
இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.
இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும், ஏழாம்பார்வை தனுசு ராசியிலும், ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது.
இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது. இதனை கணித்தவர் ஜோதிட முனைவர் கே.பி. வித்யாதரன். Part – 1, 2ல் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கான குருபெயர்ச்சி பலன்களை பார்த்துவிட்ட நிலையில், அடுத்த மூன்று ராசிகளுக்கான பலன்களை தெரிந்துகொள்வோம்.
Also Read : Guru Peyarchi 2025: மேஷம் முதல் மிதுனம் வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 1
Also Read : Guru Peyarchi 2025: கடகம் முதல் கன்னி வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 2
துலாம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025
நுண்ணறிவும், பேச்சு சாதுர்யமும் கொண்ட நீங்கள், நாடி வருவோருக்கு இயன்ற உதவிகளைச் செய்வதில் வல்லவர்கள். உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) மே 14 முதல், 9-ம் இடத்தில் அமர்ந்து குருபகவான் பலன் தரப்போகிறார். இதுவரை பல விஷயங்களில் இருந்து ஒதுங்கியிருந்தவர்கள், இனி வெளிச்சத்துக்கு வருவார்கள். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.
குடும்பத்தில் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பணவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இதுவரை வாடகை வீட்டில் இருப்போர், சொந்த வீட்டில் குடியேறும் வாய்ப்பு உண்டாகும். மகனுக்குத் தள்ளிப் போய்க் கொண்டிருந்த திருமணம், இப்போது கூடி வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.
குரு பகவானின் பார்வை பலன்கள்: ராசியை குரு பார்ப்பதால், சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். ஆரோக்கியம் மிகச் சிறப்பாக அமையும். தோற்றப் பொலிவு கூடும். தயக்கம் தடுமாற்றம் எல்லாம் நீங்கும். கையில் பணம் புரளும். வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். 3-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், சொத்துச் சேர்க்கை உண்டு. எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. பலருக்கும் நகை, ஆபரணங்கள் சேரும். செய்தொழிலில் இருந்து வந்த கடின நிலைகள் மாறும்.
5-ம் இடத்தை குரு பார்வையிடுவதால், வெகு காலமாக பிள்ளைப் பாக்கியத்துக்காகக் காத்திருந்த அன்பர்களுக்கு, பிள்ளைப் பேறு கிடைக்கும். பிள்ளைகளால் ஆதாயம், பெருமை வந்து சேரும். வட்டிக்கு வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். வாகன வசதி பெருகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களுடைய தன, சப்தமாதிபதியான செவ்வாய் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் பயணிப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். விவாதங்கள் குறையும். வழக்குகள் சாதகமாகும். புது நகைகள் வாங்குவீர்கள். பிள்ளைகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.
ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் பயணிப்பதால் பூர்வீக சொத்து விவகாரம் சாதகமாக முடியும். பிள்ளைகளுக்கு வெளிநாட்டு அல்லது வெளி மாநிலங்களில் வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரும்.
உங்களுடைய தைரிய ஸ்தானத்துக்கும், ரோக ஸ்தானத்துக்கும் உரிய குரு பகவான் அவருடைய நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 01.6.26 வரை பயணிப்பதால் ரொம்ப நாளாக இழுபறியாக இருந்து வந்த நீதிமன்ற வழக்கு, சாதகமாக முடியும். பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். கால் வலி, கழுத்து வலி விலகும். ஆரோக்கியம் கூடும். எல்லாவற்றிலும் வெற்றி உண்டு.
குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். பிள்ளைகளின் போக்கில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.
வியாபாரத்தில், பெரிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களைத் திகைக்கச் செய்வீர்கள். அனுபவசாலிகளைப் பணியில் அமர்த்துவீர்கள். எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களுடனான கருத்து மோதல்கள் நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.
உத்தியோகத்தில், பதவி உயர்வு தேடி வரும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். மேலதிகாரி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் தருவார். யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கணினித் துறையினருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்குப் புது சலுகைகள் கிடைக்கும். நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள். கலைஞர்களுக்கு பெரிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். அரசு சார்பில் விருதுகள் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி எல்லா வகையிலும் வெற்றியையும், மகிழ்ச்சியையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்: புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசலில் அருள்பாலிக்கும் விருத்தபுரீஸ்வரர், பெரியநாயகி அம்மன், தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் வணங்கிவிட்டு வாருங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். எல்லாவகையிலும் முன்னேற்றமுண்டு.
விருச்சிகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025
எவ்வித பேதமும் இல்லாமல் எல்லோரையும் சமமாக பாவிக்கும் நீங்கள், பழி பாவத்துக்கு அஞ்சி நேர்பாதையில் செல்பவர்கள். உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) மே 14 முதல் 8-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் குருபகவான். ராஜதந்திரத்துடன் செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் யோசித்து தீர்வு காண்பீர்கள். இனம் காண இயலாதபடி இருந்து வந்த தடைகள் நீங்கும். பிரபல யோகாதிபதி எட்டில் சென்றும் மறைவதால், எல்லா விஷயங்களிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏலச்சீட்டு, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற விஷயங்களில் கவனமாக இருங்கள். அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.
திடீர் பயணங்கள் இருக்கும். அதேபோல், வீண் பழிகள், அவச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால், பேச்சிலும் செயலிலும் நிதானம் அவசியம். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். கணவன் – மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தம்பதிகள் பிரச்சினைக்குள் மூன்றாம் நபர் தலை யீட்டை அனுமதிக்க வேண்டாம். பழைய பகையை நினைத்துக் கொண்டு உறவினர்களிடம் பேசாமல் இருக்க வேண்டாம். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குல தெய்வம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது நன்மை தரும்.
குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு பகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. குடும்பத்தாரின் பூரண ஒத்துழைப்பு, உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அதே அளவு விமர்சனங்களும் வரும். எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும். உறவுகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி நல்லது நடக்கும். அத்தியாவசியப் பொருள்களை வாங்குவீர்கள். குரு பகவான் 4-ம் இடத்தைப் பார்ப்பதால், வீடு பராமரிப்புப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள்.
பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிதாக பெரிய மனை வாங்குவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். தாய் வழிச் சொத்து கைக்கு வரும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். குருபகவான் 12-ம் இடத்தைப் பார்ப்பதால், மறைமுகப் பணவரவு, திடீர்ப் பயணங்கள் கூடி வரும். அதன்மூலம் ஆதாயமும் உண்டு. அரசு, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் கூடாது.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களுடைய ராசிநாதனும், ஆறாம் இடத்துக்கு அதிபதியுமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் பயணிப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் வெற்றியடையும். ஆனால் மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். வெளிப்படையாக சில கருத்துகளைத் தெரிவிக்காமல் பொறுமையாக இருப்பது நல்லது.
மன இறுக்கம், தூக்கமின்மை விலகும். ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் பயணிப்பதால் தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வீட்டில் அடுத்தடுத்து சுபச் செலவுகள் வந்து போகும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
உங்களுடைய தன, பூர்வ புண்ணியாதிபதியான குரு பகவானின் நட்சத்திரத்தில் 13.8.25 முதல் 01.6.26 வரை குரு பகவான் பயணிப்பதால் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். பிள்ளைகளுக்கு வேலை கிடைக் கும். அவர்களின் திருமணமும் சிறப்பாக நடக்கும். புகழ், கௌரவம் உயரும். குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் எதிலும் வெற்றியுண்டு. வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் பிரபலங்களின் நட்பு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும்.
வியாபாரத்தில் பற்று, வரவு உயரும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசுக்கு செலுத்த வேண்டியவற்றை முறையே செலுத்தி விடுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும்.
உத்தியோகத்தில், உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமா வீர்கள். எனினும் அவரிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. கணினித்துறையினருக்கு சலுகைகள் கிடைக்கும். கலைஞர்கள் உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள். இந்த குரு பெயர்ச்சி நிதானத்துடன் இலக்கை எட்ட வைப்பதாக அமையும்.
பரிகாரம்: உத்திரமேரூர் – காஞ்சிபுரம் செல்லும் வழியில் திருப்புலிவனத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிம்ம தட்சிணாமூர்த்தி, வியாக்ரபுரீஸ்வரர் உடனுறை அமிர்தகுசலாம்பாளை வியாழக்கிழமைகளில் வணங்குங்கள். காது கேளாதோருக்கு உதவுங்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025
விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பும் நீங்கள், யார் தயவிலும் இருக்காமல், சொந்த காலில் நிற்கும் தன்மானச் சிங்கங்கள். உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) மே 14 முதல் 7-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். இதுவரை உங்கள் ராசி நாதனே 6-ம் இடத்தில் மறைந்து இருந்தார். ஆகவே, உங்களுக்கு நீங்களே எதிராக மாறும் அளவுக்குச் சூழல் இருந்தது. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். உங்களின் அறிவுரையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். தடைபட்டிருந்த சுபகாரியங்கள் இனி நல்லபடியாக நடக்கும்.
பழைய பகையை மனதில் கொள்ளாமல், உறவினர்களுடன் அன்பாகப் பழகவும். பகைக்கு யார் காரணம் என்று ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஏழாம் இடத்தில் குரு வந்து அமர்வதால், உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். கணவன் – மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். மனம் திறந்து பேசுவீர்கள். வங்கிக் கடனுதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீரும்.
குரு பகவானின் பார்வை பலன்கள்: ராசியை குருபகவான் பார்ப்பதால் அழகு, இளமை கூடும். எதிலும் துல்லியமாக திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள், சஞ்சலங்கள் அனைத்தும் விலகி, புது உற்சாகம் பிறக்கும். உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். கவுரவப் பதவிகள் தேடிவரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதிதாக குளம் வெட்டுவது, கிணறு அமைப்பது என்று பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கோயில் குடமுழுக்கு, ஊர் திருவிழா என்று உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். ஏமாற்றங்கள், தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள்.
உங்களால் பயன் அடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவ முன்வருவார்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். வீண் பழிகள் விலகும். உங்கள் ராசிக்கு 11-ம் இடமாகிய லாபஸ்தானம் குருவின் பார்வையைப் பெறுவதால் விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மார்க்கெட் மூலம் பணவரவு உண்டாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களுடைய ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியும், விரயாதிபதியுமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குருபகவான் பயணம் செய்வதால் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டு. மகளுக்கு திருமணம் கூடி வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பூர்வீகத்தில் சொத்து வாங்குவீர்கள். புது வீடு கட்டுவீர்கள். எல்லாவற்றிலும் வெற்றி உண்டு. ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குருபகவான் பயணிப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள். எல்லா வகையிலும் வெற்றி உண்டு. எதிர்ப்புகள் எல்லாம் விலகும். வழக்குகள் சாதகமாகும்.
உங்களுடைய ராசிநாதனும், சுகாதிபதியுமான குரு பகவான் தன்னுடைய நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 01.6.26 வரை பயணிப்பதால் வருமானம் உயரும். விஐபிகள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். வீடு, புது வாகனம் வாங்குவீர்கள். குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் செலவு வரும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் பயணங்களின்போது கவனம் தேவை. தாய், மனைவி உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தந்தைவழி உறவினர்களால் மனஸ்தாபங்கள் ஏற்படும்.
வியாபாரத்தில் புதுப்பாய்ச்சல் காட்டுவீர்கள். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். வருடப் பிற்பகுதியில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்சினைகள் ஓயும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ளும்போது எச்சரிக்கையாக இருக்கவும். புதிய யுக்திகளைக் கையாண்டு, பழைய வாடிக்கையாளர்களையும் மீண்டும் வரவழைப்பீர்கள். பழைய பங்குதாரர்களின் ஆலோசனைகளையும் கேட்டு நடக்கவும். அதிகமாக மக்கள் கூடும் இடத்துக்கு கடையை மாற்ற திட்டமிடுவீர்கள். கடையை நவீனப்படுத்துவதால், சிற்சில நன்மைகள் உண்டு.
உத்தியோகத்தில், பணிச்சுமை சற்று குறையும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவுக்கு, அவருடன் நெருக்கமாவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்களைப் பற்றி தலைமை இடத்தில் புகார் கூற வேண்டாம். அலுவலகத்தில் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. கணினித் துறையினர் இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள். உங்கள் புராஜெக்ட் தலைவரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். தேவையில்லாமல் அவரை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கலைஞர்களே! நல்லதொரு நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். நடிகர்கள், சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கவும். இசைத் துறையைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டு ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபடலாம். உங்கள் கல்வி நிலையை உயர்த்திக் கொள்வது நல்லது. இந்த குரு பெயர்ச்சி புது சிந்தனைகளையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி தருவதாக அமையும்.
பரிகாரம்: ஆலங்குடி திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி பகவானை வியாழக்கிழமைகளில் சென்று 24 தீபங்கள் ஏற்றி வணங்குங்கள். ஆபத்சகாயேஸ்வரரையும், ஏலவார் குழலி அம்பாளையும் வழிபடவும். துப்புரவு தொழிலாளர்களுக்கு ஏதேனும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். தடைகள் உடைபடும்.
Disclaimer : ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘வேல்ஸ் மீடியா’வின் கருத்துகள் அல்ல.
Courtersy : Indhu Thamizh Thisai.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry