 2,400 கோடி மதிப்பில் மின்சார இரு சக்கர வாகன தொழிற்சாலையை நிறுவ Ola Electric நிறுவனத்துடன் எங்கள் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் மூலம் 2,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த மாதிரியான திட்டமிட்ட முதலீடுகள், தமிழ்நாடு இந்தியாவின் மின்சார வாகனத் துறையில் ஒரு தலைவனாக உருவெடுப்பதற்கு அடித்தளம் அமைத்தன.
Also Read : ‘பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்’? – உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
மாவட்டங்கள் முழுவதும் வேலை வாய்ப்புகள் பரவலாகக் கிடைக்க உள்கட்டமைப்பு வளர்ச்சியில் நாங்கள் அதிக கவனம் செலுத்தினோம். முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மட்டும் 1.1 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. எங்கள் ‘அம்மா திறன் பயிற்சி மையங்கள்’, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், தளவாடங்கள் மற்றும் சில்லறை வணிகம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் 1.9 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கின.
கிராமப்புறங்களுக்கு இலக்கு சார்ந்த நடவடிக்கை தேவை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். அதனால்தான் உலக வங்கி உதவியுடன் Tamil Nadu Rural Transformation Project திட்டத்தை விரிவுபடுத்தினோம். இதன் விளைவாக வேளாண்மை சார்ந்த தொழில்கள் மற்றும் கிராமப்புற சேவைகளில் 26,000 சிறு தொழில்கள் தொடங்கப்பட்டு, 80,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
எங்கள் வேலை வாய்ப்பு உருவாக்கும் உத்தி எப்போதும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்பவும், திட்டமிட்டதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருந்தது. தற்போதைய அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒப்பிட்டுப் பாருங்கள். இது விளம்பர வெளிச்சத்தை உருவாக்கியிருக்கலாம், ஆனால் இதில் வெளிப்படைத்தன்மை, துறை சார்ந்த பொறுப்புணர்வு மற்றும் தெளிவான செயல் திட்டம் இல்லை.
தற்போதைய அரசின் செயல்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள்
பெரும்பாலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் காலக்கெடு, வேலை வாய்ப்புப் பகிர்வு அல்லது தொடர் தணிக்கை பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை. திமுகவின் 2021 தேர்தல் வாக்குறுதியில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், எத்தனை வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன, எங்கு உருவாக்கப்பட்டன, யார் பயனடைந்தார்கள் என்பது குறித்த எந்தவொரு சுயாதீன தணிக்கை அறிக்கையும் இல்லை.
டாஸ்மாக், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகம் போன்ற அரசு நிறுவனங்களில் பணியாளர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு வேலைக்கான ஆட்சேர்ப்புக்கள் முடங்கிப் போயுள்ளதால், ஆயிரக்கணக்கான இளம் பட்டதாரிகள் நம்பிக்கையிழந்துள்ளனர். இந்த தோல்வி ஆழமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடு செல்லும் திறன் வாய்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 35% அதிகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது. நமது இளைஞர்கள் ஆர்வத்தின் காரணமாக வெளியேறவில்லை, மாறாக விரக்தியின் காரணமாக செல்கிறார்கள். ஒரு காலத்தில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க கனவு கண்ட குடும்பங்கள் இன்று வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பணத்தை நம்பி வாழ்கின்றன.
எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தீர்வுகள்
நாம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். நமது மக்கள் முன் உள்ள கேள்வி தனிப்பட்டதும் அவசரமானதும் ஆகும். நமது குழந்தைகள் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறாமல் நிலையான, அர்த்தமுள்ள வேலைகளைப் பெற முடியுமா?
அதனால் தான் நாங்கள் மாவட்ட அளவில், காலாண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்யும் வேலை வாய்ப்பு உருவாக்கும் பணிக்குழுவை முன்மொழிகிறோம். முடங்கிப் போயுள்ள சிப்காட் தொழிற்பேட்டைகள், தொழில் வழித்தடங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பூங்காக்களை தெளிவான, காலக்கெடு வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் புதுப்பிக்க நாங்கள் விரும்புகிறோம்.
எங்களது திறன் மேம்பாட்டு பயிற்சி உத்தி, மின்சார வாகனங்கள், செமிகண்டக்டர்கள் மற்றும் Green Logistics போன்ற வளர்ந்து வரும் துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப இருக்கும். வேலைவாய்ப்புகள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல என்பதை நாங்கள் அறிவோம் – அவை கண்ணியம், ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. தமிழ்நாட்டின் இளைஞர்கள் இனி காத்திருக்காமல், புலம்பெயராமல் அல்லது விரக்தியடையாமல், தங்கள் சொந்த மண்ணில் வேலை செய்து, உருவாக்கி, செழிக்கும் ஒரு எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்புவது கட்டாயமாகும்.
தமிழாக்கம் : அம்மா கோபி, மூத்த ஊடகவியலாளர், அஇஅதிமுக ஐ.டி.விங். நிர்வாகி.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry